ஒரு ஊருக்கு போகிறோம், அல்லது ஊருக்குள்ளேயே பயணிக்கிறோம், அந்தப் பயணங்களில் எத்தனை முறை நாம் பாலங்களை கடக்க வேண்டி உள்ளது? அது தானாக முளைத்து விட்டது என்றால் நம்பும்படி உள்ளதா? ஒரு கட்டிடமோ, வாகனமோ அல்லது ஒரு தார் சாலையோ ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் துணையின்றி இதெல்லாம் முளைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த அந்த பொருட்களின் அல்லது கட்டிட அமைப்புக்களிலேயே அதை இவ்வளவு சிறப்பாய் வடிவமைக்க அந்தத்துறையின் நிபுணர் தேவை என்று நினைக்கிறோம், இல்லையா? அப்படி இருக்க, உயர்தரமான, கடுஞ்சிக்கலான கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மனித உடம்பு? யோசித்துப்பாருங்கள் சகோ...
சிந்தனை செய்யும் மூளையைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்: அது எப்படி சிந்திக்க உதவுகிறது, எப்படி பகுப்பாய்கிறது, எப்படி தகவல்களை சேமிக்கிறது, எவ்வாறு அவற்றை மீண்டும் வெளிக்கொணறுகிறது? எப்படி தகவல்களை பிரிக்கிறது, வகைப்படுத்துகிறது?? ஒரு மைக்ரானுக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் செய்யவும் வல்லது, அல்லவா? (இந்த வரியைப் படித்து பிரம்மிக்கவும் அதே மூளையை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளோம், நினைவிருக்கட்டும் !!)
கொஞ்சம் இதயத்தையும் கவனிப்போம். மனிதன் பிறந்த நொடியிலிருந்து இறக்கும் வரையிலும் நொடி தவறாமல் எப்படி இரத்தத்தை இறைக்கிறது? கல்லீரலும் சிறுநீரகமும் கூட இவ்வாறே ஓய்வின்றி உழைக்கின்றனவே. இரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள நஞ்சை அகற்றிடவும், இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் என ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை பணிகளை ஆற்றுகின்றன? நம் கட்டுக்குள் வரக்கூடியவையா இவை?
கண்கள்? அதைப் பற்றியும் யோசியுங்கள் சகோ...
உயர் தர கேமராவையும் மிஞ்சும் வேகம், காட்சிகளை மையத்தில் குவிக்கும் திறன், சுழலும் பார்வையை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரி செய்யும் புலமை, காணும் காட்சியை மூளைக்கு மொழி பெயர்க்கவும், மதிப்பீடு செய்யவும், நிறங்களை உடலுக்கும் நரம்புக்கும் ஏற்புடையதாக்கி சுற்றியுள்ள ஒளிக்கும் தூரத்திற்கும் ஏற்ப தகவல்களை தரும் விவேகம், திறமை - இவையெல்லாம் யாரும் உருவாக்காமல், திட்டமிட்டுத் தராமலே வரக் கூடுமா? அல்லது சிலர் கூறுவது போல, இத்தகைய கடுஞ்சிக்கலான ஒழுங்குமுறைகளை தற்செயலான மரபணு மாற்றங்களோ அல்லது பரிணாமமோ உருவாக்கியிருக்க முடியுமா?
சுத்தமாக இருக்கும் ஒரு வெள்ளை சுவற்றில் பல்வேறு நிறங்களை பீய்ச்சி அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வர்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை போன்றோ, பறவை போன்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் போன்றோ கூட தோன்றலாம். ஆனால் அவை யாவும் கலந்து திடீரென மோனலிசா போன்றாயிடுமா? அல்லது ஒரு கலைஞனின் திறமையும் முயற்சியும் இன்றி ஒரு மோனலிசா ஓவியம் வந்து விடக் கூடுமா?
சகோ...ஒவ்வொரு பாகமாக பார்த்துப் பார்த்து செதுக்கியது போன்றுள்ள நம் உடல், அந்த மோனலிசா ஓவியத்தை விட மிக சிக்கலான பாகங்களையும் நுணுக்கங்களையும் கொண்டது இல்லையா? அப்படி இருக்கையில், இந்த உடம்பின் அமைப்பும், அழகும், நுட்பமும் எவரின் ஞானமும் இல்லாமல் இப்படியே உருவாகிவிட்டது என்று நம்புவது எந்த விதத்தில் பகுத்தறிவாகும் சொல்லுங்கள் ???
இந்தப் பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்வோமே... நாம் வாழும் பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களைப் போன்றதொரு கோள். நம் சூரிய மண்டலமும் பால் வீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மண்டலங்களில் ஒன்று. நாம் வாழும் பால் வீதி மண்டலமும் அதைப்போல் எண்ணிக்கையில் அடங்காத பால்வீதிகளில் ஒன்று. மொத்த பிரபஞ்சத்திலும் இது போல் லட்சக்கணக்கில் பால்வீதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரம் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் ஒரு உன்னதமான ஒழுங்கும் நுட்பமும் கலந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இன்றைய தேதியில் இன்னும் பல வருடங்களுக்கு பின் வர இருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் கூட இன்றே கணிக்க முடிகிறதே... எப்படி இது சாத்தியம்?
சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையுங்கூட இன்னும் 200 வருடங்களுக்கு இன்றே, இப்போதே கணிக்க முடியும். இவையெல்லாம் எப்படி முடிகிறது?
அந்தப் பால்வீதியிலும், எண்ண இயலாத நட்சத்திரங்களிலும் கோள்களிலும், அவற்றின் அசைவிலும், சுழற்சியிலும் உள்ள ஒழுங்கால், அந்த நேர்த்தி மாறாது என்னும் நம்பிக்கையால்...
இவையெல்லாம் பறை சாற்றுவது என்ன??? இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவனின் நேர்த்தியான கலைத்திறன் மற்றும் இதைப் பற்றியுள்ள உன்னதமான அறிவு.
அணுவளவும் பிறழாத ஒழுங்கும், அலாதியான அழகுடனும்
விளங்கும் இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்து விட்டதாக நினைக்க முடிகிறதா சகோ?
திடீரென நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பில் இத்தனை சிக்கலான ஒரு அமைப்பு வந்து விட
முடியுமா? தானாக வாய்த்து விடுமா?
நிகழ்வாய்ப்பில் ஒரு உதாரணம் சொல்லவா? வெவ்வேறு நிறங்களாலான 10 கோலிக்குண்டுகளை வரிசைப்படுத்தி ஒரு பையில்
போட்டு நன்றாக குலுக்குங்கள். அதன் பின் கண்களை மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து பத்து
வரையான கோலிக்குண்டுகளை வரிசை தவறாமல் எடுக்க வேண்டும். முடியுமா? அதற்கான
வாய்ப்புகள் எத்தனை தெரியுமா? இரண்டு கோடியே அறுபது லட்ச வாய்ப்புகளுக்கு ஒரு
வாய்ப்பு (2,60,00,000 to 1) மட்டுமே.
10 கோலிக்குண்டுகளுக்கு மட்டுமே இந்த நிலை
எனில், லட்சோப லட்ச நட்சத்திரங்களும், கோள்களும், சம கால நிகழ்வில் இத்தனை
துல்லியமான நேர்த்தியுடனும், ஒரு இனிய பல்லியத்துடனும்
தற்செயலாக இயங்க எத்தனை வாய்ப்புகள் உண்டு, சொல்லுங்கள்????
பதில்????......................பூஜ்ஜியம்தான்!!!!
இந்த சிறிய
உதாரணமே போதுமானதாக இல்லையா படைத்தவனின் இருப்பை விளக்க?????
எல்லாம் வல்ல அல்லாஹ்,
தன் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும்
படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)
.
2 comments:
உங்கள் கருத்துக்கள்...