ரிஸானாவின் இறுதி நிமிடங்கள்...

Tuesday, January 15, 2013 Anisha Yunus 17 Comments

கீழே இருக்கும் மடல், ரிஸானாவின் வழக்கில் முதலிலிருந்து கவனம் எடுத்த, இறுதி நிமிடங்களில் மௌன சாட்சியாய் இருந்த மௌலவி மக்தூம் அவர்களின் மடல், ரிஸானாவின் பெற்றோருக்கு. கண்டிப்பாக முழுதும் படியுங்கள். முந்தைய பதிவின் பல கேள்விகளுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும். இறைவன் நாடினால்!
அஸ்ஸலாமு அலைக்கும் :
றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, 
நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)
சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42


உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40


அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216


உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ

“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…

இப்படிக்கு
A J M மக்தூம்
 
நன்றி: 
சகோ.யாஸ்மின்,
lankamuslim.org
நாம் பெற வேண்டிய பாடம்:
முந்தைய பதிவுக்கும் இந்த மடலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது நேரில் தாமாக அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் மடல். என்னுடைய பதிவோ இணையத்தில் கிடைக்கும் ஆதாரங்களின் பெயரில் எழுதப்பட்டது. இதிலிருந்து ஒரு பெரிய கருத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அது, நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி எந்தளவு ஞானம் இருக்கிறதோ அந்த அளவே நாம் அதைப் பற்றி பேச வேண்டும். இல்லாததை அல்ல. மறைவான விஷயங்களின் ஞானம் இறைவனுக்கு மட்டுமே உரியது. எனவே நம் முடிவுகளை / Judgementsஐ பரப்புவதற்கும் இறைவனை அஞ்ச வேண்டும்.  
இப்போதும் என்னுடைய இறைஞ்சல் ஒன்றுதான். ரிஸானாவின் விஷயத்தில் யார் அநியாயக்காரர்களோ அவர்களை அல்லாஹ் தண்டிப்பானாக. அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும்போது அவர்களின் பாவங்களை மன்னிப்பானாக. அநியாயம் செய்யப்பட்டவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பன்மடங்கு நற்கூலியை தந்தருள்வானாக. அவர்களின் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும் அழகிய பொறுமையையும், அதற்கான நற்கூலியையும் தந்தருள்வானாக. 
நமக்கு தெளிவில்லாத விஷயத்தை பரப்புவதிலிருந்தும், தீர்ப்பளிப்பதிலிருந்தும் நம்மைக் காப்பானாக. ஆமீன்.

17 comments:

  1. /உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?/

    இச்சம்பவத்தில் மனஆறுதல் தருவது இந்த ஒரு விஷயம்தான்.... உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து வளர்ந்தவருக்கு உலகம் முழுவதிலிருந்தும் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் கிடைத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல.... எல்லாம் இறைவனின் நாட்டம்....ரிஸானா சவூதிக்கு வர எத்தனித்த நாளிலிருந்து இறுதிவரை பலர் செய்த தவறுகளின் விலை அவரின் உயிர்...... கப்ரிலும் மறுமையிலும் அவருக்கு அமைதி கிடைக்க இறைவனே போதுமானவன்.

    குறிப்பிட்ட அந்த பெற்றோர் அளிக்கத்தவறிய ஒரு மன்னிப்பினால் இன்று உலகலவில் இஸ்லாத்தினைப் பலர் கைநீட்டி கேள்வி எழுப்புகிறார்கள்.... இதன் விளைவுகளை இறைவனே மிக அறிந்தவன்.
    "94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
    94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது."

    வஸ்ஸலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ....

      தங்களின் து’ஆக்களுக்கு அல்லாஹ் போதுமானவன். இனியும் இது போல் நடக்காதவ்வாறு நம்மால் ஆனதை செய்ய முயற்சிப்போம் இன் ஷா அல்லாஹ்.

      Delete
  2. சலாம்! பதிவை படிக்கும் போதே கண்கள் குளமாகின்றன. அந்த பெண்ணுக்கு மறுமையில் சிறந்த இடத்தை இறைவன் அருள பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் பாய்.

      தங்களின் து’ஆவையும் இன்னும் ரிஸானாவிற்காக து’ஆ செய்த அனைவரின் து’ஆக்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.

      Delete
  3. //ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். //
    இது புதியத் தகவல். மேலும் இதுகுறித்தத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

    சென்ற பதிவின்போதே தெரிவிக்க நினைத்த கருத்துகள். அந்தப் பெற்றோரை நோக்கியும் குற்றம் சாட்டும் கைகள் நீளுகின்றன. ஏழு ஆண்டுகள் ஆகியும் அவர்களால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லையென்றால், அவர்கள் துக்கம் அத்தனை வலி மிகுந்ததாக இருக்கின்றது என்று(ம்) அர்த்தமாகிறதுதானே?

    4 மாதக் குழந்தைக்குப் பெற்றவள் பாலூட்டாமல், ஏன் பணிப்பெண்ணிடம் கொடுத்தாள் என்பதும் ஒரு கேள்வி. அதற்கான காரணத்தை அறிந்தவர்களல்லர் நாம். இன்றைய காலத்தில், வேலைக்குச் செல்வதால் தாய்ப்பாலையும் பாட்டிலில் சேமித்து வைத்துக் கொடுப்பவர்களையும் பார்க்கிறோம். சில காரணங்களால், பால் சுரக்காமல் போனவர்களையும் பார்க்கிறோம். என்ன காரணமோ, அந்தத் தாயே அறிவாள்.

    என்னைப் பொறுத்தவரை, பெண்களின்மீது குடும்பப் பொறுப்பு திணிக்கப்படுவது அடியோடு தடுக்கப்படவேண்டும். இதே சவூதியில், சில நாட்கள்முன்,வறுமையைக் காரணம் காட்டி, 80+ வயது ஆணுக்கு ஒரு 15+ பெண் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள். பிறகு கண்டனங்கள் எழுந்து, திருமணம் ரத்து செய்யபப்ட்டது.

    டெல்லிச் சம்பவத்தால், இன்று நாடெங்கும் ஏன் உலகமெங்கும் பெண்களின் மீதான வன்முறை குறித்து அடிமட்டம் வரை, ஒரு விழிப்புணர்வு எழுந்துள்ளது. இந்தியாவிலும் சட்டங்கள் திருத்தப்படவிருக்கின்றன. அதேபோல, இதனாலும் நல்ல விளைவுகளை இறைவன் நடியிருக்கலாம். இலங்கையிலிருந்து பணிப்பெண்கள் தனியே அனுப்பப்படுவது குறையலாம். ஆண்கள், குடும்பத்தைக் காக்கும் தன் கடமையை, பெண்களின்மீது கடத்துவதைத் தடுக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் அக்கா,

      உண்மைதான். ரிஸானாவின் விஷயத்தில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே போயுள்ளன. சவுதி கோர்ட்டும் அதற்கு இடமளித்திருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் என்ன செய்ய.... அந்தக் குழந்தையின் உயிரோ, ரிஸானாவின் உயிரோ திரும்பப் போவதில்லை. அல்லாஹ் இருவருக்கும் சுவர்க்கத்தின் பூஞ்சோலைகளைத் தரவும், இருவரின் குடும்பத்திற்கும் மனநிம்மதியையும், சாந்தியையும் அருளவும் பிரார்த்திப்போம் இன் ஷா அல்லாஹ்.

      Delete
  4. //அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்//

    என்ன ஒரு கண்டுபிடிப்பு! எல்லாரும் ஊருக்கு திரும்பிவரும் நோக்கில்தான் செல்கிறோம்.. ரிசானா மற்றும் சவூதியில் செட்டிலாகிடவா சென்றாள்.

    //அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது//

    இங்கே மீண்டும் மீண்டும் இந்த தண்டனைக்கு இந்த காரணமே சொல்லப்படுகிறது. சவூதி நீதித்துறை சரியான தீர்ப்பை வழங்கியிருந்தால் எதற்கு அந்த பெற்றோரிடம் கெஞ்ச வேண்டும். கண்மூடித்தனமா தீர்ப்பு வழங்குவாங்கலாம் பின்பு பெற்றோரிடம் மன்னிக்க சொல்லுவாங்கலாம்! இங்கே முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தையோ ஷரியா சட்டத்தையோ விமர்சிக்கவில்லை இந்த அநீதியான தீர்ப்பைதான் விமர்சிக்கிறோம். ரிசானா விடயத்தில் சவுதி நீதித்துறை சறுக்கிவிட்டது என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

    ReplyDelete
  5. //மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.//

    எங்கள் ஊர்களில் கோழியை அறுப்பதற்கு முன்னால் தண்ணீர் புகட்டுவார்கள்.அது போலவே!

    அடிமைகளின் உயிர்களின் மதிப்பு அரபிகளுக்கு புரிவதில்லை இதுவே இத்தீர்ர்ப்பு சொல்லும் பாடம்!

    இதைப்பற்றி நிறைய விவாதித்தாகிவிட்டது.. இனியும் இது போன்ற பதிவுகளை இணையத்தில் பரப்ப வேண்டாம்.

    ReplyDelete
  6. //சில நாட்கள்முன்,வறுமையைக் காரணம் காட்டி, 80+ வயது ஆணுக்கு ஒரு 15+ பெண் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.//

    இது போன்று வறுமையில் வாடும் சிறுமிகளை, எண்ணையினால் கிடைத்த செல்வத்தைக்கொண்டு திருமணம் என்ற பேரில் காம வெறியாட்டம் நடத்தும் சவூதி கிழட்டு அரபிகளுக்கும் சவூதி நீதித்துறை தக்க தண்டனை வழங்க வேண்டும் வழங்குமா?

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ ரியாஸ்....

      உங்களின் பின்னூட்டங்கள் எல்லாம் சவுதி அரசையே குற்றம் சொல்வதாக அமைந்துள்ளதில் மிக்க வருத்தம். முந்தைய பதிவில் கூறியது போலவே சவுதி நீதி மன்றத்துக்கும் அரசுக்கும் ஒரு தூரம் உள்ளது. அதைக் கடக்க முயன்றார்களா இல்லையா அல்லாஹ்விற்குத்தான் தெரியும்.


      மேலும் உங்கள் பின்னூட்டங்களில் Sarcasticism ஓங்கியுள்ளது, நல்லதற்கல்ல. இந்த சம்பவத்தை நேரில் பார்த்து, தேவையான முயற்சிகள் செய்து, உங்களின் எல்லா முயற்சிகளும் தடைபட்டுபோகையில் இப்படி நொந்து கொண்டால் அதில் ஓரளவேனும் உன்மை இருக்கக்கூடும். இப்படி எதிலும் பங்கு பெறாமல், பங்கு பெற்றவரின் முயற்சியையும், மனக்குமுறலையும் கேலிக்குள்ளாக்குவது இஸ்லாம் அல்ல. உம்முடைய சகோதரர் தவறு செய்தால் அதற்கு 70 முறை சந்தேகத்திற்கு இடம் கொடுத்து மன்னியுங்க்ள் எனக் கூறுகின்றது இஸ்லாம். மேலும் உங்களுக்கு தெளிவில்லாத விஷயத்தைப் பற்றியும் பேசாதீர்கள் என்கிறது இஸ்லாம். இதையெல்லாம் கருத்தில் வைத்து பின்னூட்டமிடுங்கள்.

      எல்லா அரபிகளும் தூயவர்கள் இல்லை.... அதே நேரத்தில் தூயவர்களும் இருக்கிறார்கள்...அவர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் உண்மை.

      அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி தரப் போதுமானவன். ஆமீன்.

      Delete
    2. //உம்முடைய சகோதரர் தவறு செய்தால் அதற்கு 70 முறை சந்தேகத்திற்கு இடம் கொடுத்து மன்னியுங்க்ள் எனக் கூறுகின்றது இஸ்லாம். மேலும் உங்களுக்கு தெளிவில்லாத விஷயத்தைப் பற்றியும் பேசாதீர்கள் என்கிறது இஸ்லாம்.//

      சபாஷ் சகோ! இதையேதான் நாங்கள் சவூதி நீதியரசர்களைப்பார்த்தும் கேட்கின்றோம்.. கொலையா? தற்செயலாக நடந்ததா? தவறுதலாக நடந்ததா ? மொத்தத்தில் இது ஒரு சந்தேகத்திடமான நிகழ்வு! அதற்கெல்லாம் மரன தண்டனை வழங்க முடியுமா?

      ஷரியாவின் பெயரில் வழங்கப்பட்டது என்பதற்காக வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்கிறீர்களா?

      எங்கள் ஊரிலும் வறுமைக்காக வேண்டி வேலைக்குச்சென்ற பெண்னை பினமாக திருப்பி அனுப்பினார்கள்.. நடந்தது விபத்து என்று கூறி, இதற்கெல்லாம் நாங்கள் யாரிடம் போய் நீதி கேட்பது!

      Delete
    3. //எல்லா அரபிகளும் தூயவர்கள் இல்லை.... அதே நேரத்தில் தூயவர்களும் இருக்கிறார்கள்...அவர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் உண்மை.//

      இங்கே எல்லா அரபிகளைப்பற்றியும் நான் குறைகூறவில்லை சகோ.. நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஒத்துக்கொள்கிறேன்.. அதைப்போல அளவுக்கதிகமான செல்வத்தைக்கொண்டு இஸ்லாமிய சட்டத்தை மீஸ் யூஸ் செய்யும் (சிறுமிகளை மணமுடிப்பது) அரபிகளைத்தான கடுமையாக சாடுகிறேன்..!

      Delete
    4. //எங்கள் ஊரிலும் வறுமைக்காக வேண்டி வேலைக்குச்சென்ற பெண்னை பினமாக திருப்பி அனுப்பினார்கள்.. நடந்தது விபத்து என்று கூறி, இதற்கெல்லாம் நாங்கள் யாரிடம் போய் நீதி கேட்பது!//

      இந்தக் கேள்வியை உங்களிடம்தான் கேட்க வேண்டும். இந்த ஆக்ரோஷத்தை உங்கள் ஊரில் ‘பைத்துல்மால்’ உருவாக்குவதில் காண்பித்தீர்களா.... கட்டாய ஜக்காத் கலெக்‌ஷன் செய்து ஏழைகளுக்கு வினியோகித்தீர்களா? அவர்களின் வறுமை போக்க, சுய வேலை வாய்ப்புக்கு வட்டியில்லா கடன் கிடைக்க உதவினீர்களா??? இதெல்லாம் செய்திருந்தால் ஏன் உங்கள் ஊர்ப் பெண் அரபுக்கு வீட்டு வேலை செய்யச் செல்கிறார்? அவர் போகும் முன் தடுத்தீர்களா? அவர் அப்படி போயே ஆக வேண்டிய காரணத்தை, அவர் போகும் முன்னரே ஆராய்ந்தீர்களா??? அதை சரி செய்ய விழைந்தீர்களா?? எந்தப் பெண்ணுக்காக கவலையுறுகிறீர்களோ அவரின் கஷ்டத்தில் அவர் பிணமாக ஆவதற்கு முன் எந்தளவு உதவினீர்கள்?

      இதெல்லாம் கேட்டு நான் சவுதியை சப்போர்ட் செய்யவில்லை.... காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது என்று தெரிந்த பின்பும் ஆட்டு மந்தைகள் போல அதே வருடம், அதே மாதம் அடுத்த பெண்ணை பலிகடாவாக்கும் கோழைகள் நாம்.... பின் எப்படி சவுதியைக் கேள்வி கேட்க விளைகிறீர்கள்? உலகத்தில் இருக்கும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல... உங்கள் ஊரிலேயே முதலில் இதற்கு தீர்வென்ன என்பதைப் பற்றி யோசியுங்கள். அமல்படுத்துங்கள். மற்ற ஊர்களுக்கு உதாரணமாக இருங்கள்.

      Delete
  7. ஒத்துக்கொள்கிறேன்! இலங்கை முஸ்லிம்கள் பெண்களை கடல்தாண்டி வேலைக்கனுப்பி பணம் சம்பாதிக்கும் இயலாமையையும் அறியாமையையும்!எந்தப்பெண்ணும் சுகபோகத்திற்காகவோ பொழுது போக்கிற்காகவோ அரபி வீட்டிற்கு செல்வதில்லை! இது ஒரு சமூக பிரச்சினை இதை நீங்களும் நானும் விவாதித்து ஓரிரு நாளில் தீர்த்துவிடமுடியாது. முன்பு போல் அல்லாமல் இப்போது பெருமளவு இலங்கை முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கனுப்புவதை குறைத்துக்கொண்டனர் இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறிது காலத்தில் முற்றிலும் நிறுத்தி விடுவார்கள்!

    ஆனாலும், ரிசானாவுக்கு ஏன் தண்டனை வழங்கினார்கள் என்ற கேள்விக்கு நீங்கள் சொன்ன எதுவும் ஒத்துவராது.! அதையும் புரிஞ்சுக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. சகோ...

      சவுதி நீதிமன்றம் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்பதையும் நான் மறுக்கவில்லை. கண்டிக்காமலும் விடவில்லை. அதற்கும் மேல் நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்??? என்னுடைய யோசனைகளை சவுதி அரசு ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னால் தெரியப்படுத்துங்கள் நான் யோசனைகளைக் கூறுகிறேன். என்னால் அப்படி செய்ய முடியாத போது வெறுமனே கோஷங்கள் போடுவதில் எனக்கு விருப்பமில்லை. அவ்வளவே என் புரிதல். :)

      Delete
  8. இல்லை சகோ! நான் உங்களை குற்றம் சொல்ல வரவில்லை!சவூதி அரசின் மீதுள்ள கொஞ்சம் கோபம்தான் காட்டமான பின்னூட்டங்களுக்கு காரணம்.. உங்கள் மனது கஷ்டப்பட்டால் மன்னித்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோ.... நானும் நீங்கள் காயப்படுத்தியதாக சொல்லவில்லை. கவலைப்பட வேண்டாம். நான் சொல்வது, இந்தக் கோபத்தை, கவலையை, வெற்றுக்கோஷங்களில் React செய்து காற்றில் விடாதீர்கள். மாறாக சரியான ஒரு தீர்வை திட்டமிட்டு, செயல்பட்டு, Respond செய்து காட்டுங்கள். உணர்ச்சி பூர்வமாக செயல்பட்டு நாம் இழந்தது ஏராளம், இனியாவது உணர்வூ பூர்வமாக சிந்திக்கத் தொடங்குவோம் இன் ஷா அல்லாஹ்.

      Delete

உங்கள் கருத்துக்கள்...