கரையைத் தேடும் ஜீலம்.... (திரைப்பாடல் மொழிபெயர்ப்பு)

Thursday, December 24, 2015 Anisha Yunus 0 Comments


ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...

எத்தனை யுகங்கள்
இன்னும்
ரணங்களை பொறுப்பது....
விடை தெரிந்தவர் யார்???
இன்னும்
எத்தனை தூரங்கள்
விடியா இருளின்
விரல் பிடித்து நடப்பது/??
விடை தெரிந்தவர் யார்???

இரத்தம்... இரத்தம்....
யுகங்களின் இரத்தம்
வழிந்தோடுகின்றது...
வழிந்தோடுகின்றது...
இரத்தம்...
அழித்துவிடும் அனலாய்...

வெம்மை தணிந்தது
எவர் கண்களில்...
அமிழ்ந்தது உக்கிரம்
எவர் கண்களில்...
ஓ ஜீலம்... உவர்க்கின்றாயே...

ஜீலம்.... ஜீலம்....
கரை ஒன்றைத் தேடு...
ஜீலம்.... ஜீலம்....
அபயம் ஒன்றைத் தேடு...
==================
திரைப்படம் - ஹைதர் (2014) | ஹிந்தி
பாடல் - ஜேலம்.. ஜேலம்
பாடல் வரிகள் - குல்ஸார்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்

Thursday, October 15, 2015 Anisha Yunus 0 Comments

சங்கீதம் 3
============
எனது சொற்கள்
மண்ணின் சொற்களாய் இருந்த நாளில்
நான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
சினத்தின் சொற்களாய் இருந்த நாளில்
நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்
நான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
தேனாய் மாறியபோதோ
ஈக்கள்
என் இதழ்களை மூடின.

| மஹ்மூத் தர்வீஷ்
| பலஸ்தீனக் கவிதைகள்
| அடையாளம் பதிப்பகம்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

கடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை

Sunday, September 27, 2015 Anisha Yunus 4 Comments

ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறுவர் இதழான ‘இளம்பிறை’ மாத இதழில் என்னுடைய சிறுவர் கதை ஒன்று அச்சேறியுள்ளது. இரு பாகமாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை இனியும் தொடராக வெளி வரும். இன் ஷா அல்லாஹ். சில திருத்தங்கள் அச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. சில அச்சுப்பிழைகளும் உள்ளன. அடுத்த முறை இன்னும் அதிகமாக கவனத்துடன் பதியப்படும். முழு கதையும் கீழே தரப்பட்டுள்ளது.




==  கடலில் மிதந்து வந்த கடன் ==


ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...

Sunday, September 27, 2015 Anisha Yunus 0 Comments





இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின்  மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.

அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல்.


பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.

உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்...  பிலால்!”//

இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், 
தமிழில் அல் ஸூமத், 
வெளியீடு மெல்லினம்.

.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①

Tuesday, September 22, 2015 Anisha Yunus 1 Comments



இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் படிக்க ஆரம்பிக்கும்போது, 2004 இல் வெளியிடப்பட்டு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்ட ஒரு பிரச்சினையின் வேரின் மேல் மீண்டும் கால் பதித்து விட்டேனோ என்றே பட்டது. மேற்கொண்டு வாசிக்கும்போது ஊகம், ஊர்ஜிதமாகி விட்டது.
 = = =
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்தான் சகோதரி சல்மாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் வாங்கிய இந்நூல் இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளும் ஒரு முரணை, ஒரு தூரத்தை, ஒரு கானல் நீர் விம்பத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கிறேன். ஏன் இப்படி?? ஒரு வேளை முதலிலேயே இந்த நூலை வாசித்து விட்டு பின்னர் கவிதைத் தொகுதியை வாசித்திருந்தால் வேறு பார்வை கிட்டியிருக்குமோ என்னவோ. எனினும் எல்லாவிடத்திலும் கருத்துக்களை கருத்துக்களாகவே அணுக விரும்புகின்றேன்.

இந்தப் பகுதியில் மதிப்புரையைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். மதிப்புரை தந்திருப்பவர் திரு.ரவிக்குமார். சில காலத்திற்கு முன் பேராசிரியர் அ.மார்க்ஸுடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழை நடத்திக்கொண்டிருந்தவர். தற்போது ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.
= = =

பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், அதிலுள்ள குடும்ப அமைப்பின் மீதும், அதன் பெண்களின் மீதும் ஒரு கசங்கிய பார்வைதான் வெளியுலகிற்கு இருக்கின்றது. குஜராத் சம்பவத்தில் ஒரு டாகுமெண்டரியில் ஒரு நரவெறி மிருகம் சொல்லும்... உரித்த மாம்பழங்களைப் போல எங்களுக்கு முஸ்லிம் பெண்கள் கிடைத்தார்கள், நாங்கள் வெறியுடன் பசியாற்றினோம் என. நிதர்சனத்தில் பெண்கள் மீதும், அதிலும் இஸ்லாமியப் பெண்களின் மீது ஆண்களின் பார்வையில் தேடலும், தகிக்கும் தவிப்பும்தான் இருக்கின்றது என்பதுவே உண்மை.

யானையைக் கண்ட குருடர்கள் போல, ஒரு பொரி கிடைத்ததும் அது உண்மையா, நிஜம்தானா என்பதைக் கூட அறிந்து தெளியாமல் குருடர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று அதுதான் யானை என வாதாடினால்??? அதுபோல்தான் இருக்கின்றது, நாவலும் அதன் முன்னுரையும்.  ஒவ்வொரு விமர்சனம் எழுதும் முன்னரும், அதன் ஆசிரியரைப் பற்றி, அவர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி, அதற்கு மதிப்புரை / அணிந்துரை / முன்னுரை எழுதியுள்ள பெருமக்களைப் பற்றி, இன்னும் பலதரப்பட்ட பார்வைகளையும் வாசித்து உள்வாங்கி, அதன் பின்னரே என் பார்வையை பாரபட்சமில்லாமல் வைக்க வேண்டும் என எண்ணும் ஒரு சாமான்ய மனிதனுக்கிருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையா சார்???? குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகின்றது. அவர்களுக்கு வெறுப்பு, உங்கள் மீதல்ல, உங்களின் மார்க்கத்தின் மீது என்று. சத்தியமான வார்த்தைகள். 

ஒரு சமூகம் பற்றிய தனது அறியாமையை, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை மேடையிட்டுப் பறை சாற்ற திரு. ரவிக்குமாருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் போன்றிருக்கின்றது. பெண்களின் உடல் பற்றிய எண்ணங்களே புதிராகவும், காணும் பொருள் யாவும் அதனையொட்டிய கனவாகவே வியாபித்திருக்கும் இருளடைந்த கிடங்கில் பாலியல் குறித்த பெண்களின் சம்பாஷணைகள் என்பது இன்னும் கிளர்ச்சியூட்டும் ஓர் புதிராகவே இருந்திருக்கக்கூடும். அதனைக் கண்டு, படித்து, புளகாங்கிதமடைந்து, லயித்துக்கிடக்க இந்த நூல் பலருக்கும் உதவியுள்ளது போல அவருக்கும் உதவியுள்ளது என்பது மட்டுமே புரிகின்றது. அழகிய பொய்களும், புனைவுகளும் சீராட்டத்தான் படுகின்றன.

விரும்புகிற உடலை அடைவது சுதந்திரம் எனவும், விலங்குகளின் பழக்க வழக்கத்தை ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் செய்பவரை எந்தக் கோணத்தில் ஆராய்வது. தன் சமூகத்திடமும், தன் குடும்பத்திடமும் இதையே பரப்ப அவர் தயாராக இருப்பாரோ எனக் கேள்வி எழுகின்றது. இவரின் சிந்தனைகள் என்னவென்பதையோ, எந்தப் பின்புலத்தை, அறிவுத்தளத்தைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இவரின் வாதங்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தைப் பற்றிய ஒருபக்கச்சார்பு கொண்ட ஒரு நூலுக்கு இவரின் மதிப்புரை எவ்வாறு செல்லுபடியாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது.  காதல் என்றால் காதல்தான்...அதில் மதம், ஜாதி, பணம், பக்கோடா என வித்தியாசம் ஏன் பார்க்கிறீர்கள் என்றலைந்த இயக்குநர் சேரன், தன் மகளின் விஷயத்தில் ஒரு தகப்பனாய் துடித்ததை இதே தமிழகம் மௌன சாட்சியாய்க் கண்டு நின்றதே.... அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன....  இதோ நேற்றும் கூட குஷ்பு, ஒரு தாயாய் தன் பெண் குழந்தைகளுக்கு உடைகளின் பாதுகாப்பு, அவசியம் பற்றிப் பரிந்துரைத்ததைப் படிக்கிறேன். அங்கே இலங்கையில் அமைச்சரொருவர் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் பதிவைக் கடக்கிறேன். உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்.... அப்படித்தானே...??

மதிப்புரையில் காணப்படுவதெல்லாம் ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் பார்வை மட்டுமல்ல. ஒரு சமூகத்தினை எத்தனை ஏளனம் செய்தும், அடக்குமுறை ஏவியும் அதனைத் தோற்கடிக்க முடியவில்லை என்னும் இயலாமை, அதனின் கட்டுக்கோப்பை, உள்கட்டமைப்பை, சங்கிலிப்பிணிப்பை தகர்க்க முடியவில்லையே என்னும் மறுகல்... எங்களைப் போல நீங்களும் ஒழுங்கற்ற வாழ்விற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்னும்  தொனி. நாவலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புனைவுக்கற்பனைக்கும், சமூகத்தின் போக்கு இதுதான், சமூகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையால் விளைந்தது இது, மதமே தீவிரமும் வன்முறையும் கொண்டதாயிருக்கிறது என எல்லாவிடத்திலும் ஒரே புலம்பல்.

தனிப்பட்ட புரிதல்களும், தனியொருவரின் அனுமானங்களும், தனிநபரின் கலங்கல் பார்வைகளுமே உண்மை என்றாகிவிடுமா....?? அவ்வாறெனில் வரலாறு நெடுகவும், இன்றும், வதைபடும் காஸா, சிரியாவிலிருந்தும் கூட பர்தா அணிந்த பெண்களின் சாதனைகளை வாசிக்க நேர்வது எவ்வாறு....? அவர்களெல்லாம் மதக் கோட்பாட்டை கடந்ததினால்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்களா என்ன?? அன்னை ஆயிஷா நாயகியிலிருந்து தற்கால தவக்குல் கர்மான் வரை இஸ்லாமியப் பெண்களைப் பற்றி, இஸ்லாம் அவர்களுக்குத் தரும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும், உயரிய மதிப்பையும் ஒரு முறையேனும் மதிப்புரை தந்தவரை வாசிக்க வேண்டுகின்றேன். புரைகள் அகற்றப்படின், பார்வைகள் தெளிவடைய சாத்தியமுண்டு.

முன்னுரைக்கே ஒரு பதிவா என அங்கலாய்ப்பாய் இருக்கின்றது. எனினும், முஸ்லிம் சமூகத்தை, அதன் மௌனத்தை, அதன் பொறுமையை உபயோகித்துக்கொள்ள ஆட்கள் முன்வரும்போது  மந்தைகள் உடனடியாக நிறைகின்றது என்பதே உண்மை. அதே உண்மைதான் அயான் ஹிர்ஸி அலியின் பின்னும், மலாலாவின் பின்னும், இன்னும் எல்லா அழகிய சட்டைகளின் பின்னும். ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டாரு. அம்புட்டுதேன்.

நாவல் பற்றி, அடுத்த பதிவில்... இன் ஷா அல்லாஹ்.

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்

Monday, September 21, 2015 Anisha Yunus 0 Comments


அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது.

எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.

பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும்  எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை,  மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது.

நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.

இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.

1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.

2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.

3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!

யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.

[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]

ஆசிரியர் பற்றிய குறிப்பு -- டேனியல்.செல்வராஜ்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இன்று பாரதியின் நினைவு நாள்.

Friday, September 11, 2015 Anisha Yunus 2 Comments


பாரதியின் கவிதைகளைப் படித்துப் பரவசமடைந்து, புரட்சிக்கனவுகளிலும், தேசப்பற்றுத்தீயிலும் சுயமாய் வார்த்தெடுத்துக்கொண்டிருந்தது ஒரு காலம்.
‘காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” 
என்று உச்சரிக்கும்போது உடுமலையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். பாரதியார் எங்கள் ஊரைப் பற்றித்தான் பாடியிருக்கிறார் போல என எல்லாக் கானங்களுக்கும் களமாகக் காட்சியளித்த காலம் அது.
”தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்றால் - அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்...”  
என்று நானும் என் சிநேகிதிகளும் கிட்டத்தட்ட பைபிள் போல தினமும் வாசிப்போம், சுவாசிப்போம், ஆகர்ஷிப்போம்.... சைக்கிள் பயணங்களிலும், நாவல் பழ மரத்தடியிலும், மழைக்காலத்தில் அனைவரையும் முடங்கச் சொல்லும் ஆடிட்டோரியத்தில் குழுவாக அரட்டையடிக்கும்போதும் என எல்லாக் காலங்களிலும் பாரதியை விட வசீகரித்த கவிஞன் இல்லை... பெரியார் பாலிடெக்னிக்கில் படிக்குபோதும், பெரியாரின் அளவிற்கு பாரதியையும் ஒவ்வொரு நிமிடமும் கொண்டாடியுள்ளோம். காளியைப் பற்றிய பாடல்களானாலும் சரி, அகண்ட பாரதக் கனவுப்பாடல்கனாலும் சரி அவனின் எழுத்தில் தொலைத்த பொழுதுகள் ஏராளம்.

காலங்கள் செல்லச் செல்ல எல்லாவற்றின் பூச்சும் சுவற்றினைப் போலவே உதிர்ந்து வீழ ஆரம்பிக்கின்றது. அதே போல்தான் காந்தியுடையதும், பாரதியுடையதும் என்னில் வீழ்ந்தன. இளம்பிராயத்தில் வாசித்த பாரதியின் கவிதைகளில் தீ பெருகியது. சூடான சுவாசமாய் இருந்தது. பின்னர் பாரதியினைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது, என்னில் இருந்த பாரதி உண்மையிலேயே யானை மிதித்தே செத்துப் போயிருக்கலாமே என்று நினைத்துக்கொண்ட காலமும் வந்தது. வறுமையும், கையறு நிலைச் சூழலும், தன் வயிற்றை போலவே தன்னைச் சுற்றியிருக்கும் வயிற்றுக்களின் அவல நிலையும் எத்தனை பெரிய இரும்பு மனிதனையும் ஆட்டுவித்துவிடும் என்பதற்கு பாரதி ஒரு பாரிய உதாரணம் எனக்கு.

இன்றைய தமிழ் தி-இந்துவில் பாரதியின் இன்னொரு முகத்தை ரசிக்க முடிந்தது. ஒரு திராவிடனின் மனநிலையில், தன்னை விட செல்வந்தனின் போலி வாழ்வை, போலி கௌரவத்தை, சோம்பேறிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு எளியவனாய் முழுமையான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையின் ஓரிரு பக்கங்களை பிரசுரித்திருக்கிறார்கள். பாரதியும் ‘உள்குத்து’ கதைகள் எழுதுவாரா என இக்காலத்திய நாம் கேட்கலாம். பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும், உரிமைக்காகவும், சமநீதிக்காகவும் ஓங்கி ஓங்காரமிட்ட பாரதியாய் இராமல், அடுத்த வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்த்த வீட்டுக்கவுண்டரை கிண்டல் செய்யும் ரசனையான மிடில்க்ளாஸ் மனிதனாய் நமக்கு அறிமுகமாகிறார். நிச்சயம் வாசிக்க வேண்டும் இந்தப் புத்தகத்தையும், மீண்டும் அவனின் பாடல்களையும்.

இயன்றவரை போலியாய் வாழாமல், இறக்கும்போது இயலாமையில் இதயம் செத்து வாழ்ந்த உன்னை எண்ணிப் பெருமிதம் நான் கொள்கிறேன் பாரதி. வேஷங்களற்ற மனிதனாய் வாழ திடங்கொண்டதினால்தான் உன் இறுதியை நீ முடிவெடுக்க முடிந்தது.

வாழ்க நீ!
.
.
‪#‎மகாகவி‬ ‪#‎பாரதியார்‬ ‪#‎சுப்ரமணி_பாரதி‬

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

கொடுமையிலும் கொடுமை...

Thursday, September 10, 2015 Anisha Yunus 0 Comments

Indian Express News Link -- http://www.newindianexpress.com/cities/chennai/A-Peek-Into-the-Houses-of-Horror/2015/09/10/article3019230.ece#

===================================================
 காலையில் ஒரு முறை வாசித்து முடித்ததில் இருந்து மீண்டும் மீண்டும் அந்தப் பேப்பரை திருப்பி வாசிக்கின்றேன்... சரியாகத்தான் படித்திருக்கிறேனா என.... இன்னும் கசப்பு அடங்கியபாடில்லை....

யாருக்காக இந்த அரசு, ஆட்சியெல்லாம்...??
யாரின் நலனுக்காக???

• ஆதி திராவிடர்களுக்கான ஹாஸ்டல் என்பதாலேயே இந்தளவு சிறப்புக்கவனிப்பும், சலுகைகளுமா அம்மா.... ?????????

• இரவில் திறந்த வெளியில் 2 மணிக்கெல்லாம் குளிக்க வேண்டிய நிலையில் பெண் மக்கள்....

• 20 அடி ஆழக்கிணற்றில் இறங்கி குடிநீர் தேடும் அவல நிலையில் பள்ளி / கல்லூரி மாணவர்கள்....

• கழிவறையிலிருந்து வெளியேறும் நீர், தளங்களிலும் சுவர்களிலும் வாடையுடன் ஊறும் அவலம்,

• 6 மணிக்குள் ஹாஸ்டலுக்குள் இல்லாவிட்டால் இரவு உணவும் இல்லாமல் போகும் கொடுமை...

• தரப்படும் உணவும் ஊசிப்போன தரத்துடன்...

• வாரக்கணக்காய் துப்புரவு செய்யப்படாத உணவுக்கழிவுகள் கொட்டப்படும் இடம்....

அப்பப்பா... ஃபோட்டோ பார்த்ததிலிருந்து குமட்டலாகவே இருக்கின்றது....

இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையா ’அம்மாவின் உண்மையான பக்தன்களுக்கெல்லாம்’????

இதுதான் ஆளும் லட்சணமா????

இதுக்கெல்லாம் பதிலா பேக்வார்ட் க்ளாஸ்ல இருந்து படிக்க வரும் பசங்க பொண்ணுங்களை எல்லாம் நிக்க வெச்சு சுட்டுக் கொன்னுடுங்க....


‪#‎சென்னை‬ ‪#‎ஆதிதிராவிடர்நலன்‬ ‪#‎இந்தியன்எக்ஸ்பிரஸ்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்

Tuesday, September 08, 2015 Anisha Yunus 0 Comments


.
தந்தையே
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை

.
தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்
கல் எறிகின்றனர்
தூஷிக்கின்றனர்
நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்
உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்
.
தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?
என்னால் அவர்கள் எதை இழந்தனர்?
.
நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?
.
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா?
நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும்
என்முன் முழந்தாளிட்டனவே
.
.
| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
‪#‎மஹ்மூத்_‬ தர்வீஷ்
‪#‎அடையாளம்_பதிப்பகம்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

மது பருகுவதால்.... (தமிழ்நாட்டில் மட்டும்)

Tuesday, September 08, 2015 Anisha Yunus 0 Comments



 உடல் ஆரோக்கியம் கெடுபவர்கள் -- 5,80,000 நபர்கள்
விபத்துக்களை எதிர்கொள்பவர்கள் -- 3,70,000 நபர்கள்
டாஸ்மாக்கில் பணி புரிந்த மதுப்பழக்கம் உடையவர்களின் இறப்பு -- சுமார் 3500 பேர்

ஒரு ஆண்டில் மது குடிப்பதற்காக செலவு -- ரூ.44, 769 கோடி
மதுவினால் ஏற்படும் வேலை நஷ்டம் -- ரூ 20,574 கோடி
மதுவினால் ஏற்படும் மருத்துவ உதவி செலவு -- ரூ. 2,100 கோடி

மதுவை நிறுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என மூளைச்சலவை செய்யப்படும் நஷ்டம் -- ரூ. 25,000 கோடி....

2013இல் தமிழக வாகன விபத்தில் இறந்தவர்கள் -- 15,563 பேர் இறப்பு
இதில் மதுவினால் மட்டுமே இறந்தவர்கள் -- 10,895 பேர்


எது அதிகம்??
எது முக்கியம்??
அரசுக்கு எது இழுக்கு??
அரசுக்கு எது அத்தியாவசியம்??

முழுது தொடரும் கட்டாயம் வாசிக்க - hhttp://goo.gl/Kb1h6W


| நன்றி திரு டி.எல்.சஞ்சீவ்குமார்
| தி இந்து 5/9/2015

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..

Sunday, September 06, 2015 Anisha Yunus 0 Comments



முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம். இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான் சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...) க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி...!

சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத, போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.

எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது. அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும் பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும் அடங்கியுள்ளது.

முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த் தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை, இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும், தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய் வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ, கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப் பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.

தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக் காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும் துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும் உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம் என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின் சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன். நடக்கக்கூடியதா??

பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன. வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில் மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம் மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம் பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல.. அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.

முடிவாய் இரு கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்.. //இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும் காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும் உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின் தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய் இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது. புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள் இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின் வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும் அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது குறித்த ஒரு கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம் கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.

மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

பாவத்துணிகள்...

Saturday, September 05, 2015 Anisha Yunus 0 Comments


இயேசுவை அறைந்தவர்கள்..
ஏதோ ஒரு ஆணியில்
அறைந்திருக்கலாம்
என்னையும்,
அத்தனை பேரின்
பாவத்திற்காகவும்
மரித்த நீ, கொஞ்சமாய்
மரித்திருக்கலாம்
என் முட்டாள்தனங்களுக்காகவும்..
குருடரையெல்லாம்
காண வைத்தாயாம்..
முடவரை
நடக்கவைத்தாயாமே..
இதயம் இறந்தவர்களை
என்ன செய்திருப்பாய்
நீ..?
அகிலத்திற்கே
அப்பத்தை பகிர்ந்தளித்த
உனக்குமே
போர்த்தக்கிடைத்தது
அத்துணை பேரின்
பாவத்துணிகள் தான்..
பாவம் செய்தவள் மீது
கல்லெறிய
பாவமே செய்யாதவர்களை
அழைத்தாயாமே..
இன்றைக்கு
இருந்திருந்தால்
கற்களிலும்
பெருந்தொடக்கில்லாதவற்றைத்
தேடியிருப்பாய் நீ..
தேவனே..
தேவனே..
ஏன் எனைக் கை விட்டீர்
என்றா கதறுகிறாய்..
உனக்குமே தெரியவில்லை
போ....!
அற்பர்கள் மட்டுமின்றி
ஆலயங்களும்
பிசுபிசுப்பில்
மிதந்து கொண்டிருக்கிறதென..
‪#‎Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

மெஹர் - குறும்பட விமர்சனம்.

Friday, September 04, 2015 Anisha Yunus 0 Comments


நெஞ்சார்ந்த ஒரு சல்யூட்டுடன்தான் இந்த குறும்பட விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன். யாருக்கு சல்யூட்??? இயக்குநர் தாமிரா அவர்களுக்குத்தான்...

பின்னே... மொத்த படக்குழுவிலும் ஒரே ஒரு முஸ்லிமை வைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை அவலங்களை மூன்றாம் மனிதராய் நின்று சாட்டையால் விளாசியிருக்கும் இந்த வெற்றிக்கு சல்யூட்தான் தர வேண்டும் அல்லவா.... Heartfelt Salutes Sir!!

But, மிகவும் தாமதமான விமர்சனம்... மன்னிக்கவும்...

இந்தக் குறும்படத்தைப் பற்றி நிறைய பேசலாம் என்றாலுங்கூட ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், உண்மையான இஸ்லாமியராக வாழ்வதெப்படி என்பதனை முஸ்லிம்களுக்கே அடையாளம் காட்டியுள்ளார் இயக்குநர் தாமிரா. சபாஷ்!!!

படத்தின் Flowவில் நடுநடுவே உதிர்க்கப்படும் பல கரிசனங்கள், உண்மையில் தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன என்றால் கொஞ்சமும் மிகையில்லை.

//பக்கத்து வீட்டு கொமரை கரை சேர்த்தினா ஹஜ்ஜோட சவாபு கிடைக்கும்... என் வீட்டைச் சுத்தி எல்லாருமே ஹாஜியாருங்கதான்...//

//மார்க்கத்தை சரியாக் கடைபிடிக்கனும்னா எல்லாருமே சரியா இருக்கணும்...//

//பணத்தை வச்சுகிட்டே இல்லைன்னு சொல்றவந்தான் மிகப்பெரிய நடிகன்...//

//70 வயது மாப்பிள்ளைக்கு பிராயத்துப் பெண் என்பது சாதாரணம்...//

//இல்லாத வீட்டில் பெண் கொமரை படைக்காதே ..//

இந்த வசனங்கள் மூலமாக என்னதான் இஸ்லாம் எளியதொரு மார்க்கமாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் எத்தனை முரணான, எத்தனை சிக்கலான மார்க்கமாக்கி வைத்துள்ளோம் என்பதைப் பரிசீலிக்க வைத்துள்ளது...எதைப் பரவலாக்கியுள்ளோம் எதை தடுத்து வைத்துள்ளோம்.... எது முக்கியத்துவம் வாய்ந்தது... ஆனால் எதனை தாங்கிப் பிடித்துள்ளோம் என சுய பரிசோதனை செய்ய நிறைய கேள்விகளை போகும் வழியில் வீசி விட்டுச் செல்கிறாள் மெஹர்... இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன இது போன்று என்றாலும், சகோதர சமூகத்தை கரிசனத்துடன் இத்தனை அழகான விதத்தில் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் இன்னும் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கமும், பேணுதலும், சகிப்புத்தன்மை நீர்த்துப்போகவில்லை என்பதையும் வெட்டவெளிச்சமாக்குகின்றது.

வேகமாகப் பயணிக்கும்போது திடீரெனத் தோன்றும் மழை போல் ‘ஜாதி டெக்னாலஜி’ நகைச்சுவை, மிக அருமையான சுவை. செம கலக்ஸ் சார்!!

But, படத்தில் ஒரு செயற்கையான இடைச்செருகல் எனக் கருதுவது இரு இடங்களில்... ஏட்டைய்யா சின்னையா பற்றிய சுய அறிமுகத்தின் போதும், கனடா போக இருக்கும் தோழியின் வரவும்.... முழுக்க முழுக்க பூச்சு வேலை போன்றதொரு தோற்றத்தைத் தந்தது. வசனங்களும், கதாபாத்திரங்களின் நளினமும் உள்ளடக்கி. தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் அழகாக செதுக்கியிருக்கலாம். நல்லவேளை குத்துப்பாட்டோ மரத்தைச் சுற்றி ஆடுவதோ இல்லாமல் போனது, பரமதிருப்தி...!

அனைத்து கதாபாத்திரங்களினுடைய அழுத்தமான, பிசிறு தட்டாத, இயற்கையான நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்புக்களும் எனப் பலவும் மெஹருக்கு சபாஷ் சொல்வதற்கான பல காரணங்கள். எனினும், இசையில் ஸ்கோர் செய்யவேண்டிய தூரம் இன்னும் உள்ளது..

மொத்தப் படத்திலும் என்னை உறுத்திய ஒரே விஷயம், சகோதரி, எழுத்தாளர் சல்மாவின் ரோல் தான். காரணம், அவரின் முகம், உடல்மொழி, கம்பீரத் தோற்றம் என எதுவுமே வறுமையில் வாடும், கேவலத்திற்கு பயப்படும், எளிய கொள்கைகளுடன் வாழும் ஓர் குடும்பத் தலைவியின் தோற்றத்திற்கு பொருந்தவேயில்லை. அதற்கு அவர் காரணமில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. அந்த மிடுக்குப்பார்வை, அழுவதில் கூட ஒரு கம்பீரமான முகம், பொலிவான களை, தொய்வற்ற, மிடுக்கான உடல்வாகு என எதுவுமே அவரை அந்த ரோலில் பொருந்த விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வேறு யாரேனும் அதை இன்னும் பெட்டராகச் செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன். சில இடங்களில் movements, body language, reflection எல்லாம் இயந்திரத்தனமாகத் தோற்றமளித்தது, இதன் காரணத்தாலும் இருக்கலாம். நடிப்பதில் இதுதான் முதல்முறை சகோதரி சல்மாவுக்கு என்று வாசித்திருந்தேன். இன்னும் முன்னேறி, மேடை பல காண வேண்டும் சகோதரி. இன் ஷா அல்லாஹ்....!

மொத்தத்தில் மெஹர், ஒரு நிறைவைத் தந்திருக்கிறாள்... யாருடைய சமுதாயமாய் இருப்பினும், குறைகளைக் களைந்து செப்பனிட சகோதர சமூகத்திலிருந்து இன்னும் மனித மனங்கள் தயாராக உள்ளனர் என்பதை தெள்ளெனத் தெளிவுபடுத்தி இருக்கிறாள்.... சகிப்புத்தன்மையை இப்படியே வளர்க்கவும்,இன்னுமின்னும் சமூக நல்லிணக்கம் மேம்படவும், இது போன்ற ஆயிரம் மெஹர்களை எதிர்பார்க்கிறேன் இன் ஷா அல்லாஹ்.

என்னுடைய Wallஇல் ஒரு Timely Status ஆக, மெஹரிலிருந்து ஒரு டயலாக்கை சுட்டுக்கொள்கிறேன் சார்... // நாம பண்ற எல்லா தப்புமே நமக்கு பாடம் சொல்லித் தர்றதோட நிக்கிறதில்லை.... நாம் செய்யிற சில தப்புக்கள், நம்ம வாழ்க்கையையே பழி வாங்கி விட்டுட்டு போயிடும்...// மெய்!!!!!

நன்றிகளும் வாழ்த்துக்களும் மெஹர் டீம், and தாமிரா Sir.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

கிழவனும் கடலும் -- என் பார்வையில்

Thursday, September 03, 2015 Anisha Yunus 0 Comments

... எர்ன்ஸ்ட் ஹெமிங்வே உடைய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவல்.
Anisha Yunus's photo. முதல் முறை வாசித்திருக்கிறேன் ஹெமிங்வேயை... அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிகாகோவின் அருகிலுள்ள கிராமம் என்பது ஏனோ மனதுக்கு இதமளிக்கிறது. மறுக்க இயலாத வாஞ்சை இன்னும் அம்மண்ணை விட்டகல்வதே இல்லை.... க்ஹைர்... எர்னெஸ்ட் ஹெமிங்வேயைப் பற்றி அவரின் நூட்களில் எல்லாமே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகம் வாசித்துவிட்டு பகிர விரும்புகின்றேன், எளிய நடைக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே இப்போதைக்கு உணர்ந்து கொண்ட உண்மை.
இந்த நாவல், வறுமையிலும் முதுமையிலும் சிக்கியதோர் கிழவனைப் பற்றியது. மீன்பிடித்தல் என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி, ஒரு ஆணுக்கான அடையாளமாய் சுய அங்கீகாரத்துடன் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஓர் எளியவன் பற்றியது. பசி, வேதனை, இரத்தக்காயத்தின் மீதான கோபம், தனிமை, இயலாமை, வாழ்ந்து கெட்ட கணங்கள், வாழத்துடிக்கும் ஆவேசம், வயதை மீறிய துணிவு, பிரயத்தனம் என எல்லாமே உயிர்ப்புடன் எழுதப்பட்டுவிட எப்படியான அனுபவம் இருக்கக்கூடும் ஒரு ஆசிரியருக்கு... வியக்கிறேன்... மீன் பிடிக்கும் மனிதர்களின்வாழ்வைப் பற்றிய கற்பனையே அத்தனை போதுமானதா எனத் தெரியவில்லை... கற்பனைக்கும் மீறிய யதார்த்தமாகவே படுகின்றது, விவரங்களும், கள அமைப்பும், நடையும்...
அந்தக் கிழவனோடு சேர்ந்து வாசகனும் வேர்வையில் உழன்றும், இயலாமையில் சோர்வுற்றும், ஆப்பிரிக்க கடலோர சிங்கங்களின் அழகியலில் கரைந்தும், சிக்கிய மீனிடமே தன்நிலையைச் சொல்லி கெஞ்சவும், திடீரென வந்து நிற்கும் ஒரு பறவையைக் கொஞ்சவும், காயத்துக்கு மருந்து போடக்கூட துணை இல்லாததை நினைத்து தழுதழுக்கவும், ஆறுதல் தேடவும் முடிகிறதென்பதே நாவலின் வெற்றிதானல்லவா....?
கிழவனின் வெற்றி என்பது விற்பனைக்கென ஒரு மீனை அடைந்ததில் இல்லை.... தன் பலம் காட்டிட சுறாக்களைக் கொன்றதில் இல்லை.... மாறாக, தன்னையே மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணமே கிழவனின் வெற்றி.... படித்து முடித்த பின்னரும் அமைதியடையாத கடலாய் மனமும் நினைவுகளும்... .....அழகியதோர் வாசிப்பு.
...ம்ம்ம்.
...இரவல் நூலகத்தில் இனி நூல்கள் வாங்கிப் படிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும.. திருப்பிக் கொடுத்துவிட மனம் மறுக்கின்றதே?????

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

அது ஒரு கனாக்காலம்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments


.
அப்பாவின் வெஸ்பா வருவதற்குள்
பள்ளிக்கு எதிரில் இருக்கும் நூலகத்தில் நுழைந்து
புத்தகப் பாற்கடலில்
தொலைந்து போனதொரு
கனாக்காலம்....

.
அடுத்தாற்போல் இருக்கும் பள்ளிவாசலில்
தென்னைமரங்கள் வழியோடி
ஹௌழில் மீன்களுக்கு
பொரியை வாரி
இறைத்ததொரு
கனாக்காலம்....

.
மூடியிருக்கும் ரயில்வே கேட்டுக்குள் புகுந்தும்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தும்
இரு கைகள் விரித்தபடி,
இரு கண்கள் மூடியபடி
இரு கால்களையும் சமணமிட்டு
இரு தரப்பையும் கண்களில்
அள்ளிக்கொண்டு
சைக்கிளில் கல்விச்சாலைக்கு
சிட்டாய்ப் பறந்ததொரு
கனாக்காலம்....

.
சுடும் நவாப்பழத்தையும்
சுடாத வேப்பம்பழத்தையும்
பாவாடையில் கட்டிக்கொண்டு
ஆகப்பெரும் சொத்தாக
பாவித்ததொரு
கனாக்காலம்...

.
மழைக்கும் முன்னரே கிழிந்து நிற்கும்
நோட்டுப்புத்தகங்களை
மழை நீரில் கப்பலாக்க வேண்டி
இன்னும் கிழித்ததொரு
கனாக்காலம்...

.
நாக்கில் தடவி எண்ணிய நோட்டுக்களும்,
கடையிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும்
ஆலாய்ப்பறந்து மூக்கினை உள்விட்டு உள்வாங்கிய
புத்தம்புது பாடப்புத்தகங்களும்,
இம்முறை Camelஆ, Camlinஆ,, Natrajஆ, Foreignஆ
என அங்கலாய்க்க வைத்த
ஜாமெட்ரி பாக்ஸ்களும்,
தொட்டால் அப்பும் எண்ணெயில் மூழ்கிய
இரட்டைப் பின்னல்களும்,
குழலிலேயே மலர்ந்ததோ எனும் அழகில்
பூத்துக்குலுங்கிய ஜாதிமல்லியும், டிசம்பர்களும்
நிறைந்தும் நிறையாத நினைவுகளைப் பரிசளித்ததொரு
கனாக்காலம்...

.
நகர்கின்ற இயந்திரவாழ்வில்
இனிக்கும் காயங்களாய்
இழந்த சுகங்களை இன்னும் இன்னும்
நினைவுக்கூடுகளில்
அள்ளி இறைத்தபடி
பொங்கிக்கொண்டே இருக்கின்றது
எந்தன் கனாக்காலம்....

.
இறந்தது மட்டுமா....
இன்னும் வர வேண்டியதுமே
அப்படித்தான் எனச்
சிரித்தபடி நகர்கிறது
வாழ்வெனும்
கனாக்காலம்.....


#‎அது_ஒரு__கனா_காலம்‬
‪#‎சிறகுகள்‬ குழுமத்திற்காக...
‪#‎நான்‬

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

அதாகப்பட்டதென்னவெனில்......

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments

தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து எழுதப்பட்ட இரு நூல்களுக்கு தமிழக அரசு தடை போட்டுள்ளது. அதன் அசல், நகல், மூலாதாரங்கள் என எல்லாவற்றையும் அரசின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
நூல் தலைப்புக்கள் ‘வேந்தர் குலத்தின் பிறப்பிடம் எது???’ மற்றும் ‘மதுரை வீரனின் உண்மை வரலாறு’ -- நூல்கள் பதிப்பிக்கப்பட்டால் சமூக நல்லிணக்கம் கெட்டுப்போய்விடுமாம்...
=========================
அரசியல் துறை சார்ந்த அத்தனை பாட வகுப்புக்களையும் சென்னை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்ததோடல்லாமல் அந்த துறை சார்ந்த அத்தனை மாணவ மாணவிகளையும் கேம்பஸை விட்டு வெளியேறச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது... வேற்று பிராந்திய, பிறநாடுகளிலிருந்து வந்துள்ள மாணாக்கர்கள் உட்பட.... அபயமில்லை... எங்கே செல்ல என்று தவிப்பவர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் எழுதித் தரச்சொல்லி அடக்குமுறையை ஏவியுள்ளது. பேராசிரியர் மணிவண்ணன் மாணவர்களின் மதுவிலக்குப் போராட்டத்திற்கு ஆதரவு தந்ததுதான் பெரிய தவறாம்...
==========================
கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார ஆய்வில் தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்கள் மிகவும் பின்னடைவில் இருக்கின்றன. 50 சதவிகிதத்திற்கும் மேல் இந்த அவலநிலை. கேந்திரிய வித்யாலயாக்கள், DAV பள்ளிக்கூடங்கள் உட்பட இதுதான் நிலையாம்...
========================
கோவை. பட்டப்பகலில் திருச்சி ரோடில் 8-10 குண்டர்கள், கத்தி, வாள், துப்பாக்கி சகிதம் சண்டை. ஒருவர் சாவு. இருவர் காயம். மீதி எஸ்கேப்பு. அத்தினி பேரும் பெயில்ல வெளில இருப்பவிங்களாம்....
=========================
‪#‎வெளங்கிடும்‬.
இதுக்குத்தான் நான் நியூஸ் பேப்பரே படிக்காம இருந்தேன் இவ்ளோ நாளு.... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

தனிமையின் நூர் வருடங்கள்...

Thursday, August 27, 2015 Anisha Yunus 0 Comments


...இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

என் மனம் கவர்ந்த தோப்பில் மீரான் சாஹிபின் மொழியாக்கத்தில் வெளி வந்திருக்கும் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. மூன்று கதைகளை முடித்தாயிற்று. மிகவும் பிடித்த, அல்லது மிகவும் இரசிக்கும் நடை கொண்ட எழுத்தாளர்களை வாசிப்பதென்பது மனதுக்கு தெம்பூட்டுவது. இன்னாரின் எழுத்து இது என்று எதுவும் சொல்லாமலே ஒரு பக்கத்தை மட்டும் கிழித்துத் தாருங்கள்.... அது இன்னாருடையதுதான் என அறிந்து கொள்ளும், புதிர் விளங்கும் கணம் மிகவும் அழகியது. அப்படித்தான் இந்த தொகுப்பிலும் மொழியாக்கம்தான் செய்திருக்கிறார் எனும்போதும் தனக்கே உரிய அழகியலில் மொழி பெயர்த்துள்ளது அழகுக்கு அழகு சேர்க்கிறது. 

மீரான் சாஹிபின் முக்கியமான முத்திரை என நான் கருதுவது, கதையின் மைய நீரோட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பி, அந்தக் கேள்விக்கான பதிலை சூட்சுமமாக கதையின் கடைசிப் பகுதியில் வைத்து, பின்பும் ஒற்றை பதிலுடன் அதனை முடிக்காமல், வாசகனை அங்கலாய்க்க விடுவது. I am Loving it. முதல் கதையிலும் இரண்டாம் கதையின் முடிவிலும் மிகவும் ரசித்த டச் அது.

க்ஹைர்.... ஆரம்பக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பும். ‘தனிமையின் நூர் வருடங்கள்’. கே.ஆர்.மீரா அவர்களின் சிறுகதை. மிகவும் சிறிய கதைதான். ஒரு கைதிக்கும், ஒரு ஊனமுற்ற பெண்ணுக்கும் நடுவில் பிறக்கும் காதல் பற்றியது. அவனின் மன ஊனத்தைப் பற்றியும், அவளின் சுதந்திர வானைப் பற்றியுமான கதை. 3,4 முறை வாசித்த பின்னும் அடுத்த கதைக்கு செல்ல இயலவில்லை. கதையின் போக்கை விடவும், கதையின் போக்கில் சென்று ஆணின் மனதைப் போட்டுடைத்ததன் தாக்கம் ஆழமானது. முழு கதையிலும் அந்த உளவியலே விரட்டிக்கொண்டு வருகின்றது. விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரைத் தவிர்த்து மற்றெல்லா ஆண்களுமே இவ்வுலகில் இப்படித்தான் இருக்கக்கூடும் எனக் கட்டியம் கட்டியது, இவ்வரிகளே.

//அவனுடைய மனசில் பெண் எனும் சொல்லிற்கு ஒரு பொருள்தானிருந்தது. மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு.//
சத்தியமான வரிகள்தான் இல்லையா....
.
.
...இன்னும் வாசிக்க மீதம் இருக்கின்றது.
...இன்னும் கற்றுக்கொள்ள மீதம் இருக்கின்றது.
...இன்னும் பயணிக்க நெடுந்தொலைவு இருக்கின்றது.

‪#‎தோப்பில்_முஹம்மது_மீரான்‬
‪#‎மலையாள_சிறுகதைகள்‬
‪#‎தனிமையின்நூர்வருடங்கள்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

பல்லிடுக்கில் போராளிகள்...

Thursday, August 20, 2015 Anisha Yunus 0 Comments


.
கற்களுக்கு அஞ்சி
தோட்டாக்களுடன் கைகுலுக்குகிறோம்

.
காயங்களுக்கு அஞ்சி
கொலைகளை முத்தமிடுகிறோம்

.
விழிகளைச் சந்திக்க
திராணியற்று
வேஷங்களை
மேடையேற்றுகிறோம்

.
விரியும் முன்
சுருளும் மலர்களை
குப்பைக்கூடையின் உள்ளே
கசங்கிய காகிதமாய்ப்
புதைக்கிறோம்

.
சுயத்தை உள்ளங்களில்
பூட்டி வைத்து
பல்லிடுக்கில் போராளிகளாய்
கொக்கரிக்கிறோம்

.
எம்மவர் யாருமில்லையே
கிசுகிசுத்துக்கொள்கிறோம்

.
இறப்பும் இழப்பும்
எண்களாகின்றன

.
நரிகளை
இறையாக்குகிறோம்.

.
ஆடுகள்
இரையாகின்றன.



.
#‎நான்‬
‪#‎Thoughts‬ over ‪#‎Palestine

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இரண்டாம் ஜாமத்துக் கதை | கவிஞர் சல்மா

Monday, August 10, 2015 Anisha Yunus 0 Comments

.
குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
 

என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான் 
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைத்தொகுப்பு

-முகநூலில் படித்தது.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

எனக்காக நீங்கள் பேசுவீர்கள்தானே??

Monday, August 03, 2015 Anisha Yunus 0 Comments

இது டீஸ்டாவிற்காக -- ஸலீல் த்ரிபாதியிடமிருந்து
-------------------------------------------------------------------------------------------
டீஸ்டாவிற்கும்,
இந்தியாவை இந்தியாவாக
நிலைபெறச் செய்ய அரும்பாடு படும்
ஆன்மாக்களுக்காகவும்...
===========================


.
முதலில் அவர்கள் சஞ்சீவ்பட்டின் பின் சென்றார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் போலீஸ் அல்லவே.


பின் ஆஸாராம் வழக்கின் சாட்சிகள்
ஒவ்வொருவராய் மாண்டு போனார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் எந்த துறவியின் சீடனும் அல்லவே.

பின் வியாபம் வழக்கின் சாட்சிகளும்
காணாமல் போக ஆரம்பித்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் மத்தியப் பிரதேசத்திலா வசிக்கின்றேன்??

பின்னர் அவர்கள் மாயா கோத்னானியை
பெயிலில் விட்டார்கள்,
நான் எதுவும் கூறவில்லை..
அந்தப் பெண்மணி என்னை எதுவும் செய்ததில்லையே.

பின்னர் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருந்த
ஒவ்வொரு ஹிந்துவின் கோப்பும் பின்வாங்க ஆரம்பித்தது...
நான் எதுவும் கூறவில்லை..
ஹிந்துக்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லரே,
பின் அவர்கள் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்??

பின் அவர்கள் மாநிலத்தில் மாட்டுக்கறியை தடை செய்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
சிவப்பிறைச்சி உடலுக்கு உகந்ததல்ல.... தெரியும்தானே??

பின்னர் அவர்கள் ‘வீடு திரும்புதல்’ என கூச்சலிட்டார்கள்...
பிரதமர் அவ்வப்போது இந்தியாவிற்கே திரும்பி வருவதைத்தான்
அப்படிக் கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

பின்னர் அவர்கள் க்ரீன்பீஸின் வங்கிக்கணக்குகளை
உறையச் செய்தார்கள்...
நான் நினைத்துக்கொண்டேன்....
இந்தியா வளர வேண்டியுள்ளது அல்லவா,
க்ரீன்பீஸினால் இந்திய வளர்ச்சி
தடைபட அல்லவா செய்கின்றது??

பின்னர் அவர்கள் பிரியா பிள்ளை
விமானமேறுவதிலிருந்தும் தடுத்தார்கள்...
நான் நினைத்தேன்...
அஹ்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இந்தியாவிற்கு எதிராகப் பேச அவள்
ஏன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டா செடல்வாதை
கைது செய்ய முனைந்தார்கள்...
நான் அதைக் கண்காணாது இருந்து விட்டேன்...
உயர் நீதி மன்றமே, அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறிவிட்டதுதானே...
பின் நாம் ஏன் வருந்த வேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டாவின் வீட்டை ரெய்டு செய்தார்கள்...
நிச்சயம் அவளிடம் மறைப்பதற்கான
ஏதோ ஒன்று இருக்கின்றது...
இல்லையென்றால் ஏன் அவள்
எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை?????

என்றேனும் ஓர் நாள்,
அவர்கள் எனக்காகவும் வரக்கூடும்,
அவர்கள் சொல்கிறார்கள்....

ஹ ஹா..
அவர்கள் சொல்வது
நகைப்புக்குரியது;
இந்தியா,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் அல்லவா...
இதொன்றும் ஆதிக்க சக்திகளின்
கைப்பாவைக் குடியரசா என்ன??

நான் தவறாது வரி
கட்டுகிறேன்...
ஆதார் அட்டையும்
என்னிடம் உண்டு...
நாள் தவறாமல்
யோகாவும்
செய்பவன்.

ஆனாலும்,
அவர்கள் வந்தால்,
எனக்காக நீங்கள்
பேசுவீர்கள்தானே??
.
 8/2/2015

This is a translation of an English poem dedicated to Teesta Setelvad. 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

என் எழுத்து, முதன்முறையாக அச்சில்...

Friday, July 31, 2015 Anisha Yunus 3 Comments

முதன் முதலாக என் ஆக்கம் ஒன்று, அச்சேறுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். குழந்தைகள் இதழில் வெளி வருவது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. தம்பி Rizwanக்கும், ரிஸ்வானை அறிமுகம் செய்த Fakir Bhaiக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இது வரை என் விமர்சனத்தை மட்டுமே பார்த்து வெறுத்துப்போயிருக்கும் மக்களிடமிருந்து முதல்முறையாக விமர்சனங்களை எதிர்பார்த்து நிற்கிறேன். இது ஒரு தொடராக வெளி வரும் என்பதால், ஆசை தீர மாதா மாதம் திட்டித் தீர்க்கலாம் என்னை :) :)
 
இந்த விஷயத்தை என் ஒமரிடம் சொன்னதும் அவன் சொன்னது, ஆஹா, ஏன் தமிழில் எழுதறீங்க... என்னால படிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்னால படிக்க முடியாதே என. எனக்கும் வருத்தம்தான் ஹபீபீ <3 ..... தமிழை உனக்கு இன்னும் கற்றுக்கொடுக்கவில்லை என... இன் ஷா அல்லாஹ், வழி செய்வோம். 

குறிப்பு-- அச்சில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. மன்னிக்கவும்.

எல்லாப் புகழும் ஏகன் ஒருவனுக்கே...
வலில்லாஹில் ஹம்த். வலகஷ் ஷுக்ர்.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

கலாமிற்காக என்னால் கண்ணீர் அஞ்சலி செலுத்த இயலாது..... Sorry about it.

Wednesday, July 29, 2015 Anisha Yunus 3 Comments



மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் மரணம் என்னை பாதிக்கவும் இல்லை, அதற்கென என் வருத்தங்களோ, மரியாதையோ இல்லை. அதுவும், என்னைக் கடந்து சென்ற ஓர் மரணம் அவ்வளவே. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

ஆனால்... இறந்து போன ஒருவரைப் பற்றிப் பேசாதீர்கள், எழுதாதீர்கள் என்கிறீர்களே ஏன்??? இறந்தவரின் ஆன்மா சுவனத்திற்கு அருளப்பட்டதா, நரகத்திற்கா என்பதை இறைவன் அறிவான். அதன் மீதான எந்த வழக்கும் நம் கையில் தீர்ப்புக்கில்லை.

எனினும், இன்றைய சமுதாயமும், நாளை வர இருக்கும் சமுதாயமும் இவரைப் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாமல் போனால், மீண்டும் ஒரு பிழையான வரலாறு அரங்கேறிடவும், நீரோக்களும், ஹிட்லர்களும், மோடிகளும், பட்டேல்களும், அவர்தம் கூஜாக்களும் வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட நாமே சாட்சியாகி விட மாட்டோமா.... நாமே மை நிறைத்து தந்தவர்களாகி விட மாட்டோமா....??

இறந்து போன ஒருவர் சாமான்யனாக இருக்கும் பட்சத்தில், கூற்றில் உண்மையுண்டு. நகர்ந்து செல்லலாம். கண் காணாது, செவியேற்காது, மௌனித்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்கள் ஒருவரை ஐகானாக, தங்களின் குலக்கொழுந்தாக கொண்டாடியும், அவரின் மரணத்தை தங்கள் இவ்வுலக வாழ்விற்கே நேர்ந்து விட்ட அவலம் போன்றும் உணர்ச்சிவசப்பட்டு பிதற்றும் வேளையில், தம் சமூக மக்களுக்காக, தம் சமுதாய மக்களுக்காக, தாம் வாழ்ந்த நிலத்தின் வேர்களுக்காக, தமக்கு உணவும், உறைவிடமும், ஞானமும் தந்தருளிய, இல்லாத சமயங்களில் அன்பின் மிகுதியால் அள்ளிக்கொண்ட மக்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதுவும் கேள்விக்குட்படாதா???? அந்த பிம்பத்தை வைத்துத்தானே கொண்டாடுகின்றீர்கள்??? அதுவே உண்மை இல்லை எனும்போது அதனை வெளிச்சமிட்டுக்காட்டுதல் நம் கடமையில்லையா?? இறந்தது ஓர் முஸ்லிம் என்பதற்காகவே சதாம் ஹுசேனும், இடி அமீனும் இரட்சிப்பாளர்களாகி விடுவார்களா??

சதாம் ஹுசேன் அளவுக்கும், இடி அமீன் அளவுக்கும் டாக்டர் அப்துல் கலாம் இருந்திருக்க வில்லைதான். ஆனால் கொலை செய்பவனை விட அந்தக் கொலைக்கு ஆதரவு தெரிவித்தவனும், வாய் மூடி மௌன சாட்சியானவனும் அதே அளவுக்கு கொலை செய்தவர்கள் அல்லவா.... கூடங்குளத்தினால் மாள்பவர்களும், இனி மாள இருப்பவர்களும், பாலிஸ்டிக் மிசைலினால் பிணமாகுபவர்களும், அனாதைகளாகும் குடும்பங்களும் மனிதர்கள் இல்லையா. இவர்களையெல்லாம் காவு கொடுத்தா ஒரு மணி மண்டபம் எழுப்ப துணை நிற்கப் போகிறீர்கள்...? எந்த மாணவர்களின் முன்னோடியாக காட்டப்படுகின்றாரோ அதே மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கென ஒரு துரும்பும் கிள்ளாதவரையும், கல்வி எனும் பெயரில் கொள்ளை வியாபாரம், கொலை வியாபாரம் ஆவதைத் தடுக்காதவரையும், சாதி, மதம், நிறம் இன்ன பிற பிரிவுகளால் தற்கொலைக்கு தள்ளி விடும் பாடச்சாலைகளை எதிர்க்காதவரையும், அவரைப் போன்றே ஏழ்மையில் பிறந்து ஏழ்மையிலேயே வாடிய விவசாயிகளின் வேரறுபட்டபோது கள்ளமௌனம் காத்தவரையுமா கொண்டாடச் சொல்கிறீர்கள்...?
சரியை தவறு எனக் கொள்வதை விட்டும் பெரிய தவறு, தவறை, தவறானவர்களைச் சரி எனக் காண்பது. சத்தியம், எத்தனை கசப்பாக இருப்பினும், சத்தியத்திற்கே துணை நில்லுங்கள். நம் நிகழ்கால வாழ்வில் அசத்தியத்தின் எழுத்தாணிகள் விதியினை மாற்றியமைப்பது போல, நாளை வரும் சமுதாயத்தையும் பொய்களால் நிரப்பாதீர்கள்.

ஜெய் ஹிந்த்!
=============
மறைந்த விஞ்ஞானி டாக்டர் கலாமின் பொய்-மெய், தோற்ற அலசல்களை விரிவாகப் படிக்க விரும்பினால், முகநூலில் இருந்தும், இணையத்தில் இருந்தும் சில இணைப்புகள் (Not Conclusive)

அப்துல் கலாமின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட பிம்பம், உண்மையில் என்ன என்பதற்கு இந்தக் கட்டுரைகளே போதுமானது. யாகூப் மேனனின் மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாமான்யனுடன் கூட அவர் ஒன்று சேரவில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது.

 

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

37 - அடையாளம் பதிப்பகம் | எம்.ஜி.சுரேஷ் | நாவல் விமர்சனம்

Saturday, July 25, 2015 Anisha Yunus 2 Comments




வாசிப்பவனுக்கு மிக அதீத விளக்கம் தரும், தரப்படும், எந்த ஒரு படைப்பும் கதையோ, கவிதையோ... தன்னை நிலைநிறுத்தத் தவறுகின்றது. அத்தனை பாத்திரங்களுக்கும் பெயர்கள், அதற்கான காரணிகள், துல்லிய விலாசம், நேரம், பொழுது, நிறம், அதன் விருப்பு/வெறுப்புக்கள்... இது போல கதையின் கருவுக்கு சம்பந்தமில்லாத (தேவையானவை தவிர்த்து) இன்ன பிற அம்சங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அந்தப் படைப்பு மெல்லச் சாகின்றது. அதே நிலைதான் 37, நாவலிலும்.

ஒவ்வொரு பாத்திரத்தையும், வாசகனின் மனநிலைக்குள்ள்ளும் கற்பனைக்குள்ளும் வலிந்து ஒரு துல்லிய பிம்பத்தையே நிறுவ வேண்டும் என்னும் அதீத ஆர்வத்தில், அதிகபட்சமான இடைச்செறுகல்கள் முழு புதினத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டன என்பது அதன் தொய்வுக்கு ஒரு காரணம் என்றால், அறிவியல் புனைவு எனப் பெயர் வைத்ததே இதற்கு சரியான தெரிவா எனக் குழம்பச் செய்வதும் இன்னொரு காரணி. விக்கிரமாதித்தன் கதைகளுக்கும், வாய் வழிக் கதைகளுக்கும், தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், இதில் அறிவியலுக்கு தரப்படவில்லை என்பதே நிஜம்.

ஆங்காங்கே, பாத்திரத்தின் இருத்தலுக்கும், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கும் தொடர்பு அறுந்து விழுகிறது. திடீரென வாசகனை அம்போவென ஒரு தெருவில் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்கு தாவி விடுகிறார் மனிதர். Episode அல்லது Speaking person நடுவே இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடவில்லை நான். Talking about the missing links. சில இடங்களில், இயந்திரன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆசிரியரே கொன்று விட்டாரோ எனக் கேள்வி முளைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு கள வர்ணனை நடந்து கொண்டிருக்கும்போதே இராமநாராயணன் ரேஞ்சுக்கு மேஜிக் வித்தைகளும் நிகழ்கின்றன. :


அறிவியல் பெயர்கள் அதிகம் புழங்கியிருக்கும் அதே நேரம், அதன் பிரம்மாண்டத்தைப் பற்றிய ஒரு சிறு வியப்பைக் கூட வாசகனுக்குத் தராமல் தடை போட்டு நாவல் முன்னேறுகின்றது. வாசகன் ஒருவன் மெல்ல அசை போட்டு, அறிவியலின் வேகத்தையும், வளர்ச்சியையும் உள்வாங்கி அதிசயித்து, ஆஹா இத்தனையும் சாத்தியமா என ஆச்சரியப்பட வைக்கவேண்டிய ஒரு படைப்பு.... அடுத்த பக்கத்தோடு புதினம் முடிந்து விடுமா என யோசிக்க வைப்பது வேதனையே! ஆனால், ஆசிரியர் தான் படித்த, விரும்பிய, விரும்பும் இலக்கியவாதிகள், அவர்களின் படைப்புக்கள் என எல்லாவற்றையும் ஒன்று விடாது இதில் பதிவு செய்துவிட்டதை எண்ணும்போது............. :'( :'(  .. ஆனந்தக் கண்ணீர். :P

சுஜாதாவின் பாணியே இன்றி, சுஜாதாவின் சாதனையை முறியடிக்க ஆசிரியர் அதீதப் பிரயத்தனப்பட்டிருக்கிறாரோ என்றும் கூட நினைவு வராமல் இருக்கவில்லை. ஆனால், அட் த லீஸ்ட், ஜீனோ-வின் Flowவை, மொழியை, ஏக காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, அறிவியல் வளர்ச்சிகளை எப்படி தன் கதையின் போக்கோடு பிணைத்தாரோ, அந்த டெக்னிக்கை, ஒரு முறைக்கு இரு முறை படித்து அதன் பின் முயற்சித்திருக்கலாம். இதுவே சுஜாதாவின் புனைவுகளை இது சாத்தியமா என்னும் கேள்வியிலிருந்து, நடக்கத்தான் போகிறது என்னும் உறுதிக்குக் கொண்டு வந்தது, வாசகர்களை. ஆனால், இந்தப் புதினத்தில், That is missing. அடையாளம் பதிப்பகத்தாரின் படைப்புக்களுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டு என்னுள். But, இது பெருந்தோல்வி. :(

இந்த நாவலைப் பற்றி சகோதரர் Manazir இடம் ஏற்கனவே பேசியிருந்ததால், பாதி படிக்கும்போதே தோன்றியது, ஒரே ஒரு வரியுடன் விமர்சனம் எழுதி முடித்து விடலாம்... // இந்தப் புக்கை பத்தி மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க மனாசிர்....... :'( :'( :'(  // என. விதி வலியது. hi..hi.. இந்தப் பதிவை எழுதியே ஓய்ந்தேன்.

இதே ஆசிரியருடைய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ எனும் நூலைப் பற்றி Manazirஉம், Lafees Shaheedஉம் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் கொடுத்து விட்டதால், அதைத் தேட ஆரம்பித்துள்ளேன். இன் ஷா அல்லாஹ், வாசிப்போம்.....

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

திருநங்கைகளும் நானும்...

Tuesday, July 21, 2015 Anisha Yunus 1 Comments

நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து சென்னை நோக்கிய ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போதுதான் அது நிகழ்ந்தது. வழக்கம் போல ரயிலில் பயணிக்கும் ஆண்களிடம் மிரட்டி, அருவருப்பாக பேசி, தொட்டு, கலவரப்படுத்தி பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் சிலர் நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியிலும் ஏறினார்கள். அதுவரையிலும் முஜாஹித் சீட்டின் ஓரத்தில் நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் அடித்துக்கொண்டிருந்தான். (அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க.... எப்போ எங்களை எல்லாம் நடுரோட்டுல கட்டி வெச்சு அடிக்கப்போறாங்கன்னுதான் தெரியல)



கடைசியாக வந்த திருநங்கை, முந்தைய வகுப்பில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிவிட்டு வரும்போது முஜாஹித் அவரையும் அடித்தான். உடனே அவர் கடந்து செல்லாமல் முஜாஹிதின் சீட்டின் அருகிலேயே நின்று கொண்டார். முஜாஹிதும் வரிசையாக சில அடிகள் போட்டுவிட்டு, அவரின் கன்னத்தைக் கிள்ளி சிரித்துக்கொண்டிருந்தான். அந்தத் திருநங்கை முஜாஹிதிடம் பெயர் கேட்டதும், இவனும் ’முஜாயித்’ என்றான். பின் ‘என்னுடன் வந்து விடுகிறாயா’ என்றதும், விரைந்து தலையாட்டினான். (அடப்பாவி!!!!!) ‘மம்மியிடம் சொல்லிவிட்டு வா’ என்றதும், என்னை நோக்கி, ‘அம்மீ....டாட்டாஆ....’ என்றான். (வீட்டுக்கு போனப்புறம் இருக்கு உனக்கு....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....). பின்னர், அந்தத் திருநங்கை, வா, வர்றியா என்றதும், முடியாது என்று தலையாட்டிவிட்டு, அடுத்து நின்று கொண்டிருந்தவரை அடிக்க தயாரானான்.

அதன் பின் என்னைக் கடந்து வெளியேறினார், அந்தத் திருநங்கை. அதுவரையிலும் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள் முட்டி மோதின. அவரை அழைத்து ஒரு நிமிடமாவது பேச வேண்டும், இறைவன் தந்த கண்ணியமான் உடலை, இப்படி காட்சிப்பொருளாக ஆக்கி, கண்டவரும் தன் இச்சையைக் கண்கள் வழியே தீர்ப்பவர்களுக்கு உணவாக்கி, ஏன் உங்கள் சுய கௌரவத்தை, உங்களின் தன்மானத்தை பலியிடுகிறீர்கள் நீங்களே, இதுவும் ஒரு படைப்பினம் எனும்போது ஏன் பல திருநங்கைகளும் கௌரவமாக சுய சம்பாத்தியத்தில் அல்லது கண்ணியமான பணிகளில் ஈடுபடுவதைப் போல நீங்களும் ஈடுபடக்கூடாது, ஏன் உங்களின் மதிப்பை, கண்ணியத்தை நீங்களே விலை பேசுகிறீர்கள் என்றெல்லாம் பேச நினைத்தேன். எனினும், தனியே பயணிக்கும்போது இருக்கும் தைரியமும், செயல்வீச்சும், குழந்தைகளோடு பயணிக்கும்போது இருப்பதில்லை. அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகி விடுகின்றது. அந்தத் திருநங்கை அடுத்த பெட்டியில் போய்ச் சேர்ந்த பின் நினைத்துக்கொண்டேன், கடைசியில், நானும் ஒரு முகநூல் போராளி மட்டுமே என..... இந்த ஒரு சிறு போராட்டத்தில் கூட என் ஈமானை, என் தாவாஹ்வை செயலாற்ற முடியவில்லை எனும்போது, ஜிஹாதுன் நஃப்ஸின் (தன் ஆன்மாவுக்கான) போராட்டத்தில் தோற்றவளாகவே காட்சியளிக்கிறேன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

படம் உதவி கூகுள்

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

புன்னகைகள்

Saturday, July 18, 2015 Anisha Yunus 0 Comments

 
 
புன்னகைகள்
புரியப்படுகின்றன

வாழ்வாக,
சாபமாக,

துயரமாக,
சுமையாக,

புறக்கணிப்பாக,
கரிசனமிக்கதாக,

அன்பின் விளைவாக,
அலட்சியத்தின் பரிசாக,

சொல்ல ஏதுவுமில்லா
தருணங்களில்
மௌனத்தின்
சாவியாக,

வெறுமையாக,
பசுமையாக,

ஏதேனும் ஓர் வடிவைத் தாங்கியபடி
புன்னகைகள்
புரியப்படத்தான் செய்கின்றன.

வறண்ட காணியின்
வேரற்ற பெருமூச்சாய்
வெளிப்படும் ஒரு புன்னகை -

ஈரம் தேடும்
பிஞ்சுக்கண்களுக்கு
வாழ்வின் அர்த்தத்தை
மீட்டுத் தரும் என்றால்,

விட்டுச் செல்வோமே
வெறுமனே ஓர்
புன்னகையை...
 
# Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

நீ - நான் - மௌனம்.

Friday, July 10, 2015 Anisha Yunus 0 Comments



வார்த்தைகள்
ஏதுமற்ற
அலங்காரங்களால்
நிறைந்து போகிறது
உன் மௌனம்.

தானல்லாத
தன்னை
எதிர்கொள்ள இயலாப்
பெருவெளியில்
தோல்வியுறுகின்றது
என் மௌனம்.

சுயமெனும்
கோரப்பிடியில்
மௌனத்தின்
ஆயுதங்களை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறோம்
நாம்.

நேசம்,
காற்றோடு
காற்றாகின்றது...


#Deepதீ

படம் உதவி - கூகுள்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இதமாய்... இதமாய்...

Wednesday, July 08, 2015 Anisha Yunus 0 Comments


தீயின்
கருநாக்கு
தழுவி
நிற்கின்றது.

கண்ணீரின்
ஆழிப்பெருவலை
மூச்சை உள்ளடக்கும்
பெருமுயற்சியில்
களைக்கின்றது.

மாயையின்
பெருங்குரல்கள்
செவியை அடைத்தபடி...

உண்மையின்
உலர்நாக்கு
சப்தத்தின் முகவரியைத்
தொலைத்தபடி...

யுகங்கள் முழுதும்
அக்கினிக்கு
தாரைவார்த்து
தொலைந்து போகின்றேன்
நான்...
அணுஅணுவாய்,
செதில் செதிலாய்,

சாம்பலாய்ச் சரிந்தேன்
இனி
துயரில்லை,
துன்பமில்லை,
என இன்புறும்
வேளையில்,

மீண்டும்
வருகின்றாய்
உன் பிஞ்சு விரல்களால்
மீட்டு என்னை....

இரக்கமற்ற இவ்வுலகிற்கு
இதமாய்....
இதமாய்...

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமை -1

Saturday, June 27, 2015 Anisha Yunus 0 Comments

பொதுவாகவே ரமழானில் என் வாசிப்பு வெகுவாக குறைந்து போய் விடும். மற்ற நாட்களில் விடுபட்ட இபாதத்துக்களையும், இன்னும் செய்ய விரும்பும், அடைய விரும்பும் இலக்குகளுக்காகவும் இபாதத்துக்களுக்காக மட்டுமே என இந்த மாதத்தினை தேர்வு செய்வது வழக்கம். எனினும் இந்த வருடம், ஒவ்வொரு முறையும் தொலைபேசும்போது இன்று என்ன வாசித்தீர்கள் என்னும் Lafees Shaheed இன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கடத்துவது மிக அசௌகரியமாக இருந்ததால், வேறு வழியே இன்றி  இந்த மாதத்திலும் வாசிப்பிற்கென கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

தய்யிப்.

 எனக்கு டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமையின் பரிச்சயம் 2008க்களில் ஆரம்பித்தது. அப்பொழுது அதிக அளவு பாகிஸ்தானி நட்பு வட்டம் இருந்தது ஒரு காரணம், ICNA Sisters wingஇல் இருந்த ஈடுபாடு இன்னொரு காரணம். இதனால் டாக்டர் இஸ்ராரின் குர்’ஆன் விளக்க உரைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என் கணிணியில். அவருடைய பின்புலம்

அறிவியலும், மருத்துவமும் என்பதால், ஆங்கிலமும் தூய உருதூவும் கலந்து அவர் தரும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் அனைத்தும், மறுத்து கேள்வி எழுப்ப முடியாதவையாய் இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டு விட்டு சில சமயம் அதனை கவனமாக செவிமடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சரிபார்க்கவே நேரம் போய்விடும்.


அன்னாரின் target, elite and educated families of Pakisthan என்றிருந்ததாலோ என்னவோ, அவரின் உரைகள் எல்லாம் தகவல் சார்ந்த அடித்தளத்தை விடவும், மனித, சமூக உளவியல், சார்ந்த அடித்தளத்தை ஒற்றியே அமைந்திருக்கும். அவரின் குரலும், உடல்மொழியும், எடுத்து வைக்கும் வாதங்களும் என எல்லாமே அவரை ஓர் கர்ஜிக்கும் ஆளுமையாகத்தான் மக்களுக்குக் காட்டியது. அதிக அளவு விமர்சனத்துக்கும் உள்ளான உரைகள் அவருடையது.
அவரின் அதீத வேகம், விவேகம், பல்துறைப் புலமை இவற்றின் காரணமாகவே இந்த சமூகத்தின் பெரும்பிணியான ‘புறக்கணிப்பு’ என்னும் அங்கீகாரம் இவருக்கும் தரப்பட்டதோ என எண்ண வைக்கும். ஆம், பின்னே உர்தூவில் அவர் எழுதிய 64 நூற்களில் 10 புத்தகங்கள் கூட பிறமொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது??? 9 புத்தகங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. அதில் ஒன்று, ‘The responsibilities muslim owe to the quran'. அதனின் தமிழாக்கமே இந்தப் பதிவின் நோக்கம்.
க்ஹைர், புத்தகத்திற்குப் போகும் முன் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் டாக்டர் இஸ்ரார் அவர்களைப் பற்றி. எனக்குத் தெரிந்து அன்னாரைப் பற்றி இன்னும் தமிழில் ஒரு சிறு அறிமுகப் புத்தகம் கூட இல்லை. அவர் இறந்து ஐந்து வருடங்கள்தானே ஆகிறது அதற்குள்ளாக கிடைக்குமா என்கிறீர்களா.... அதுவும் சரிதான்.
=====================
டாக்டர் இஸ்ரார் இன்றைய இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஹிஸார் என்னும் சிற்றூரில் 1932இல் பிறந்தார். வளர்ந்ததே இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்காலத்தில் எனும்போது அதன் தாக்கம், அந்தக் காலத்தில் ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கின் தாக்கம் என எல்லாமே மிக அதிகமாகவே அவரை பாதித்திருந்தது, பிற்காலத்தில் ஒரு இராணுவ கட்டமைப்பில் தன்ஸீமே இஸ்லாமினை உருவாக்கும் வரையிலும் கூட.
அடிப்படையில் ஆங்கில மருத்துவராக பட்டம் பெற்றிருப்பினும், 1965இல் லாஹூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இஸ்லாமியக் கல்வியில் பட்டம் பெற்றார். மௌலானா அபுல் அலா மௌதூதியின் குர்’ஆன் விளக்கவுரைகளே இஸ்லாமியப் பணியில் டாக்டர் இஸ்ரார் காலடி எடுத்து வைக்கக் காரணமாயிருந்தது என்றால் அது மிகையல்ல. ஒரு மாணவராக டாக்டர் இஸ்ரார் அவர்கள் யாரிடமுமே முறையான மார்க்கக் கல்வி கற்கவில்லை எனினும், அல்லாமா இக்பால், டாக்டர் முஹம்மத் ரஃபியுத்தீன், மௌலானா ஹமீதுத்தீன் ஃபராஹி, மௌலானா அமீன் அஹ்ஸான் இஸ்லாஹி என மிக நீளமான பட்டியல் உண்டு, இவருக்குள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் என. மௌலானா அபுல் கலாம் ஆஸாதும், முஹம்மத் அலி ஜின்னாஹ்வும் அவர்களில் அடக்கமே.

மௌலானா மௌதூதியை தன்னுடைய மானசீக குருவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரகடனப்படுத்திய அதே வேளையில் அவரின் எல்லா கருத்துக்களுடனும், மார்க்க நிலைப்பாடுகளுடனும் டாக்டர் இஸ்ரார் ஒத்துப் போகவில்லை என்பதும் மிக உண்மை. மௌலானா மௌதூதியால் ஆரம்பிக்கப்பட்ட ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்துக்கும், டாக்டர் இஸ்ரார் அஹ்மதால் ஆரம்பிக்கப்பட்ட தன்ஸீமே இஸ்லாமிக்கும் இடையில் உள்ள செயல்பாடு ரீதியான, கொள்கை ரீதியான, கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்களே போதுமானவை அவர்களின் இருவரின் கோணங்களையும் அறிய.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், முஸ்லிம் உம்மத்தின் சீரமைப்பிற்கும், புனர் நிர்மாணத்திற்கும் அரசியல் அங்கீகாரமும், பொது அரசியலில் பங்களிப்பும் அவசியம் என்பது மௌலானா மௌதூதியின் வாதம். முஸ்லிம் சமூகம் தான் இழந்த அங்கீகாரத்தை, அதிகாரத்தை திரும்பப் பெற, ஒவ்வொரு தனி மனிதனின் ஈமானையும் மீளாய்வு செய்வதும், தனி மனித இஸ்லாத்தில் பூரணம் பெற விழைவதுமே அவசியம் என்பது டாக்டர் இஸ்ராரின் வாதம். ஆனால் மாணவப்பருவத்தில் டாக்டர் இஸ்ராரும் ‘இஸ்லாமிய தேசியம்’ என்றொரு கொள்கையைத் தாங்கிப் பிடித்திருந்தார் என்பதையும், வயது/காலம்/சூழல் போன்ற காரணிகளின் பக்குவத்தினால் அரசியலில் கால் வைக்கும் முன் சுயசீர்திருத்தமே முக்கியம் என்னும் கொள்கைக்கு மாறிவிட்டிருந்தார் என்பதையும் கவனம் கொள்ளவேண்டும். இந்த மாற்றங்களைப் பற்றியும் உள்ளதை உள்ளபடி டாக்டர் இஸ்ரார் அவர்கள் பல கேள்வி-பதில் பேட்டிகளிலும் கூறியதுண்டு. (Please correct me here, if am wrong.)

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் வகிபாகத்தை வைத்தும், பெண்களைப் பற்றிய மார்க்கப் பார்வையிலும் மிகப் பழைமைவாத கருத்துக்களே டாக்டர் இஸ்ரார் அஹ்மதுடையது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தன்ஸீமே இஸ்லாமி வெறுமனே ஆண்களுக்கான அமைப்பாக இருந்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. (இப்போ இருக்கும் எல்லா இஸ்லாமிய அமைப்புக்களிலும் மட்டும், முஸ்லிம்களாலான அரசியல் கட்சிகளிலும் மட்டும் பெண்களுக்கான அங்கீகாரம் என்னவாய் இருக்கின்றது என ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது..... சொல்லிட்டேன்!!!) எனினும் எங்கும் எப்போதும் தன்னுடைய இஸ்லாமிய அறிவுத்தேடலுக்கு விதை மௌலானா மௌதூதியின் எழுத்துக்களே என்பதை அங்கீகரிக்க டாக்டர் இஸ்ரார் அவர்கள் எப்போதும் தவறியதில்லை.

சமூக ரீதியாக, தப்லீக் ஜமா’அத்தின் அங்கத்தினராகத்தான் அவரின் பணி ஆரம்பித்தது என்றாலுங்கூட பிற்பாடு ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தில் இருந்து கருத்து மோதலின் காரணமாய் பிரிந்து தன்ஸீமே இஸ்லாமி என்னும் அமைப்பை நிறுவியது. அதே காரணத்தை முன் வைத்து கிலாஃபத்தினை மீட்டெடுப்போம் என தஹ்ரீக்கே கிலாஃபத் என இன்னுமோர் அமைப்பை உருவாக்கியது என டாக்டர் சாஹிபின் சமூகப் பங்களிப்புக்கள் அளப்பரியது. Controversyக்களும்..!!

வானொலியையும், தொலைக்காட்சியையும் இஸ்லாமிய விளக்கவுரைகளுக்கான ஒரு சாதனைக் களமாய் மாற்றிய பெருமையும் டாக்டர் இஸ்ரார் அஹ்மதிற்கே உண்டு. பல்வேறு ஒலி/ஒளித் தொடர்கள் மட்டுமன்றி புகழ் வாய்ந்த ஆங்கில, உர்தூ பத்திரிக்கைக்களிலும், நாளிதழ்களிலும் பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகளும் எழுதிய பின் சொந்தமாய் பத்திரிக்கையும் நடத்தியுள்ளார். மார்க்கத்தை எத்தி வைக்கவும், சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், கடைசி காலத்தில் குர்;ஆனுடன் தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய பாலத்தினை சரி வரக்கட்ட வேண்டிய அவசியத்தை, வழிமுறையை எத்தி வைப்பதற்காகவும், உறங்கிக்கொண்டிருக்கும் உம்மத்தை எழுப்பி விடவும் என டாக்டர் இஸ்ரார் அஹ்மத்தின் கால்கள் பாயாத இடமே இல்லை எனலாம். Kinda, You name it, and he is there already. எனினும் ஏற்கனவே பல ஆளுமைகளின் வாழ்வைப் படித்தபோது மனக்கண்ணில் தோன்றியதுதான், அன்னாரின் விடயத்திலும் தோன்றியது, in this community, gifted minds are pure show stoppers; it is cursed to be a brainchild in this Ummah. Nothing else. Period. Subhanallaah.

Anyways, கிட்டத்தட்ட அறுபது வருடத்திற்கும் மேலான பொது, சமூக, மார்க்கச் சேவைகள் புரிந்த பின் ஏப்ரல் மாதம் 2010இல் டாக்டர் இஸ்ரார் அவர்கள் இறைகட்டளையை ஏற்று அவன்புறம் திரும்பிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். இன்னமும் அவரின் நூல்களில் கால் பங்கு கூட முழு சமுதாயத்திடமும் போய்ச் சேரவில்லை. சேர்ந்திருக்கும் நூற்களிலிலிருந்து வாசிக்கக்கிடைத்த ஒரு நூலின் விமர்சனத்தை, அடுத்த பதிவில் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
வஸ் ஸலாம்.

( குறிப்பு - டாக்டர் இஸ்ராரின் அறிமுகம் பெரும்பாலும் இணைய தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. தவறிருப்பின் சுட்டிக்காட்டவும். மிக்க நன்றி. )

0 comments:

உங்கள் கருத்துக்கள்...