கரையைத் தேடும் ஜீலம்.... (திரைப்பாடல் மொழிபெயர்ப்பு)


ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

எத்தனை யுகங்கள்
இன்னும்
ரணங்களை பொறுப்பது....
விடை தெரிந்தவர் யார்???
இன்னும்
எத்தனை தூரங்கள்
விடியா இருளின்
விரல் பிடித்து நடப்பது/??
விடை தெரிந்தவர் யார்???

இரத்தம்... இரத்தம்....
யுகங்களின் இரத்தம்
வழிந்தோடுகின்றது...
வழிந்தோடுகின்றது...
இரத்தம்...
அழித்துவிடும் அனலாய்...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...
==================
திரைப்படம் - ஹைதர் (2014) | ஹிந்தி
பாடல் - ஜேலம்.. ஜேலம்
பாடல் வரிகள் - குல்ஸார்

எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்

சங்கீதம் 3
============
எனது சொற்கள்
மண்ணின் சொற்களாய் இருந்த நாளில்
நான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
சினத்தின் சொற்களாய் இருந்த நாளில்
நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்
நான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
தேனாய் மாறியபோதோ
ஈக்கள்
என் இதழ்களை மூடின.

| மஹ்மூத் தர்வீஷ்
| பலஸ்தீனக் கவிதைகள்
| அடையாளம் பதிப்பகம்

கடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை

ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறுவர் இதழான ‘இளம்பிறை’ மாத இதழில் என்னுடைய சிறுவர் கதை ஒன்று அச்சேறியுள்ளது. இரு பாகமாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை இனியும் தொடராக வெளி வரும். இன் ஷா அல்லாஹ். சில திருத்தங்கள் அச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. சில அச்சுப்பிழைகளும் உள்ளன. அடுத்த முறை இன்னும் அதிகமாக கவனத்துடன் பதியப்படும். முழு கதையும் கீழே தரப்பட்டுள்ளது.




==  கடலில் மிதந்து வந்த கடன் ==


ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153

பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...





இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின்  மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.

அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல்.


பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.

உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்...  பிலால்!”//

இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், 
தமிழில் அல் ஸூமத், 
வெளியீடு மெல்லினம்.

.