ஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...
நாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலியாவினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.
அப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.
பின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருகம்.
அந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன்? மிருகம் கூட இப்படி செய்யாதே??? அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும்? ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்?
நான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது? அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு?? இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூனிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.
அதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.
இப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும்? ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா?? அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா? யார் காப்பார் இவர்களை? இப்பொழுது நான் பாதுகாப்ப?ளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார்? பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது???? இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????
சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்?? இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே???? வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே??? என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.
பிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா? அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே????
இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??
//கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//
.
23 comments:
உங்கள் கருத்துக்கள்...