பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...

Sunday, September 27, 2015 Anisha Yunus 0 Comments





இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின்  மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.

அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல்.


பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.

உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்...  பிலால்!”//

இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், 
தமிழில் அல் ஸூமத், 
வெளியீடு மெல்லினம்.

.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...