உண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா???

Friday, April 20, 2012 Anisha Yunus 25 Comments



ஒரு ஊருக்கு போகிறோம், அல்லது ஊருக்குள்ளேயே பயணிக்கிறோம், அந்தப் பயணங்களில் எத்தனை முறை நாம் பாலங்களை கடக்க வேண்டி உள்ளது? அது தானாக முளைத்து விட்டது என்றால் நம்பும்படி உள்ளதா? ஒரு கட்டிடமோ, வாகனமோ அல்லது ஒரு தார் சாலையோ ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் துணையின்றி இதெல்லாம் முளைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த அந்த பொருட்களின் அல்லது கட்டிட அமைப்புக்களிலேயே அதை இவ்வளவு சிறப்பாய் வடிவமைக்க அந்தத்துறையின் நிபுணர் தேவை என்று நினைக்கிறோம், இல்லையா? அப்படி இருக்க, உயர்தரமான, கடுஞ்சிக்கலான கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மனித உடம்பு? யோசித்துப்பாருங்கள் சகோ...

சிந்தனை செய்யும் மூளையைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்: அது எப்படி சிந்திக்க உதவுகிறது, எப்படி பகுப்பாய்கிறது, எப்படி தகவல்களை சேமிக்கிறது, எவ்வாறு அவற்றை மீண்டும் வெளிக்கொணறுகிறது? எப்படி தகவல்களை பிரிக்கிறது, வகைப்படுத்துகிறது?? ஒரு மைக்ரானுக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் செய்யவும் வல்லது, அல்லவா? (இந்த வரியைப் படித்து பிரம்மிக்கவும் அதே மூளையை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளோம், நினைவிருக்கட்டும் !!)

கொஞ்சம் இதயத்தையும் கவனிப்போம். மனிதன் பிறந்த நொடியிலிருந்து இறக்கும் வரையிலும் நொடி தவறாமல் எப்படி இரத்தத்தை இறைக்கிறது? கல்லீரலும் சிறுநீரகமும் கூட இவ்வாறே ஓய்வின்றி உழைக்கின்றனவே. இரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள நஞ்சை அகற்றிடவும், இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் என ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை பணிகளை ஆற்றுகின்றன? நம் கட்டுக்குள் வரக்கூடியவையா இவை?

கண்கள்? அதைப் பற்றியும் யோசியுங்கள் சகோ...  

உயர் தர கேமராவையும் மிஞ்சும் வேகம், காட்சிகளை மையத்தில் குவிக்கும் திறன், சுழலும் பார்வையை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரி செய்யும் புலமை, காணும் காட்சியை மூளைக்கு மொழி பெயர்க்கவும், மதிப்பீடு செய்யவும், நிறங்களை உடலுக்கும் நரம்புக்கும் ஏற்புடையதாக்கி சுற்றியுள்ள ஒளிக்கும் தூரத்திற்கும் ஏற்ப தகவல்களை தரும் விவேகம், திறமை - இவையெல்லாம் யாரும் உருவாக்காமல், திட்டமிட்டுத் தராமலே வரக் கூடுமா? அல்லது சிலர் கூறுவது போல, இத்தகைய கடுஞ்சிக்கலான ஒழுங்குமுறைகளை தற்செயலான மரபணு மாற்றங்களோ அல்லது பரிணாமமோ உருவாக்கியிருக்க முடியுமா?

சுத்தமாக இருக்கும் ஒரு வெள்ளை சுவற்றில் பல்வேறு நிறங்களை பீய்ச்சி அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வர்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை போன்றோ, பறவை போன்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் போன்றோ கூட தோன்றலாம். ஆனால் அவை யாவும் கலந்து திடீரென மோனலிசா போன்றாயிடுமா? அல்லது ஒரு கலைஞனின் திறமையும் முயற்சியும் இன்றி ஒரு மோனலிசா ஓவியம் வந்து விடக் கூடுமா?

சகோ...ஒவ்வொரு பாகமாக பார்த்துப் பார்த்து செதுக்கியது போன்றுள்ள நம் உடல், அந்த மோனலிசா ஓவியத்தை விட மிக சிக்கலான பாகங்களையும் நுணுக்கங்களையும் கொண்டது இல்லையா? அப்படி இருக்கையில், இந்த உடம்பின் அமைப்பும், அழகும், நுட்பமும் எவரின் ஞானமும் இல்லாமல் இப்படியே உருவாகிவிட்டது என்று நம்புவது எந்த விதத்தில் பகுத்தறிவாகும் சொல்லுங்கள் ??? 

இந்தப் பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்வோமே... நாம் வாழும் பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களைப் போன்றதொரு கோள். நம் சூரிய மண்டலமும் பால் வீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மண்டலங்களில் ஒன்று. நாம் வாழும் பால் வீதி மண்டலமும் அதைப்போல் எண்ணிக்கையில் அடங்காத பால்வீதிகளில் ஒன்று. மொத்த பிரபஞ்சத்திலும் இது போல் லட்சக்கணக்கில் பால்வீதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரம் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் ஒரு உன்னதமான ஒழுங்கும் நுட்பமும் கலந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  

இன்றைய தேதியில் இன்னும் பல வருடங்களுக்கு பின் வர இருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் கூட இன்றே கணிக்க முடிகிறதே... எப்படி இது சாத்தியம்?  

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையுங்கூட இன்னும் 200 வருடங்களுக்கு இன்றே, இப்போதே கணிக்க முடியும். இவையெல்லாம் எப்படி முடிகிறது?  

அந்தப் பால்வீதியிலும், எண்ண இயலாத நட்சத்திரங்களிலும் கோள்களிலும், அவற்றின் அசைவிலும், சுழற்சியிலும் உள்ள ஒழுங்கால், அந்த நேர்த்தி மாறாது என்னும் நம்பிக்கையால்...  

இவையெல்லாம் பறை சாற்றுவது என்ன???  இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவனின் நேர்த்தியான கலைத்திறன் மற்றும் இதைப் பற்றியுள்ள உன்னதமான அறிவு.


அணுவளவும் பிறழாத ஒழுங்கும், அலாதியான அழகுடனும் விளங்கும் இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்து விட்டதாக நினைக்க முடிகிறதா சகோ? 

திடீரென நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பில் இத்தனை சிக்கலான ஒரு அமைப்பு வந்து விட முடியுமா?  தானாக வாய்த்து விடுமா?

நிகழ்வாய்ப்பில் ஒரு உதாரணம் சொல்லவா?  வெவ்வேறு நிறங்களாலான 10 கோலிக்குண்டுகளை வரிசைப்படுத்தி ஒரு பையில் போட்டு நன்றாக குலுக்குங்கள். அதன் பின் கண்களை மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து பத்து வரையான கோலிக்குண்டுகளை வரிசை தவறாமல் எடுக்க வேண்டும். முடியுமா? அதற்கான வாய்ப்புகள் எத்தனை தெரியுமா? இரண்டு கோடியே அறுபது லட்ச வாய்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பு (2,60,00,000 to 1) மட்டுமே. 

10 கோலிக்குண்டுகளுக்கு மட்டுமே இந்த நிலை எனில், லட்சோப லட்ச நட்சத்திரங்களும், கோள்களும், சம கால நிகழ்வில் இத்தனை துல்லியமான நேர்த்தியுடனும், ஒரு இனிய பல்லியத்துடனும் தற்செயலாக இயங்க எத்தனை வாய்ப்புகள் உண்டு, சொல்லுங்கள்???? 

பதில்????......................பூஜ்ஜியம்தான்!!!!

இந்த சிறிய உதாரணமே போதுமானதாக இல்லையா படைத்தவனின் இருப்பை விளக்க?????

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)





.

25 comments:

  1. சலாம் சகோ அன்னு,

    ரொம்ப அருமையா logical கேள்விகளோட கடவுளின் இருப்பை நிலை நாட்டி உள்ளீர்கள்... இந்த கட்டுரை நாத்திகவாதி ஒருவருக்காவது மன மாற்றத்தை தரும் என்று நம்புவோம்...

    ReplyDelete
  2. நண்பரே,
    கொஞ்சம் சிந்தித்தாலே நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும்.
    பிரபஞ்சத்தின் ஒழுங்கு நிலை மாறாத அத்தனை நிகழ்வுகளுக்கும், ஆக்கங்களுக்கும் ஒரே ஒருவர்தான் [கடவுள்] மூலகாரணம் என்கிறார்களே, ‘அனைத்திற்கும் காரணகர்த்தா ‘ஒருவர்தான்’ என்று கண்டறியப்பட்டது எப்படி?
    அதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் என்ன?
    கடவுள் நம்பிகையாளர்களிடம் நாம் கேட்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்..............
    கடவுள் நம்பிக்கையால் மனித இனத்துக்கும்...மற்ற உயிரினங்களுக்கும் விளைந்த நன்மைகள் என்ன?
    அந்த நன்மைகள் கடவுளால்தான் விளைந்தன என்பதற்கு ஆதாரங்கள் எவை?
    ஒரு பட்டியலிடுங்கள்.
    நாத்திகவாதிகள் தெரிந்து கொள்ளட்டும்; திருந்தட்டும்!

    இன்னொரு துணைக் கேள்விக்கும் பதில் தாருங்கள்.
    ஆத்திகர்களால் விளைந்த தீங்குகளுடன் நாத்திகர்களால் விளைந்த தீமைகளையும் ஒரே ஒரு முறை ஒப்பிட்டுப் பார்ர்ப்பீர்களா?

    ReplyDelete
  3. நல்ல பதிவு...சிந்திக்கக் கூடிய விடயங்களை அழகாக கூறியிருக்கிறீர்கள்..பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. Masha allah good post keep it up!
    Allah with us!

    ReplyDelete
  5. பரிணாம வளர்ச்சி பற்றி சிந்தித்து படிக்க எப்படி மனிதன் உருவானான் என்பது விளங்கும்.
    மனிதன் இன்னும் சில நூறு வருடங்களில் வேறு மாதிரி இருக்க வாய்ப்பு உள்ளது. அது இயற்கையின் கையில்.
    திருப்பி திருப்பி துதி பாடுவதால் கடவுளுக்கு வெட்கமாக இருக்காது?
    மனிதனை அடிமை படுத்தவா கடவுள் தேவை..
    சுய நலம் என்ற ஒன்றை ஊக்குவிப்பதை தவிர என்ன பயன் ?
    அவரவர் விருப்பம் என்று விடுவதே சரி என படுகிறது இரவு பகல் போல.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சகோ அன்னு.,
    மாஷா அல்லாஹ்
    எதார்த்த மேற்கோள்களோடு எளிதாக புரியும் வண்ணம் இருக்கிறது இந்த ஆக்கம்

    இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  7. அருமையா இருக்கு அன்னு

    ஒவ்வொரு உதாரணம் மூலம் அழகாய் கடவுளின் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கீங்க.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  8. சார்வகான் said...

    இந்த பதிவு எனக்கு பிடிக்கல. நா மைனஸ் ஓட்டு போட்டுட்டேன்

    (ஹி..ஹி..ஹி.. இப்படி வருமே? இன்னுமா வரல அவ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  9. அறிய தகவல்களை அழகுற சொல்லும் பதிவு , பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  10. அன்பு சகோ முனைவர் பரமசிவம்.,
    உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

    இது சகோ அன்னு தளம் என்பதால் எதற்கும் அவர் பதில் தருவதே பொருத்தமானது என்றாலும்

    == கடவுள் நம்பிகையாளர்களிடம் நாம் கேட்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்..............
    கடவுள் நம்பிக்கையால் மனித இனத்துக்கும்...மற்ற உயிரினங்களுக்கும் விளைந்த நன்மைகள் என்ன?
    அந்த நன்மைகள் கடவுளால்தான் விளைந்தன என்பதற்கு ஆதாரங்கள் எவை?
    ஒரு பட்டியலிடுங்கள்.
    ==

    இப்படி
    கடவுள் நம்பிகையாளர்களிடம் நாம் கேட்கிற கேள்வி
    என்று கேட்டிருப்பதால்
    நானும் அந்த வட்டத்திற்குள் இருப்பதால் என்னின் சில விளக்கங்கள் இங்கே

    சகோ நாம் விமர்சிக்கும் எதுவாயினும் அதன் மூலத்தை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். அந்த வகையில் கடவுளை ஏற்கவோ மறுக்கவோ செய்தால் கடவுள் குறித்து நாம் தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.

    ஆனால் கடவுளை விமர்சிக்கும் சிலர் பொதுப்பார்வையில் அறியப்படும் கடவுள் குறித்த கற்பிதங்களோடு தான் விமர்சிக்க முற்படுகிறார்கள்.
    ஆக உண்மையான கடவுள் குறித்த கோட்பாடுகள் விமர்சிக்கும் நமக்கு தெரியவேண்டும். அப்படிப்பட்ட நிலையோடு விமர்சித்தால் அது நலம்

    அடுத்து அறிவியல் ஆதாரம்...?
    ம்...தொடர்கிறேன்

    ReplyDelete
  11. சகோ முனைவர் பரமசிவம்

    =
    பிரபஞ்சத்தின் ஒழுங்கு நிலை மாறாத அத்தனை நிகழ்வுகளுக்கும், ஆக்கங்களுக்கும் ஒரே ஒருவர்தான் [கடவுள்] மூலகாரணம் என்கிறார்களே, ‘அனைத்திற்கும் காரணகர்த்தா ‘ஒருவர்தான்’ என்று கண்டறியப்பட்டது எப்படி?
    அதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் என்ன?
    ==

    உங்கள் கருத்தை நீங்களே மறுமுறை படித்துப்பாருங்கள்
    தெளிவாக நூறு சதவிகிதம் காரண காரியத்தோடு உலக உருவாக்கம் ஆதார சான்றுகளோடு நிருபிக்கப்பட்டால் இங்கே கடவுள் குறித்த க்ருத்து பரிமாற்றத்திற்கு வேலையே இல்லையென சொல்லலாமே...?

    பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அந்நிலைக்கு அப்பால் விவரிக்க வழியின்றி நிற்கிறது.

    இதற்கு என்ன சொல்கிறீர்கள் சகோ?
    எந்த செயலுக்கும் காரண காரியத்தை ஆய்வுரீதியாக அணுகி அதை மெய்படுத்தி உலகிற்கு சொல்வதே அறிவியல். அப்படிப்பட்ட அறிவியலை நீங்கள் ஏற்றுதான் கட்வுளை மறுத்தீர்களேன்றால்

    மேற்கண்ட மெய்படுத்தாத அறிவியல் நிலையே வைத்துக்கொண்டு கடவுளை மறுக்கும் நீங்கள் தான் உலக உருவாக்கத்திற்கு அறிவியல்(?) ஆதாரம் தரவேண்டும்..

    உங்களின் துணைக்கேள்விக்கு இந்த சுட்டி பதில் தருமென நினைக்கிறேன் - இன்ஷா அல்லாஹ்
    http://www.naanmuslim.com/2012/01/blog-post_17.html


    மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  12. ஸலாம் சகோ அன்னு...
    அருமையான உதாரணப்பொருள்கள்...அவற்றை சிறப்பாக விவரித்துள்ளீர்கள்..
    மனிதன் சிந்தித்துணர பூமியில் அனேக அத்தாட்சிகள் இருப்பதாக அல்லாஹ் சொல்கிறானே...
    இதைப் போன்றே நானும் ஒரு கட்டுரை எழுத நினைத்திருந்தேன்...

    கண்கள்/மூளை குறித்த மேலும் ஒரு செய்தி..நமது கண்ணில் ரெட்டினாவில் விழும் பிம்பம் ஆனது தலைகீழ் பிம்பம்...அதை நாம் எந்த சூழலிலும் உணர்ந்ததே இல்லை..அதனை அப்படியே திருப்பி,நேராக்கி அடுத்த மைக்ரோநொடி,அல்லது இதைவிட குறைவான நேரம் இருக்கிறதா...இல்லை நேரம் எடுத்துக்கொள்ளாமலே அதை சரி செய்து நமக்கு அளிக்கிறதா...விளங்கவில்லை...

    அதையும் தாண்டி மூளை,ஒரு பார்வையில்,ஒரு சப்தத்தில்,ஒரு வாசனையில்,ஒரு தீண்டலில்,ஒரு சுவையில் என ஒரு நொடி விஷயத்தில் இருந்து எத்துனை விசயங்களை பகுத்தாய்ந்து நம்முன் வைக்கிறது.. மாஷா அல்லாஹ்..
    அல்லாஹ் பெரியவன்...
    அவனே மாபெரும் படைப்பாளி என்றே சொல்லத்தோன்றுகிறது...

    இவை அனைத்தையும் செய்யும் உடலை பகுத்தால்..70 சதம் நீரும் 30 சதம் திடப்பொருளுமே மிஞ்சும்..இவைகளை வைக்கவேண்டிய இடத்தில்,வைக்க வேண்டிய வகையில் வைத்து செயல்படும் திறன் கொடுத்து இயங்க வைத்த வல்லோனுக்கே அனைத்துப் புகழும்...

    வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் சகோ...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு!, இறைவனின் இருப்பை அறிந்துகொள்ள உதவும் காரண காரியங்களை அருமையாக விளக்கியுள்ளீர்கள், இறைவன் மிகப் பெரியவன்!..

    தங்களின் இப்பணிக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக..

    ReplyDelete
  14. ஏன் ஒரு கடவுள்தான் இருக்கவேண்டுமா? பல கடவுள்கள் சேர்ந்து இந்த உலகை..இந்த பிரபஞ்சத்தைப் படைதிருக்கக்கூடாதா? பலரின் கூட்டு முயற்சியால் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று ஏன் நம்பமுடியவில்லை.

    ReplyDelete
  15. சலாம் சகோ அன்னு!

    அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லாஹ்.. அனைவரும் எளிதில் புரியும் படியாக இறையின் படைப்பை விவரித்திருப்பது அருமை..

    வாழ்த்துக்கள் சகோ..:-))

    ReplyDelete
  17. @சிராஜ் பாய்,
    வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
    சரியாக சொன்னீங்க பாய். ஒரு நாத்திகராவது இதைப் படித்த பின் உண்மையை புரிந்து கொண்டாலே போதும் இன்ஷா அல்லாஹ். அப்படியே நம்புவோம். நன்றி :)

    ReplyDelete
  18. @முனைவர் பரமசிவம் சார்,

    சரியான கேள்வி கேட்டீங்க. இந்த ஒழுங்கு நிலை மாறாமலும் அதே நேரம் அத்தனை பிரம்மாண்டமான அமைப்பும் துளி கூட தம் புரளாமல் வேலை செய்ய ஒரு கன்ட்ரோல் வேண்டும் இல்லையா. அந்த கண்ட்ரோல் ஒரு கடவுளாக இருக்க வேண்டியதில்லை, ஒரு சக்தியாக, உந்து சக்தியாக இருந்தால் கூட போதுமானதுதான். ஆனால், இறைவனாக இருக்க வேண்டி நாம் ஏன் யோசிக்கிறோம், சொல்லுங்கள்??? ஏனெனில் இறைவனின் வேலை கட்டுமானத்துறையோ அறிவியல் துறையோ மட்டுமல்ல. அருள் புரிவதற்கும், தீர்ப்பளிக்கவும் இன்னும் படைக்கவும், படைத்தவற்றை பரிபாலிக்கவும் தேவை. ஆயிரம் ஆயிரம் இன்டெல் சிப் வைத்து செய்தாலும் இதே போன்றதொரு செயற்கை அமைப்பை உருவாக்க முடியுமே தவிர ஒரு உயிரை உருவாக்க முடியாது. அந்த உயிரை ரட்சிக்கவோ, அதனுடைய டி.என்.ஏவை எழுதி வைக்கவோ, அந்த உயிர் தவறு செய்தால், எப்பொழுது தண்டனை அளிக்கலாம், எதுவரை மன்னிக்கலாம் என்றோ விதிகளை வகுக்க இயலாது. இப்படி ஒரே நேரத்தில் கோடிகளில் வாழும் உயிர்களை கவனிக்கவும், பரிபாலிக்கவும் தேவைப்படும் கன்ட்ரோல், இவை எல்லாவற்றையும் விட வலிமை கொண்டதாய் இருக்க வேண்டும், தானே சிந்திக்க திறம்பட செயல்படவும் வேண்டும். இதற்குதான் இறைவன் என்று பெயர். குழந்தைக்கு அடிபட்டால் தாய் ஏன் துடிக்கிறாள் என்பதை எந்த அறிவியலும் சொல்லாது. பகுத்தறிவு மட்டுமே விடை சொல்லும். அதுபோல் எல்லா விஷயங்களிலும் அறிவியலை அழைக்க முடியாது. சரியா?

    // கடவுள் நம்பிக்கையால் மனித இனத்துக்கும்...மற்ற உயிரினங்களுக்கும் விளைந்த நன்மைகள் என்ன?//
    இதற்கு பதிலாக ஒரு கேள்வி கேட்கிறேன். அன்னை தெரசா ஆகட்டும், விவேகானந்தர் ஆகட்டும், அல்லது மகாத்மா காந்தியே ஆகட்டும். இவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே. துன்பப்படுபவர்க்கு உதவுவதில் இறைவனின் அருளைப்பெறலாம் என்று நினைத்தவர்கள். அது போல இன்றும் எல்லா திசைகளிலும் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். அடிப்படைக்காரணம் என்ன , நாம் ஒருவருக்கு உதவினால், இறைவன் நமக்கு உதவுவான் என்னும் நம்பிக்கை. இது போல எவ்வளவு பேரை நாத்திக உலகிலிருந்து நீங்கள் தர முடியும்? கடவுளின் பயம் இருப்பதாலும், அவனின் நெருக்கத்தை பெற வேண்டும் என்கிற நினைப்பாலும் மக்கள் நன்மை செய்ய விளைகின்றனர். அந்த பயம் இல்லாதவர்கள், அந்த மோட்ச நிலை வேண்டும் என்ரு நினைக்காதவர்கள் ஏன் இப்படி சேவை செய்வார்கள்? எத்தனை பேர், எத்தனை டிரஸ்ட் நமக்கு தெரியும் அப்படி நாத்திகர்க்ளுடையது?? எய்ட்ஸ் நோயாளிகளையும், சுனாமியில் வீடு உறவு இழந்தவர்களையும் அரவணைக்க எந்த நாத்திக சமுதாயம் முன் வந்தது? ஏன் வரவில்லை?? இந்தப் ப்ரபஞ்சத்தின் ஒழுங்கு அமைப்பிலும் வேகத்திலும் மட்டுமல்ல. இறை பயத்தில் வாழும் மனிதர்களின் செயல்களையும் பொறுத்துத்தான் இருக்கிறது.

    //ஆத்திகர்களால் விளைந்த தீங்குகளுடன் நாத்திகர்களால் விளைந்த தீமைகளையும் ஒரே ஒரு முறை ஒப்பிட்டுப் பார்ர்ப்பீர்களா?//
    கண்டிப்பாக. மிக கண்டிப்பாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பரிணாமவாதிகளின் ஸ்தாபகர், சார்லஸ் டார்வின் ஒரு நாத்திகர்தான். (அவர் ஆத்திகர் என்பதற்கு ஆதாரங்கள் எங்கே?? காண்பியுங்கள் பார்க்கலாம்..) நாத்திகராய் இருந்த காரணத்தினாலேயே இத்தனை விரிவான், ஒழுங்கான, அழகான அமைப்புடன் கூடிய பிரபஞ்சத்தை யாரும் படைக்கவில்லை, இயற்கை தானாய் அமைத்துக் கொண்டது என்று கூற முடிந்தது. அதனால் விளைந்த தீமைகள் ஒன்றா இரண்டா?? ஹிட்லரின் கொள்கைகள் அனைத்திற்கும் அடிப்படி டார்வினின் தியரி. நாஜிஸ்ம், கம்யூனிஸ்ம் என்று மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் எல்லா இஸமும் அதிலிருந்து வந்ததுதான். உலக மக்களை எல்லாம் சுலபமாக இரு வகைப்படுத்தியது டார்வினிஸ்ம். 'வாழக்கூடியவர்கள்' / 'வாழத்தகுதியற்றவர்கள்'... இந்த கொள்கையையே இன்று எல்லா நிலைகளிலும் மதங்களிலும் காண்கிறோம். அமெரிக்காவின் ரேசிஸ்ம் முதற்கொண்டு இந்தியாவின் வர்ணாசிரமம் வரை எல்லையில்லாமல் பாய்ந்திருக்கும் இந்தத் தீமையை அகற்ற முடியுமா சொல்லுங்கள்???? ஆத்திகர்களின் தீங்குகள் இதற்கு எதிரில் நிற்கக்கூட முடியாதே?? ஆத்திகர்களின் தீங்காய் எதை சொல்லலாம்? நரபலி தருவது முதல், வேறு மார்க்கத்தை சேர்ந்தவர்களை வேறோடு அறுப்பது வரை. ஆனால் இதன் மூலமும் பரிணாமக்கொள்கையிலிருந்து வந்ததுதான். "survival of the fittest".... or "survival of the fittest religion" அல்லவா?? உண்மையான ஆத்திகர் யாரும் மனிதரை தரமிறக்க மாட்டார். நான் பெரியவன் நீ சிறியவன் என்னும் பதத்தை உபயோகிக்க மாட்டார். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்பதையும், அவரவர் செயல்களைப் பொறுத்தே ஏற்றமும் தாழ்வும் என்பதை சொல்லிலும் செயலிலும் காட்டுவார்.

    மேலே உள்ள பதிலில் குறை ஏதேனும் இருந்தாலோ, மேல்விளக்கம் தேவை என்றாலோ கண்டிப்பாக கேளுங்கள். நன்றி :)

    ReplyDelete
  19. @stalin wesley,
    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ. :)

    @சிட்டுக்குருவி,
    வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ. :)

    @ஜாஃபர் கான் பாய்,
    அஸ் ஸலாமு அலைக்கும்,
    வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ. :)

    ReplyDelete
  20. @ssk,
    //பரிணாம வளர்ச்சி பற்றி சிந்தித்து படிக்க எப்படி மனிதன் உருவானான் என்பது விளங்கும்.
    மனிதன் இன்னும் சில நூறு வருடங்களில் வேறு மாதிரி இருக்க வாய்ப்பு உள்ளது. அது இயற்கையின் கையில்.//
    உங்க கருத்துப்படியே மனிதன் குரங்கிலிருந்து உருவானான் என்று வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கும் (இது கம்மி அளவுதான் என்றாலும்...) மேலாக இன்னமும் அப்படியேதான் மனிதனும் உள்ளான், குரங்கும் உள்ளது. இரண்டாயிரம் வருடமாக இருக்கும் இந்த உடலமைப்பு திடீரென இன்னும் நூறு வருடத்தில் மாறிடும் என்பதற்கு என்ன சாட்சி? படிப்படியாக மாறுவதாகத்தானே பரிணாமமும் கூறுகிறது. அப்படியிருக்க, நூறு வருடங்களுக்கு பிறகு, ஒரு ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சடாரென எல்லாம் மாறி விடுமா சகோ?? அப்படி இல்லை என்றால், இத்தனை வருடங்களில் மனிதனின் உடலமைப்பில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது, இன்னமும் எப்படி இருக்கும் என்று ஒரு தெளிவான பதிவு ஆதாரங்களுடன் போடுங்களேன்.

    //திருப்பி திருப்பி துதி பாடுவதால் கடவுளுக்கு வெட்கமாக இருக்காது?
    மனிதனை அடிமை படுத்தவா கடவுள் தேவை..//
    கடவுளுக்கு புகழோ, புரட்டோ, மலர் வளையமோ தேவை இல்லை. திருமறை குர்'ஆனில் கூறப்படுவது போல் "வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்." (31:26-27) பின் எதற்கு தொழுகையும், பிரார்த்தனைகளும், திக்ருக்களும் என்று கேள்வி வரும். எப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தரத்துக்கோ, செயல்பாட்டிற்கோ அளவுகோல் உள்ளதோ அதுபோல் மனிதன் ஒரு லிமிட்டில் கன்ட்ரோலில் இருக்கவே, அந்த கன்ட்ரோலுக்குள் இருக்கிறோமா என்று தானாக தெரிந்து கொள்ளவே இந்த தொழுகை, பிரார்த்தனை. ஒவ்வொரு தடவையும் பரீட்சை எழுதும்போது, நன்றாக மார்க் வர வேண்டும், தந்தை தாய் முன் பெருமையுடன் மார்க் ஷீட்டை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறோம் இல்லையா?? அது போல ஒரு மனப்பான்மையை கொண்டுவரவே இறைவன் முன் அடிக்கடி நிற்பதும், அதுபோல் எண்ணுவதும். இது அடிமைப்படுத்துதல் அல்ல. மார்க் சரியாக வாங்காவிட்டால் இம்போசிஷன் தருவதும், அடிப்பதும் அடிமைப்படுத்துதலா? இல்லை... மாணவனை ஒழுங்குள்ளவனாக மாற்ற எடுக்கும் பாடங்கள் அவை. மனிதன் குரங்கிலிருந்து வந்ததற்கு ஆதாரமில்லை, ஆனால் மனித மனம் குரங்கை ஒத்துதான் இருக்கிறது. அந்த அலைபாய்வதை தடுக்கவே இறைவனின் நினைப்பை ஒரு குறிப்பிட்ட தவணையில் அடிக்கடி செக் செய்கிறோம்.

    //சுய நலம் என்ற ஒன்றை ஊக்குவிப்பதை தவிர என்ன பயன் ?
    அவரவர் விருப்பம் என்று விடுவதே சரி என படுகிறது இரவு பகல் போல.////
    எது சுய நலம்? உங்களுக்கு பிடித்தமான ஒரு உணவு எல்லோருக்கும் பிடிக்குமா? உங்களுக்கு பிடித்த படம் / உணவு எல்லோருக்கும் பிடிக்குமா?? அனைவரும் 9 மணிக்கு ஆஜராகும் ஆஃபீசில் நான் மட்டும் 11:45க்குதான் வருவேன் என்று உங்களால் கூற முடியுமா?? அதை அனுமதிப்பார்களா?? அம்மை போட்டிருக்கும் ஒரு மனிதனை, இல்லை, இது நான் புதிதாக கட்டியிருக்கும் மருத்துவமனை, வேறெங்கிலும் கொண்டு சேருங்கள் என்று ஒரு டாக்டர் கூற முடியுமா? ஏன் கூறக்கூடாது?? சுயநலம் என்பது மனிதன் சமூகத்தில் மேம்பட்டு வாழ பயன்பட வேண்டுமே தவிர நிர்க்கதியில் விடப்படும் அளவிற்கு அல்ல. அவரவர் விருப்பம் என்று இருந்தால் இரவு பகலும் வராது சகோ?? ஒரு ஒழுங்கை வைத்திருப்பதாலும், அதன் அளவுகோல் இறைவனிடத்தில் இருப்பதாலும் தான் இரவு பகலும் ஒழுங்காய் வருகிறது. அமெரிக்காவில் தேர்தல் நடக்கிறது. அதனால் இன்னும் 5 மணி நேரம் எக்ஸ்ட்ராவாக உழைக்கிறேன் என்று சூரியன் வேலை செய்தால் பூமி தாங்குமா சகோ?? வரம்புகள் என்பது அடிமைத்தனத்தை உருவாக்க அல்ல. எல்லோரும் இயைந்து வாழும் ஒரு சூழ் நிலையை உருவாக்க.

    இறைவன் நாடினால் மேலிருக்கும் பதில்களில் ஒன்றாவது உங்கள் மன நிலையை மாற்றட்டும். வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  21. @குலாம் தம்பீ,
    வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
    என் தளம் உன் தளம் என்றில்லை. நமக்கு தெரிந்த, புரிந்த விஷயத்தை எங்கே வேண்டுமானாலும் தெரிய / தெளிய வைக்கலாம் என்பதே என் எண்ணம். இன்ஷா அல்லாஹ்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி. :)

    @ஆமினா,
    ஏங்க ஆமினா இந்த கொல வெறி???? ஆனாலும் சும்ம சொல்லக்கூடாது ஒரே ஒரு எழுத்தை மாத்திப்போட்டு சார்வாகன் சாரை 'கான்' ஆக்கிட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க :))

    @சசிகலா சகோ,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி :)தொடர்ந்து வருகை தாருங்கள் :)

    @ரஜின் பாய்,
    வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
    கண்டிப்பாக கண்களைப் பற்றியும் அதன் பின்னிருக்கும் அறிவியலைப் பற்றியும் எழுதுங்கள். பல விஷயங்களை நாம் take it for granted ஆக எடுத்துக் கொள்கிறோம். அதனால்தான் இறைவனைப் பற்றிய வாக்குவாதங்கள் இந்தளவு இருக்கின்றன. நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளையும், அதன் இன்பத்தை நமக்கு தரும் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் கவனமாக சிந்தித்தாலே இன்ஷா அல்லாஹ் இறைவனின் இருப்பு புரிந்துவிடும். கண்டிப்பாக எழுதுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி :)

    ReplyDelete
  22. @ராவணன் சகோ,
    உங்களின் கேள்வி நியாயமானதுதான். முதலில், இறைவன் என்ற சொல்லிற்கு விளக்கம் தாருங்கள். ஒரு வரையறைக்குள் இருப்பதாலேயே, ஒரு தனித்துவத்தை கொண்டதாலேயே ஒவ்வொரு நாட்டையும் நாம் பிரிக்கிறோம், ஒவ்வொரு மொழியையும், ஒவ்வொரு மொழி பேசும் சமூகத்தையும், அந்த வரையறை இல்லாமல் போகும்போது அனைத்தும் சேர்ந்து ஒன்றானதாக ஆகிவிடும் அல்லவா?? அப்பொழுது ஒன்றுதானே மிஞ்சும்? அது போல் வரையறை இல்லாத ஒரு பெரும் சக்தியை ஒரு இறைவனாக மட்டும்தானே நாம் எண்ண இயலும்? மேலும், மற்ற சமூகங்களில் இருப்பது போல, பல கடவுள்கள் இருப்பினும், அக்கடவுள்களுக்கெல்லாம் தாய் / தந்தை / பாஸ் இன்னொரு பெரிய்ய்ய்ய கடவுள் என்றுதானே நம்புகிறோம். அந்த பெரிய்ய்ய்ய்ய ஒன்றையும் மீண்டும் கூற் போட்டால் என்னாவது?? தந்தை தண்டிப்பார் என்றால் தாயிடம் போகிறோம், பெற்றோர் இருவருமே கண்டிப்பார்கள் என்றால் உற்றாரிடம் ஒட்டுகிறோம். அப்படி மனிதன் ஒரு கடவுள் தண்டித்தால் இன்னொரு கடவுளை சரண் அடையலாம் என நினைத்தால் அங்கே இறை பயத்திற்கு வேலை ஏது? இறை நெருக்கத்தை அடைய நேர்மையான வழி ஏது?? குறுக்கு வழிகளைத்தானே மனம் தேடும்?? இல்லை என்பவர்களுக்கு ஒரு சாம்பிள் இதோ, இதே போன்றதொரு கேள்வி கேட்கப்பட்ட இடத்தில் இருந்த வாக்குவாதம்:
    Person One: Post Number:#12 PostApril 22nd, 2007, 12:59 am
    Oh yeah, plus if there's more than one god, he'd might want to trick us into thinking the others don't exist.

    Person Two:Post Number:#13 PostApril 22nd, 2007, 1:03 am
    Hahahaha! Well, if that were the case, then I probably wouldn't trust such a competitive being!

    unique ஆன பொருள் என்றாலே அதை போன்று மற்றொரு பொருள் இருக்கக்கூடாது என்பதுதான் வரையறை. கடவுளின் விதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட சக்திகளுக்கு பொருந்துமாயின் அது எப்படி பின் இறைவன் ஆக முடியும்?? இங்கே இந்த இரண்டாம் நபர் சொல்வது போல மக்களின் கேலிக்குதான் ஆளாக முடியும். ந'ஊதுபில்லாஹ். எல்லாப் பொருளின் கருவும் ஒரே பொருளில் வந்து முடிவதே இயற்கையானது, ஒத்துக்கொள்ளக்கூடியது. ஒரே முட்டையை இரண்டு கோழிகள் சொந்தம் கொண்டாட முடியுமா? இரு பழங்களிலிருந்து ஒரே ஒரு விதை பாதிப் பாதியாக வருமா?? பின் இறைவனுக்கு மட்டும் ஏன் சொந்தம் தேடுகிறீர்கள். எம்மைப் பொறுத்தவரை, இறைவனுக்கு விளக்கம் இதுவே.

    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.(அவன்) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்'ஆன் 112:1-4)

    இந்த விளக்கத்தின்படி இருப்பவன் மட்டுமே இறைவன்.
    விளக்கங்கள் போதுமானபடியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  23. @சையத் இப்ராம்ஷா சகோ,
    தங்களின் து'ஆவிற்கு மிக மிக நன்றி.
    தொடர்ந்து வருகை தாருங்கள் :).

    @சுவனப்பிரியன் பாய்,
    வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
    பாராட்டுக்களுக்கு மிக மிக நன்றி பாய். :)

    @ஆயிஷா அக்கா,
    தங்கள் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிக மிக நன்றி :)

    ReplyDelete
  24. இறைவனே பாராட்டுக்கு உரியவன் சகோதரி. Excellent Post!. அருமையான விளக்கங்கள். Especially the probability example is a Blast! Unbelievable. மேலும் கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்கள்.

    Keep it up. உங்கள் பணியை ஏக இறைவன் ஏற்று, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் நற்கிருபை வழங்குவானாக. ஆமீன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...