பாபரிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை.... ஒரு மீள்பார்வை

Thursday, December 06, 2012 Anisha Yunus 27 Comments

டிசம்பர் 6, 2012

[முன்குறிப்பு: பின்க் நிற எழுத்துக்களில் உள்ளவை - தொடர்புடைய சுட்டிகள் / லின்க்ஸ். அதில் சென்று மீத விவரங்களைப் படித்துக் கொள்ளலாம்.]

1992 ம் வருடம் ‘கரசேவகர்கள்’ என்னும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் ஒரு கூட்டம் பல்லாண்டு காலமாக முஸ்லிம்கள் இறைவனைத் தொழுது கொண்டிருந்த ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கி, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஒரு சேர கலகங்களை பற்ற வைத்த நாள். இன்றுடன் இருபது வருடங்களாகின்றது, இந்தக் கருப்பு நாளுக்கு.

வாருங்கள் பாக்கலாம் - ஒரு மீள்பார்வை இந்தியாவின் முகத்தை கருப்பாக்கிய இந்த விவகாரத்தில்... (நிகழ்கால சார்மினார், இன்னொரு பாப்ரி மஸ்ஜிதாய் ஆவதன் முன் :)

= = = = = =
ஏப்ரல் 21, 1526:
செங்கிஸ்கானின் வழிவந்த பேரரசர் பாபர் என்னும் ஜாஹிருத்தீன் முஹம்மது பாபர், லோடி சாம்ராஜ்யத்தின்(Lodhi dynasty) இறுதி சுல்தானான இப்றாஹீம் லோடியை, பானிபட்டில் நடந்த முதல் போரில் தோற்கடிக்கிறார். முகலாய சாம்ராஜ்யம் வட இந்தியாவில் நிறுவப்படுகிறது.

உஸ்பெக் தீவிரவாதியாய் இருந்த இவர் சாம்ராஜ்யம் நிறுவியபோது ‘Secular Ruler', (மதச்சார்பற்ற ஆட்சியாளர்) என்னும் பதத்திற்கே உதாரணமாய் இருந்தவர்.  அவரின் வாழ்வின் இறுதி நேரங்களில் கூட மதச்சார்பின்மையை தன் மகன் ஹுமாயூனுக்கு எத்தி வைத்தவர்.

= = = = = =
மார்ச் 17, 1527:
ஆக்ராவை அடுத்துள்ள கான்வாவில் சித்தோர்கரின் ராஜ்புத் ராஜா ரானா சங்ராம் சிங்கை ’கான்வா போரில்’( Battle of Khanwa ) தோற்கடிக்கிறார். இதன் மூலம் பாபரின் முகலாய அரசு வட இந்தியாவில் வலுப்பெறுகிறது. 

= = = = = =
1528:
பாபரின் தளபதி மிர்பாகி கான் (Mir Baqi Khan), அயோத்தியில ஒரு மசூதியைக் கட்டுகிறாராம். ராமன் பிறந்த இடம் என சில இந்துக்களால் தற்போது நம்பப்படும் ஓரிடத்தில்....(**பின்னாளில் 2010இல் சமர்ப்பிக்கப்படும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ASI REPORTS இதை மறுக்கின்றன. இதை தற்போது மெய்ப்பிக்க நாஸாவின் மென்பொருளைக்கூட காட்டுகின்றனர். மெய்யாலுமா :)))

ஏற்கனவே இருந்த ஒரு ஹிந்துக் கோயிலை✝  (!!!!)  இடித்து விட்டு மசூதியைக் கட்டுகிறாராம். இந்த மசூதியே பின்னாளில் மஸ்ஜித்-ஏ-ஜனம்ஸ்தான் (பிறந்த இடத்தின் பள்ளிவாசல்)(யார் பிறந்த இடத்தின்??? ஓ!!!) ... அல்லது.... மிர்பாகியின் மஸ்ஜித் அல்லது பாப்ரி மஸ்ஜித் என்றழைக்கப்படுகிறதாம். உண்மையிலேயே இவ்விடத்தில் அதற்கு முன் ஏதும் கோவில் இருந்ததா?

1528க்கு முன்னர் அயோத்திக்கு உரிமை கொண்டாடிய பல்வேறு மதக் குழுக்கள் இருந்ததற்கான சான்றுகளைக் காணலாம். 3000 பவுத்த துறவிகள் மற்றும் நூறு மடங்கள் இருந்ததாகவும், பிராமணீய மதத்தைச் சேர்ந்த வெறும் பத்து கோவில்கள் மட்டும் இருந்ததான சீன யாத்ரிகர் யுவான் சுவாங் எழுதினார். இந்த வரலாற்றைப் பற்றியெல்லாம் யாரும் மூச்சே விடவில்லை இதுவரையில். அதுசரி, வரலாறு என்பது பள்ளிக்கூட புத்தகங்களில்தானே... :)

**உண்மையான இராமன் பிறந்த இடம் எங்கே? பதில் இங்கே. பாபர் மசூதி கட்ட ஆரம்பிக்கும் முன்னரும் அதன் பின்னரும் ராமன் பிறந்தநாள் யாராலும் கொண்டாடப்படவில்லை. மசூதியை சொந்தம் கொண்டாட ஆரம்பித்த பின்னரே....... :)

இந்த ஹிந்துக் கோயில் பற்றியும் பின்னர் 2010இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே தயங்கித் தயங்கித் தந்த ரிப்போர்ட்டின்படித்தான் தெரியும். இன்னமும் அது குறித்த கேள்விகள் பலவற்றிற்கு பதிலும் இல்லை :(

= = = = = =
மேலே மிர் பாகி கான் கட்டியதாக சொல்லப்படும் மஸ்ஜிதின் கதையையும், 2010இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தரும் ரிப்போர்ட்டையும் சிறிதே.... மிக மிக மேலோட்டமாகவே ஆராய்வோம். உள்ளே வேர்களைத் தேடி ஆராய ஆரம்பித்தால் இந்த வலைப்பூ போதாது..!!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் பாப்ரி மஸ்ஜித் ‘ஷர்கி’ கட்டிட அமைப்பில் இருந்ததாக கூறுகிறது.

இந்த ஷர்கி கட்டிட அமைப்பு பற்றி: Sharqi Dynasty --  இந்தியாவை ஆண்ட துக்ளக் வம்சம் 1398இல் முடிவடைந்ததும் அந்த சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல சிற்றரசர்கள் மீண்டும் மன்னரானார்கள். அரசனே இல்லாமல் இருந்த இடங்களில் யாரேனும் புதிதாய் அரசானவதோ அல்லது பக்கத்தில் ஆண்டுகொண்டிருக்கும் அரசனின் கட்டுப்பாட்டில் வருவதோ என எப்படியோ பல்வேறு சாம்ராஜ்யங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த நேரத்தில்தான்... நாஸிருத்தீன் முஹம்மத் ஷா துக்ளக்கின் அரசவையில் முன்னர் எடுபிடியாக பணியாற்றிய மாலிக் சர்வார் என்பவர்(ள்),ஜோன்பூருக்கு சென்று அங்கே ராஜாவாக முடி சூடுகிறார்(ள்). ஆம், அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். துக்ளக் சரித்திரத்தையும் விட மிக அழகாய் அவர்களின் வம்சம் 100 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது. அந்தக் காலங்களில் கட்டிடக்கலை ஆகாயத்தை எட்டலாயிற்று. கோவில்களும், மாளிகைகளும், மசூதிகளுமாய் இந்தியா அழகில் சிறந்து விளங்கலாயிற்று. அவர்களின் ராஜ்ஜியத்தில் உருவான இறுதி மசூதி அடாலி மஸ்ஜித். இவர்கள் கட்டிய மஸ்ஜிதுகளில் மினாரா இருப்பதில்லை. மிக தனித்துவமானது. இவர்களின் ராஜ்ஜியம் நிறைவு பெற்றது இப்றாஹீம் ஷா என்னும் லோடி வம்சத்தின் ராஜாவால். பாபர் பிறப்பதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னரே  இவர்களின் வம்சம் முடிவுக்கு வந்து விட்டது. பின் இவர்களின் கட்டிடக்கலையில் எப்படி பாப்ரி மஸ்ஜித் வரும்???? அதுவும் இப்றாஹீம் ஷா ஆட்சிக்கு வந்ததும் இவர்களில் ஒருவர் கூட உயிருடன் இருக்கக்கூடாது என்று பார்த்துப் பார்த்து தீர்த்துக் கட்டியபின்???

தொல்பொருள் ஆராய்ச்சியினரின் ஆராய்ச்சிகளுக்கு முன்பே 1989இல் பாபர் மஸ்ஜிதை ஆராய்ந்து, பாபரின் வாழ்வையும் ஆராய்ந்து உண்மைகளை கண்டுபிடித்து மூன்று பாகங்கள் கொண்டதொரு நூலை எழுதுகிறார், திரு. ஷேர்சிங் ஐ.ஏ.எஸ். புத்தகங்கள வெளியான சூட்டிலேயே முஸ்லிம்களை தூண்டியதாகவும், பாஜக கட்சியின் பெயரைக் கெடுத்த்தாகவும் இன்னும் பல புகார்களைக் கூறி அவரை அரசு உத்தியோகத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். இருபத்தி ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் அவரின் நூலை பொய்யாக்க இதுவரை யாரும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆயினும் அவரின் ஆராய்ச்சியையும் வழக்கை நடத்திய எவரும் அங்கீகரிக்கவில்லை....!!

பாபர் பிறக்கும்முன்னரே கட்டப்பட்ட மசூதியை ஏன் மிர்-பாகி கான் தலைமையில் பாபர் கட்டுவித்தார் எனப் பொய் பரப்பபடவேண்டும்? அந்த மஸ்ஜிதை ‘ மஸ்ஜித்-ஏ-ஜனம்ஸ்தான்’ என்றே அழைத்தார்கள் என்னும் பொய்யைப் பரப்பவா????

= = = = = =
1720:
நிர்மோஹி அக்ஹாரா(Nirmohi Akhara) என்னும் அமைப்பு உருவாகிறது. ஆயுதம் தாங்கிய சாதுக்களை அக்ஹாராக்கள் என்றழைப்பர். அவர்களில் வைஷ்ணவ மத ஹிந்து சாதுக்களால் ஆரம்பிக்கப்படும் இந்த அமைப்பு ராமனை வழிபடும் சாதுக்களின் குழு.

ஆயுதம் தாங்கிய இந்த அக்ஹாராக்களை ஆங்கில ஏகாதிபத்திய அரசே வரம்புக்குட்படுத்த நினைத்ததையும், அதற்கெதிராய் சன்னியாசிக் கலகம் (Sannyasi Rebellion) நடந்ததையும் மறந்து விட வேண்டாம். இந்த அசுர சாதுக்களின் வாழ்வை பார்வையிட இங்கே செல்லுங்கள்.

வட இந்தியாவில் செல்வாக்கும், பணபலமும், அரசியல் பலமும் நிறைந்த இந்தக்குழு, ராமன் பிறந்த இடத்தில் கோவில் அமைத்தே தீர்வோம் என்னும் கொள்கையுடன் பயணிக்க ஆரம்பிக்கிறது.

= = = = = =
 1853:
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இந்த இடத்தையொட்டி முதன் முதல் கலகம் வெடிக்கிறது. நிர்மோஹி அக்ஹாரா கும்பல் மஸ்ஜிதின் மீது ஏறி,‘இந்த மஸ்ஜிதில் மினாராவே இல்லை...எனவே இது முதலில் கோவிலாகத்தான் இருந்தது’ என கொக்கரிக்கிறது.,

இது ராமன் பிறந்த இடம், ஏற்கனவே இராமன் கோவில் இருந்த இடத்தில்தான் பாபர் கோவில் கட்டினார் என்னும் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. :)

= = = = = =
1853:
காலனி ஆட்சியை மேற்கொண்டிருந்த பிரித்தானிய அரசு இவ்விடத்தில் ஓர் வேலியை போடுகிறது, ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கி. இன்னும் இரண்டு வருடம் வரை பூஜையோ, தொழுகையோ நடைபெறக்கூடாதென்று தடை போடுகிறது.

பிரித்தாளும் சூழ்ச்சியின் முதல் எழுத்து ஆரம்பமாகிறது.

= = = = = =
ஜனவரி 1885:
மசூதியின் உள் நுழையும் படிக்கட்டுக்களின் அடியில்தான் ராமன் பிறந்த இடம் இருக்கிறது எனவே அங்கே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. விண்ணப்பித்தவர், மஹாந்த் ரகுபர் தாஸ் (இவரும் ஒரு சாது. அயோத்தியில் இருக்கும் சரயூ நதியைச் சுற்றி வாழ்ந்து வந்த, வரும் சாதுக்களின் கூட்டத்தில் ஒருவர்.)

பாபர் மஸ்ஜிதின் மேல் முதன் முதலாக சட்ட பூர்வமாக முதல் வழக்கு என்பது இதுவே. இந்த வழக்கை விசாரித்த பண்டிட் ஹரி கிஷன் என்னும் உயர் ஜாதி பிராமண நீதிபதி, இது ஆதாரமற்றது, சமயமோதலுக்கு வழிவகுக்கக்கூடியது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

[இந்த மஹாந்த்-க்கள் அக்ஹாராக்களின், சாதுக்களின், சன்னியாசிக்களின் குழுக்களுக்கு தலைவனைப் போலாவார்கள்.]
= = = = = =
மார்ச் 17, 1886:
மஹாந்த் ரகுபர் தாஸ் மீண்டும் ஃபைஸாபாத்தின் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இதுவும் நிராகரிக்கப்படுகிறது.

= = = = = =
நவம்பர் 1, 1886:
இம்முறையும் தோல்வியை ஏற்காத ரகுபர் தாஸ் அயோத்தியை அக்காலத்தில் ‘ஔத்’ என்று கூறி ஆண்டு கொண்டிருந்த விசாரணைக் கமிஷனர் யங்கிடம் வழக்கைக் கொண்டு போகிறார். (W Young). [சரயூ நதியின் கரையில் உள்ள சாதுக்கள் கூட்டம் பெரும் செல்வாக்கையும், பண பலத்தையும் கொண்டது என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.] மிஸ்டர்.யங்கும் அந்த வழக்கை நிராகரிக்கிறார்.

= = = = = =
1936
 வக்ஃப் போர்டின் கீழ், மஸ்ஜிதும், ஏற்கனவே மஸ்ஜிதையொட்டி இருந்த கஞ்ஜ்-ஏ-ஷாஹீதீன் என்னும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமுமாக 67 ஏக்கர் நிலப்பரப்பும் சட்டபூர்வமாக ரிஜிஸ்தர் செய்யப்படுகிறது. முஸ்லிம்களின் மீதான வன்முறை பன்மடங்காகிறது.

= = = = = =
டிசம்பர் 10, 1949
வக்ஃப் போர்டிலிருந்து மஸ்ஜிதின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் முஹம்மத் இப்றாஹீம்,  உத்திரப் பிரதேச வக்ஃப் போர்டு தலைமையிடத்தில் புகார் ரிஜிஸ்தர் செய்கிறார், “...மஸ்ஜிதில் தொழ வரும் முஸ்லிம்களின் மேல் கற்கள் வீசுவதும் அவர்களை அவப்பெயர்களிட்டு அழைப்பதுமாக தொல்லை நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. மஸ்ஜிதுக்கு அங்கேயுள்ள ஹிந்துக்களால் ஆபத்திருக்கிறது...” என.

காற்று அந்த வார்த்தைகளை பத்திரப்படுத்த ஆரம்பிக்கிறது.....நாளையின் நிஜம் அது..!

= = = = = = 
டிசம்பர் 22, 1949:
முஸ்லிகளுக்கென ஒதுக்கியிருந்த இடத்தில், மசூதியினுள் திடீரென ராமனின் சிலைகள் புகுந்திருக்கின்றன. இரண்டு சமுதாயமுமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றன.  அப்போதைய காங்கிரஸ் அரசு, அந்த இடம் ‘பிரச்சினைக்குரிய இடம்’ என லேபிளிட்டு கதவுகளைப் பூட்டி வைக்கிறது. ஒரு ஹிந்துக் காவலரையும், ஒரு முஸ்லிம் காவலரையும் பணியில் அமர்த்துகிறது ஷிஃப்ட் முறையில் காவல் காக்க.
ஆபிராம் தாஸ்


அந்த நாளின் முந்தின இரவில், ஆபிராம் தாஸ் என்னும் சாது, கே.கே நாயர் என்னும் அப்போதைய ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட்  மற்றும்  குருதத் சிங் என்னும் ஃபைஸாபாத்தின் அப்போதைய ஃபைஸாபாத் நகர மாஜிஸ்டிரேட் மூவரும் ராமர் சிலைகளை மஸ்ஜித்தில் வைப்பதற்கு திட்டமிடுகின்றனர்.
கே கே நாயர்
இவர்களின் திட்டத்திற்கு ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் என்னும் சாதுவும் ஒத்துழைக்கிறார்.
ஆனால் அக்‌ஷயா பிரம்மச்சாரி என்னும் ஒரு சாதுவும் அவரின் சிஷ்யை மீரா பெஹெனும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அன்றிலிருந்து சாதுக்கள் குழுவிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப் படுகின்றனர்.
குரு தத் சிங்
22ம் தேதி ஆபிராம் தாஸ் பூட்டிய மஸ்ஜிதின் காம்பவுண்டிலிருந்து வெளியே குதித்து ஓடியதை அந்த ஊரின் தையல்காரர் ஹாஷிம் அன்ஸாரி பார்க்கிறார். ஆனால் 60 வருடங்களுக்கும் மேலாக இதில் நீதி கிடைக்காது என்பது தெரியாததால் மௌனமாய் இருந்து விடுகிறார்.

தன் உயிருக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆயுளை வேண்டிய ‘முஸ்லிம் காவலர்’, 23ம் தேதி மதியம் 3 மணிக்கு மஸ்ஜிதின் மிம்பரில் வானிலிருந்து ஒரு ஒளி இறங்கி ராமர் சிலைகளை அங்கே தோற்றுவித்ததென காவல் துறையினருக்கு அறிவிக்கிறார்.

இந்த தகவல்களை எல்லாம் காலங்கள் பல கனிந்து வால் ஸ்ட்ரீட் ஜோர்னலுக்கு குருதத் சிங்கின் மகன் குரு பசந்த் சிங் ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார். இதைப் பற்றிப் பேச நாயரின் மகனோ மறுத்து விடுகிறார்.

ஆனால் இந்த விஷயங்களை இன்னொருவரும் நடந்ததென ஒப்புக்கொள்கிறார். ஆபிராம் தாஸின் தலைமைச் சீடரான மஹாந்த் சத்யேந்திர தாஸ். இவர் இப்போது பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள ராமன் கோவிலில் அரசால் அமர்த்தப்பட்ட முதன்மை பூசாரி. (!!) மீத விவரங்கள் இங்கே.

= = = = = =
டிசம்பர் 23, 1949:
மஸ்ஜிதினுள் புகுந்து வலுக்கட்டாயமாக் சிலைகளை வைத்ததன் புகாரின் பெயரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.
The FIR lodged by Sub Inspector Ram Dube, Police Station Ayodhya, on December 23, 1949, as certified by the office of the city magistrate on February 11, 1986: “According to Mata Prasad (paper no. 7), when I reached to (sic) Janam Bhoomi around 8 o’clock in the morning, I came to know that a group of 50-60 persons had entered Babri Mosque after breaking the compound gate lock of the mosque or through jumping across the walls (of the compound) with a stair and established therein an idol of Shri Bhagwan and painted Sita Ram, etc, on the outer and inner walls with geru (red loam). Hans Raj on duty asked them to defer but they did not. These persons have already entered the mosque before the available PAC (Provincial Armed Corps) guards could be commanded. Officials of the district administration came at the site and involved themselves in necessary arrangements. Afterwards, a crowd of 5-6 thousand persons gathered around and while chanting bhajans and raising religious slogans tried to enter the mosque but were deferred and nothing untoward happened thereon because of proper arrangements. Ram Das, Ram Shakti Das and 50-60 unidentified others entered the mosque surreptitiously and spoiled its sanctity. Government servants on duty and several others are witnesses to it. Therefore it is written and filed.”
அந்தப் புகாரையும், அதன் வரலாறையும் வருங்காலங்களில் ம(றை)றக்கிறார்கள். :)


[ அந்த இடத்தில் ராமர் சிலைகள் தானாகவே முளைத்ததாக பின் வரும் நாட்களில் லிபர்ஹான் கமிஷனின் முன் எல்.கே அத்வானி கூறுகிறார். அது எப்படி தானாய் முளைக்கும், நீங்கள் அதை நம்புகிறீர்களா என்பதற்கு மௌனமே பதிலாகிறது. அத்வானியை இப்படிக் கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது என நீதிபதி லிபர்ஹான், விசாரணையின் இடையே உத்தரவும் இடுகிறார். அந்தக் கேள்வி-பதில்-உத்தரவு பற்றி கோர்ட்டின் தகவல் சேமிப்பு டாக்குமெண்ட்களிலும் இடைபெற தடை போடப்படுகிறது!!]
மஸ்ஜிதின் மிம்பரில் வைக்கப்பட்ட சிலைகள்

மஸ்ஜிதினுள் வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்துமாறு அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஆணையிடுகிறார்.“ மிக அபாயகரமான உதாரணம் இதில் உள்ளது. சிலைகளை அப்புறப்படுத்தாவிட்டால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்..” நேருவின் ஆணையில் உள்ளது.

அந்த ஆணையையும் மீறி சிலைகளை உள்ளேயே இருக்க வைக்கப்படுகின்றன, உத்திரப்பிரதேச அப்போதைய முதலமைச்சர் கோவிந்த் பல்லப் பண்ட்டின்(Govind Ballabh Pant) ஆணையாலும், ஃபைஸாபாத்தின் அப்போது துணை கமிஷனர் ஆகியிருந்த கே.கே நாயரின் பிடிவாதத்தாலும்.
“இது ஒரு சட்டவிரோத செயலாகவே இருக்கலாம்....ஆனால் அதன் பின்னிருக்கும் இயக்கத்தின் உணர்வுகளை மட்டமாக எடை போட்டு விடக்கூடாது”...பதிலெழுதினார், கே.கே.நாயர்...ஜவஹர்லால் நேருவிற்கு! 1986 வரைக்கும் சிலைகள் அகற்றப்படவில்லை.

காற்று வீச ஆரம்பிக்கிறது.

= = = = = =
ஜனவரி 16, 1950:
ஃபைஸாபாத்தின் அகிலபாரத ஹிந்து மஹாசபாவின் தலைவர், கோபால் சிங் விஷாரத் என்பவர் ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ இராமனுக்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஃபைஸாபாத் நீதிமன்றத்தில்  முறையிடுகிறார். இப்பொழுதுதான் பிரச்சினை வேர் விடுகிறது.

அப்போதையஃபைஸாபாத் சிவில் கோர்ட்டின் நீதிபதி என்.என் சத்தா (N.N. Chadha) நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவை உபயோகித்து (Interim Injunction Order) அயோத்தியின் லோக்கல் / உள்ளூர் ஹிந்துக்கள் மட்டும் பூஜை செய்யலாமென தீர்ப்பளிக்கிறார். இங்கே ஆரம்பிக்கிறது ஹிந்துத்துவாவின் கனவை நனவாக்கும் திட்டம்...!


= = = = = =
மார்ச், 1950:
உள்ளே வைக்கப்பட்ட ராமனின் சிலைக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் காவல்துறையில் புகார் பதிவு செய்கிறார், ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ். உள்பக்க கேட்கள் இன்னும் பூட்டியே உள்ளன.

1950 இறுதி வரை வழக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு சாதகமாய் இருக்கிறது.

= = = = = =

1961:
மஸ்ஜிதினுள் புகுந்து சட்ட விரோதமாக இராமனின் சிலைகளை பூஜிப்பதாக, Interim Injunction Orderஐ எதிர்த்து நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படுகிறது. இந்தத் தடவை வழக்கைப் போட்டவர், தையல்காரர் ஹாஷீம் அன்ஸாரி. :)
[ஆனாலும் கோர்ட் தீர்ப்பை விட கோர்ட்டின் வெளியேயே இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம், இதனால் நாட்டின் சட்ட ஒழுங்கு சீர் குலையாது என்னும் கொள்கையையே பற்றிப் பிடித்திருந்தார் அன்ஸாரி. விஷ்வ ஹிந்து பரிஷத் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இந்தக் கேஸிலிருந்து விலகி விடச் சொன்னது என்றால் அப்போதைய வக்ஃப் போர்டு இவரைப் போலிருக்கும் ஒவ்வொரு வழக்காடியின் பேச்சுக்கும் மதிப்பளிக்க முடியாது என கதவை சாத்தி விடுகிறது.]

= = = = = =
1984:
அந்த இடத்தில் மீண்டும் ஒரு கோவில் கட்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகின்றன.

= = = = = =
1985:
நிர்மோஹி அக்ஹாரா குழு, ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ ராமன் கோவிலைக் கட்ட அனுமதிக்குமாறு ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் முறையிடுகிறது. ஒரே இடத்தில் இரு மதங்களின் வணக்கஸ்தலங்கள் இருப்பது அபாயகரமானது (!!!) என நீதிமன்றம் நிராகரித்து விடுகிறது.
= = = = = = =
ஃபிப்ரவரி 1, 1986:
கேட்களைத் திறப்பதால் வானம் ஒன்றும் கீழே விழுந்து விடாது என்று உத்தரவிட்டு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு கேட்களை திறந்து விடச் சொல்கிறார், மாவட்ட நீதிபதி கே.எம் பாண்டே. ஹிந்துக்களை மஸ்ஜித்தின் உள் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு பூஜை செய்துகொள்ள  நீதிமன்றம் அனுமதிக்கிறது.

அவ்விடத்தில் ஹிந்துக்களின் வணக்க வழிபாடுகளை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்துவதற்காக ‘பாப்ரி மஸ்ஜித் கமிஷன்’ (BMAC) முதன் முதலாக அமைக்கப்படுகிறது. சுன்னி வக்ஃப் போர்டும், BMACகும் இணைந்து அல்லாஹாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்கிறார்கள்.

= = = = = =
1989:
முப்பத்தி ஒன்பது வருடங்களாக ஃபைஸாபாத் சிவில் கோர்ட்டில் இருந்த வழக்கு ஜூலை, 1989இல் அல்லாஹாபாத் மேல்கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. அல்லாஹாபாத் உயர் நீதிமன்றம் ஒரு பெஞ்சை நியமிக்கிறது. பலமுறை அதன் உறுப்பினர்கள் மாற்றப்பட்டு, 20 வருடத்திற்குப் பின் அமர்வுக்கு வருகிறது. இறுதி அமர்வாக ஜூலை 23, 1996இல் ஆரம்பித்து ஜூலை 26, 2010இல் முடிவாய் வழக்கின் அமர்வை (Hearing) முடிக்கிறார்கள்.

ராமன் கோவில் கட்டியே தீருவோம் என்னும் அமளி இப்போது வலுப்பெற ஆரம்பிக்கிறது. 

இதே வருடத்தில் நிர்மோஹி அக்ஹாரா குழு, கோவிலைக் கட்ட அனுமதிக்குமாறு  உத்திரப் பிரதேச அரசுக்கு எதிராய் இப்போது வழக்கு தொடுக்கிறது. கோவிலைக் கட்ட வேண்டிய இடமும், கோவிலும் தன் ஆளுமையில் இருக்க வேண்டும் என அதில் விண்ணப்பிக்கிறது.

இதே வருடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் தேவகி நந்தன் அகர்வால் ஒரு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்கிறார், மஸ்ஜித்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறு எங்காவது வைக்க வேண்டும் என. (!!!!)

இராமன் கோவில் கட்டுவதற்காக ஒன்றுபடுவோம் என விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு பாரதீய ஜனதா பார்ட்டி பலம் தருகிறது.

பிரதம வேட்பாளராக நிற்கும் ராஜீவ் காந்தி, அயோத்தி தொகுதியிலிருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார், ‘இராம இராஜ்யம் அமைப்போம்’...

விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்துத்துவா கட்சிகள் ‘பிரச்சினைக்குரிய இடம்’ என அரசு வகைப்படுத்திய இடத்திற்கு அருகிலேயே கோவிலுக்கான அடித்தளத்தை இடுகின்றனர். அதற்கென நடந்த ‘ஷிலன்யாஸ்’ / அடித்தளம் இடும் வேள்விக்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்புதலளிக்கிறார்.

காற்று பலமாய் வீசுகிறது. தீ பற்றி எரிகிறது.

= = = = = =
1990:
பா ஜ க-வின் எல்.கே.அத்வானி, அவ்விடத்தில் இராமன் கோவில் கட்ட ஒத்துழைப்பு கோரி நாடு முழுக்க ‘ரத யாத்திரை’ மேற்கொள்கிறார்.  நாடெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான வெறியை விதையாக தூவப்படுகிறது.

அதே ரத யாத்திரை எனும் பெயரில் அயோத்தியில் ரத யாத்திரையின் தொண்டர்களாக அத்வானியும், அவரின் கும்பலும் நுழைந்ததும் அப்போதைய உ.பி முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், போலீஸுக்கு வி.எச்.பி கும்பலை கண்டதும் சுட உத்தரவளிக்கிறார்.

எதுவும் நடப்பதில்லை. காற்று தன் வழியே சென்று விட்டது.

= = = = = =
நவம்பர் 1990:
பீஹாரில் உள்ள சமாஸ்திபூரில் வைத்து எல்.கே அத்வானி சட்ட விரோத ‘ரத யாத்திரை’ மேற்கொண்டதற்காக கைது செய்யப்படுகிறார். மத்தியில் ஆளும் வி.பி சிங்குக்கு பாஜக ஆதரவை விலக்குகிறது. வி.பி சிங் பதவி விலகுகிறார். மத்தியில் ஆட்சி மாறுகிறது.

= = = = = =
1991:
மத்திய அரசின் எதிர்க்கட்சியாக வலுப்பெற்ற பாஜக உத்திரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வருகிறது.

அயோத்தியில் இப்போது ‘கரசேவகர்களின்’ கும்பல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து கோவில் கட்டும் இயக்கம் தீவிரமடைகிறது. நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் அனுப்பப்படுகின்றன.

= = = = = =
டிசம்பர் 6, 1992:
ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுகிறது. இந்தியாவில் வகுப்புவாத வன்முறை பெருமளவில் கட்டவிழ்த்துவிடப் படுகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.

மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலமும் அரசு இந்த சமயத்தில் கையகப்படுத்திக் கொள்கிறது.

[பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் பொழுது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அதனை தடுக்காமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார் என்றும், பாப்ரி மஸ்ஜித் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது என்ற தகவல் அறிந்தவுடன்தான் பூஜை அறையை விட்டு நரசிம்மராவ் வெளியே வந்தார் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் குல்தீப் நய்யார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். பாப்ரி மஸ்ஜிதின் கடைசி கல்லும் பெயர்த் தெடுக்கப்பட்ட பின்னரே நரசிம்மராவ் பூஜை அறையை விட்டு வெளியே வந்ததாக காலம் சென்ற சோஸலிஸ்ட் தலைவர் மதுளமாயி தன்னிடம் தெரிவித்தார் என குல்தீப் நய்யார் கூறினார். மஸ்ஜித் இடிக்கப்பட்டது, தரைமட்டமாக்கப் பட்டது என்ற வரிகள் காதில் விழுந்தவுடனே எழுந்து விட்டார் அவரது பூஜை முடிந்து விட்டது என்ற வரிகள் இந்திய மக்கள் அனைவரையும் அவர் எவ்வளவு இழிவாகக் கருதியுள்ளார் இந்த நயவஞ்சக நரசிம்மராவ் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக குல்தீப் நய்யாரின் சுயசரிதை அமைந்துள்ளது. விபரம் இங்கே.]

டீவியில் மீண்டும் பாப்ரி மஸ்ஜித் கட்டித் தருவோம் என அப்போதைய பிரதமர் நரசிம்ஹ ராவ் உறுதி தருகிறார். :)

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா


அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
:-- அன்றைய தினத்தில் வைரமுத்து எழுதிய கவிதை.


மந்திரிகளின் மனதில் இருந்ததையும், எதிர்க்கட்சியினர் வாய் விட்டுச் சொல்லி  சிரித்ததையும் காற்று முஸ்லிம்களின் காதுக்கு கொண்டு செல்லவேயில்லை. :)


= = = = = =
டிசம்பர் 16, 1992:
மசூதி இடிந்து பத்து நாட்களுக்குப் பின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தன் தலைமையில் இந்த வன்முறையைப் பற்றி ஆராய (!!!!) ஜஸ்டிஸ் லிபர்ஹானை தலைமை நீதிபதியாகக் கொண்டு ஒரு கமிஷனை அமைக்கிறார்.

= = = = = =
ஜனவரி, 25, 1993:
விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சி, ‘ராம ஜென்ம பூமி நியாஸ்’ என்னும் அமைப்பை ஆரம்பிக்கிறது. ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ ராமன் கோவிலை கட்டியே தீருவோம் என சூளுரைக்கிறது. இதன் தலைவராக ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் சாது நியமிக்கப்படுகிறார். :)

= = = = = =
1993:
கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றே மாதங்களிலேயே பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு பின் யார் உள்ளனர், எதனால் அது நடந்தது என்னும் இரகசிய, யாரும் விடையறியாக் கேள்விகளுக்கு விசாரணையை ஆரம்பிக்கிறது. (!!)

= = = = = =
1994:
பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறது. லக்னோ நீதிமன்றம் இந்த சம்பவத்தில் தீர்ப்பளிக்கும் வரை முன்பிருந்ததைப் போலவே நிலம் வக்ஃப் போர்டிடமும், மஸ்ஜிதில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு மட்டும் நடக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறது.

தீர்ப்பு காற்றில் கரைக்கப்படுகின்றது.

= = = = = =
ஃபிப்ரவரி 27, 2002:
அயோத்தியிலிருந்து அஹ்மதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் S-6 கோச்சினுள் இருந்த 58 மக்கள் குஜராத்தில் உள்ள கோத்ராவில் கொல்லபடுகின்றனர். அவர்கள் யாவரும், அயோத்தியிலிருந்து குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ‘ஹிந்து சேவகர்கள்’. யாரால், எதனால் நடந்தது என்பதே வெளிவராதபோது குஜராத்தில், அதனையொட்டி நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிரிழக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர், அனாதைகளாக நடைப்பிணங்களாகிறார்கள். இன்னும் பலர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகிறார்கள். அதைப் பற்றிய ஆவணப்படம் இங்கே.

காற்று தீயை மூட்ட மட்டுமே உதவியிருந்தது. கண்ணீரைக் கரைக்கவில்லை.

= = = = = =
ஏப்ரல் 2002:
அப்போதைய பிரதமர் வாஜபேயி, ஹிந்து, முஸ்லிம் தலைவர்களை அழைத்து தன்னுடைய ஆஃபீசில் இருக்கும் ‘அயோத்யா செல்’லில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். :))

= = = = = =
2003:
அல்லாஹாபாத் நீதிமன்றம் ‘பிரச்சினைக்குரிய அந்த இடத்தில்’ கோவில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா என தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தும்படி அரசுக்கு உத்தரவிடுகிறது. ஆகஸ்ட் மாதம், அந்த இடத்தில் ராமன் கோவில் இல்லை, ஆனால் பத்தாம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை அக்குழு சமர்ப்பிக்கிறது. 11-12ம் நூற்றாண்டில் 50-60 அடி உயரத்தில் ஒரு கட்டிடம் இருந்திருக்கலாம் என்றும், அதன் ஆயுள் சில காலம் வரைக்குமே இருந்தது என்றும் அந்த ரிப்போர்ட் கூறியது. அந்த கட்டிடத்தின் அடித்தளத்திற்கு மேல்தான் 16ஆம் நூற்றாண்டில் பாபர் மஸ்ஜித் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியின் 142 வருட பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு வாக்கியமும் அதில் இருந்தது. **பத்தாம் நூற்றாண்டின் அந்தக் கட்டிட இடிபாடுகளில் வளையம் போன்ற ஒரு அமைப்பில் கிழக்கை நோக்கி ஒரு செங்கல் அமைப்பும் இருந்தது. மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் சில பழமை வாய்ந்த கோவில்களைப் போலிருந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் தன்னிடமும் ஒரு ஆதாரம் இருக்கிறதென்றும் அதில் அந்தக் கோவில் பத்தாம் நூற்றாண்டல்ல, மாறாக ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக. அதன் மேல் கட்டப்பட்ட இரண்டாவது கோவிலைத்தான் தகர்த்து பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்று எழுதியிருப்பதாகவும் மார்தட்டிக் கொண்டது. யாரும் இந்த ஆதாரத்தை ஏன் சோதிக்க முன் வரவில்லை??

அந்தக் கட்டிடம், சிவன் கோவிலும் இல்லை, இராமன் கோவிலும் இல்லை, எங்களுடையது என்று கூட ஒரு ஜெயின் அமைப்பு கூறியது. காசா பணமா..... முஸ்லிம்களின் சொத்து, மற்ற அனைவருக்கும் பொதுதானே?? :)


**இந்த வரிக்கு மட்டும் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் காரணமும் சொன்னார்கள், கிட்டத்தட்ட தொண்ணூறு -90 அடி ஆழத்திலுள்ள ஒரு கட்டிடத்தைப் பற்றி ஐந்தே மாதங்களில் ஆராய்ந்து பதினைந்தே நாட்களில் ரிப்போர்ட் தயார் செய்ய சொன்னதால் சரிவர தகவல்கள் திரட்ட முடியவில்லை என்று!! :)

அதே இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அதே கட்டிடத்தின் கற்களை திரு.ஷேர்சிங் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஆராய்ச்சிக்காக பல தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பியபோது அவை ஐநூறு வருடம் கூடப் பழமை பெறாதவை என்று முடிவு தரப்பட்டது. ஏன் இப்படி? பொதுவில் வைத்து இதை எந்த தனியார் அமைப்பு வேண்டுமானாலும் சேலஞ்ச் செய்து காட்டுங்கள் என ஏன் ASI முன்வரவில்லை???

அரசு தரப்பில் காட்டப்படும் மென்பொருளைக்கொண்டு இராமன் பிறந்த Exact Locationsஐ தேட முயன்றால் அயோத்தியில் மட்டுமே ஏழு இடங்களைக் காட்டுகிறது. மஸ்ஜிதிற்கு பக்கத்தில் என்றால் ஆம், மூன்று கி.மீ தொலைவில் துல்லியமாய் காட்டுகிறது? ஒரே பிறப்பு ஏழு இடத்திலா???? மனிதக் கடவுள்ன்னா அப்படித்தாங்கிறீங்களா.... :))

வக்ஃப் போர்டும், முஸ்லிம் அரசியல் கட்சியினர் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு மறுப்பு வெளியிடுகின்றார்கள்.

= = = = = =
ஆகஸ்ட் 2003:
மஹாந்த் பரமஹன்ஸ் தாஸ் ஜூலை 31இல் இறந்து போகிறார். ஒரு மாதகாலமாக இதய நோயினால், லக்னோவில் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார். அவரின் இதய நோய்க்கு காரணமே எல்.கே அத்வானிதான் என வி.எச்.பியின் துணைத்தலைவர் கிரிராஜ் கிஷோர் அறிக்கை வெளியிடுகிறார். இராமனை வழிபடும் சாதுக்களுக்கு ஒரு கோவில் கட்டும் பணியை தன் அரசியல் ஆதாயங்களுக்காக அத்வானி கழுவிலேற்றினார்....இதனாலேயே பரமஹன்ஸ் தாய் இதய நோய்க்கு ஆளாகினார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இறுதி மூச்சு அயோத்தியில்தான் என்று உறுதியாய் இருந்த மஹாந்த் பரமஹன்ஸ் தாஸை இறக்கும்முன் அயோத்திக்கே கொண்டு சென்றும் விட்டனர். அங்கேயே எரிக்கப்பட்டார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான வாஜபேயி பரமஹம்ஸின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அறிக்கை வெளியிடுகிறார், “மஹான்  பரமஹம்ஸின் லட்சியத்தை உறுதியாய் நிறைவேற்றுவோம்.... அயோத்தியில் இராமன் கோவில் கட்டியே தீருவோம்” என.

இப்பொழுதும் காற்று எம் சமூகத்தில் கிசுகிசுக்கக் கூட செய்யவில்லை. :(


= = = = = = =
செப்டெம்பர் 01, 2003:

பாப்ரி மஸ்ஜித் கலவரத்தில் கரசேவகர்களை முடுக்கி விட்டதாக ஏழு பேரை குற்றப்பத்திரிக்கையில் பெயரிடுகிறார்கள். 
  • அப்போதைய துணைபிரதமர் எல். கே அத்வானி
  • உள்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷி
  • பாஜகவின் உத்திரப் பிரதேச யூனிட்டின் தலைவர் வினய் கடியார்,
  • பாஜகவின் மத்தியப் பிரதேச யூனிட்டின் தலைவர் உமா பாரதி,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அஷோக் சிங்கால்,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர்,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இன்னொரு தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா.
பெண் துறவி (!!!) சாத்வி ரிதம்பராவிலிருந்து மொத்தம் 66 பேரை பாப்ரி மஸ்ஜிதை இடிக்க கரசேவக கும்பலை தூண்டி விட்டதாக குற்றப்பத்திரிக்கை கை நீட்டியது.  எல்.கே அத்வானி, 1992இல் அந்த மஸ்ஜிதின் அருகிலேயே இருந்திருந்தாலும், அவரிடம் ஒரு தவறுமில்லை என குற்றப்பத்திரிக்கையிலிருந்து அவர் பெயரை பின்னர் அகற்றுகிறார்கள். இப்படியே ஒவ்வொன்றாய் எல்லாப் பெயர்களும் அழிக்கப்பட்டுவிட்டன..... அல்லது மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், மறந்தும் போய் விட்டன.

காற்றுக்கு தெரியும் யார் யாரின் பெயரை எப்போது அழிக்க வேண்டுமென. :)


= = = = = = =
நவம்பர் 2004:
உத்திரப்பிரதேச ஹைகோர்ட் எல்.கே அத்வானி மீதான குற்றச்சாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கிறது.

தீர்ப்பின் காகிதங்களை காற்று அலைக்கழித்து விட்டது :)

= = = = = =
ஜூலை 2005:
ஆறு பேர் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் (!!!) ’பிரச்சினைக்குரிய அந்த இடத்தில்’ ஜீப்பில் வந்து வெடிகுண்டு வீச முயன்றதாகவும், போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும். ஆறாவது நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் செய்திகளில் வருகிறது. (!!!)

= = = = = =
ஜூன் 2009:
பதினேழு வருடங்கள் கழித்து தன் ரிப்போர்ட்டை ‘ஜஸ்டிஸ் லிபர்ஹான் குழு’ சமர்ப்பிக்கிறது. (!!!)

சில மாதங்கள் வரை மட்டுமே அந்த குற்றப்பத்திரிக்கையிலுள்ள ஹிந்து தலைவர்களின் பெயர் நாளிதழ்களில் அடிபடுகிறது. அதன் பின் மீண்டும் பலத்த காற்று வந்து தீர்ப்பின் பக்கங்களை மண்ணில் புதைத்து விடுகிறது. :)


= = = = = = =
செப்டெம்பர் 28, 2010:
லக்னோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, இராமன் குறிப்பிட்ட அந்த மஸ்ஜிதின் கட்டிட பகுதியினுள்தான் பிறந்ததாக. எனவே வக்ஃப் போர்டு, நிர்மோஹி அக்ஹாரா, மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு அந்த இடத்தை 1/3 +1/3 + 1/3 யாக பிரித்தளிக்கப்படும் என்று... மேல் முறையீட்டுக்கு தடையோடு!

இந்த வழக்கின் பண்டைய கால வழக்காடிகளான (!!!) அகிலபாரத ஹிந்து மஹாசபா, இந்த விஷயத்தில் தமக்கு நீதி கிட்டவில்லை என்றும் முழு நிலமுமே ஹிந்துக்களின் கையில் வந்தாக வேண்டும் என்றும் இதனை எதிர்த்தது. :)

முஸ்லிம்களின் சொத்தில் பட்ட காற்றைக்கூட இனி சொந்தம் கொண்டாடுவார்கள் போல.... காற்று பலகாலமாக கரை பட்டே வந்துள்ளது.... :)

= = = = = =
மே 9, 2011
இந்த வழக்கின் நிகழ்கால வழக்காடிகள் யாருமே நிலத்தை பிரித்துக் கேட்காத போது, மூன்று கூறாக இதனை பிரித்த லக்னோ பென்ச்சின் இந்தத் தீர்ப்புக்கு  இந்திய உயர் நீதிமன்றம் - Supreme court தடை விதித்தும், இத்தகைய ஒரு குழப்பமான உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சமுதாயங்களை மாறி மாறிப் புலம்ப வைத்துள்ளதை கண்டித்தும் தடை அறிவித்தது. இந்த வழக்கில் 1994இலும், மார்ச் 22இலும் உயர் நீதி மன்றம் தந்திருந்த உத்தரவுகளை அமுல்படுத்தி 1994க்கு முன்பிருந்த நிலையையே மேற்கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஆணையிட்டது. அரசின் கையில் இருக்கும் 67 ஏக்கர் நிலத்தையும் வக்ஃபுக்கே திரும்ப ஒப்படைக்குமாறும் கூறியுள்ளது.

இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட லக்னோ நீதிமன்றம், அப்படியே அமுல்படுத்தும்படி கூறியது, எனினும் மஸ்ஜிதின் அருகில் தற்காலிகமாக நிறுவப்பட்ட இராமன் கோவிலில் பூஜைகளும் வழக்கம் போல நடக்கும் எனவும் தீர்ப்பு விதித்தது. :)

லிபர்ஹான் கமிட்டியின் குற்றப்பத்திரிக்கையில் உள்ள நபர்களுக்கெதிராக போதுமான சாட்சிகள் இல்லை எனக்கூறி சி.பி.ஐயும் இந்த வழக்கை மண்ணில் புதைத்து விடுகிறது. 


எதற்காக இதையெல்லாம் கோர்த்தெழுதினேன்? 
ஒன்றுமில்லை சகோஸ்.... எத்தனை கவனமாக, நேர்த்தியாக, அடி மேல் அடி வைத்து ஒவ்வொரு அரசியல்வியாதியும், ஹிந்துத்துவ சூத்திரதாரிகளும், தீவிரவாதிகளும் இந்திய முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள், துண்டாடுகிறார்கள், உயிரோடு எரிக்கிறார்கள், வாழ்வின் ஒவ்வொரு சிறையும் பிக்கிறார்கள் என்பதைப் பார்க்கத்தான். பரவாயில்லை சகோஸ்... As usual our life and our deaths are both taken for granted....right??? :) 


பாப்ரி மஸ்ஜித் பாகம் ரெண்டின் புகைப்படம் ரிலீஸாகிவிட்டது :))


நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

27 comments:

  1. //1528:
    அயோத்தியில் மிர்பாகி கான் (Mir Baqi Khan) என்னும் பாபரின் தளபதி ஒரு மசூதியைக் கட்டுகிறார். ராமன் பிறந்த இடம் எனப் பல இந்துக்களால் நம்பப்படும் ஓரிடத்தில் ஏற்கனவே இருந்த ஒரு ஹிந்துக் கோயிலை இடித்து விட்டு மசூதியைக் கட்டுகிறார்.//
    ராமன் பிறந்ததாக இராமாயனத்தில் குறிப்பிடப்படும் இடம் நேபாளில் இருப்பது தெரியாமல் இந்தியா என்று சொன்ன உங்களை என்ன சொல்வது :-(

    ReplyDelete
    Replies
    1. ஜெய்லானி பாய். அந்த வரிகளில் பல ஹிந்துக்கலின் நம்பிக்கையையே குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய நம்பிக்கையையோ அல்லது உண்மையையோ அல்ல. எனினும் பொருள் மாறிவிடுமோ என்பதால் அந்த வரிகளை மாற்றி விட்டேன். சுட்டிக் காடியமைக்கு நன்றி.

      Delete
  2. SALAAM ...

    நல்ல தொகுப்பு ... :)

    ReplyDelete
    Replies
    1. வ ஸலாம்.

      கருத்துக்கு நன்றி :)

      Delete
  3. இந்தியா என்னும் பன்முக கலாச்சாரம் கொண்ட தேசம் இந்து ராஷ்டிரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் போது, மதசார்பின்மை காவிக்குள் ஒளித்து வைக்கப்படுகிறது. மத சார்பின்மை என்ற என்ற போலி முகமே முஸ்லிம்களுக்கு இவ்வளவு அநீதமாக இருந்தால், இந்து ராஷ்டிரம் என்ற கோர முகம் எப்படி இருக்கும்?. ஆனால் ஒன்று, இந்த காவி பயங்கரவாதிகள் என்ன ஒட்டு மொத்த இந்து சமூக உணர்வுகளின் பிரதிபலிப்பா? என்றால் அது நிச்சயமாக கிடையாது என்பது திட்டவட்டமான உண்மை. இந்த உண்மை தான் இந்திய முஸ்லிம்களுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் தருகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்தியாவில் எப்போது " நம்பிக்கைக்கும் இந்துக்களின் மனசாட்சிக்கும்" என்று சட்டமும் நீதியும் வளைய ஆரம்பித்ததோ அப்போதே நீதி மன்றத்தின் தீர்ப்புகள் முஸ்லிம்களுக்கு பாரபட்சமாக அமையுமோ என்று ஐயம் கொள்ள செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இது இன்றோ நேற்றோ வைத்த அடியில்லை சகோ.உதயம், வீட்டிலிருந்து உயிர் வரை எல்லாவற்றையும் தியாகம் செய்து சுதந்திரத்துக்காக பாடுபட்ட நம் சமுதாயத்தை ஓட ஓட விரட்டி, சுதந்திரத்தை கொண்டாடி முடிக்கும் முன்னரே பிரிவினையை கொண்டாடினரே....அப்பொழுதே ஆரம்பித்தது.... இன்று வரை அதன் விதவிதமான பிம்பங்களையே காண்கிறோம்.

      கருத்திற்கு நன்றி சகோ.

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ,
    நல்ல வரலாற்று தொகுப்பு .
    தங்களது தளத்தினை www.islamiyaarangam.blogspot.in என்ற திரட்டியில் இணைத்துள்ளேன் . ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ இக்பால்.

      திரட்டியில் இணைத்ததற்கு மிக்க நன்றி.
      ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர்.

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்னு இந்த பதிவின் இறுதியில் இந்த விவகாரம் தொடர்பான தற்போதைய நிலையையும் சேர்த்துவிடுங்கள்..

    அதாவது 2011-ஆம் ஆண்டு, அலஹாபாத் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைத்ததையும், எந்த பார்ட்டியும் நிலத்தை பிரிக்குமாறு கேட்காதபோது, அலஹாபாத் நீதிமன்றம் இப்படியாக செய்தது ஆச்சர்யத்தை தருவதாக உச்ச நீதிமன்றம் கூறியதையும் மேற்கோள் காட்டவும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் ஆஷிக்.

      இறுதி நிலையையும் சேர்த்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிப்பா. :)

      Delete
  6. அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ.

      Delete
  7. Pala visayagalai thedi thelivana post poothu irukeega.. :-):-(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஃபாயிஜா, மற்ற மக்களை விடுங்கள்...நம் சமுதாயத்திற்கே இதன் உண்மை நிலை பல பேருக்கு தெரியாது :(. இன்ஷா அல்லாஹ் என்றாவது உபயோகப்படும் என்றே. :)

      Delete
  8. காலத்திற்கேற்ற சரியான பதிவு நன்றி சகோதரி :)

    மக்கள் கி,பி 1750 மேல் தான் ராமரை கடவுள் என்று நம்பிக்கை வந்தாது. அப்படியே ராமர் 17 லட்சும் வருஷத்திற்கு முன் பொறந்தாலும் இந்தியவில் பொறுந்திருக்க வாய்ப்புயில்லை. ஆரியார்கள் இந்தியவிற்கு வந்தே 2000 தொச்ச வருடம் தான் ஆகிறாது. அதற்கு முன் ராமர் ஆரியார்களின் கதையில் வாரகூடிய கதாப்பாத்திரம். இந்தியவில் அயோத்தி என்று ஊர் 2000 வருடத்திற்கு முன் இருந்ததிற்கு உண்டான வரலாறு இல்லை. சரி அப்படியே நம்பிக்கையின் அடிப்படையில் வைத்துக்கொண்டாலும் மக்கள் தொகை 1000 மேல் இருந்திருக்கவில்லை. அப்படி இருக்கா அப்புறம் எப்படி தாசார மகாராசுவுக்கு மட்டும் 60000 மனைவிக்கள் இருக்கும். எல்லாம் அலவுத்தீன் விளக்கு மாதிறி தான். எங்கேயோ லாஜிக் இடிக்கிறது. எல்லாம் நம்பிக்கை அடிப்படையில் தான் ராமர் சீரியல் இந்தியவில் Graphic களை உதவியுடன் ஓடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நிஜாம் பாய். ஆனால் மக்கள் இதைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள இல்லை.... பேசக்கூட பயப்படுகிறார்கள் என்பதே வேதனை தரும் செய்தி :(

      Delete
  9. அருமையான பகிர்வு!

    இந்த பிரச்னையை ஆரம்பத்திலிருந்து இன்று வரை கோர்வையாக கொடுத்துள்ளீர்கள். அடுத்து சார்மினார் ஆரம்பித்துள்ளது. சட்டம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் பாய்.... அடுத்த பாப்ரி மஸ்ஜிதாக அதை ஆக்காமல் அரசு காக்கா வேண்டும் என்பதே அவாவாக உள்ளது.... :(

      Delete
  10. நல்லதொரு நினைவூட்டல், மதம் நம்பிக்கைகளைக் காரணம் காட்டி பாரம்பரியச் சின்னங்களை அழிப்பவர் எவருமே மனிதகுல விரோதிகளே.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ. இன்னொரு 420 வருட பாரம்பரிய சின்னத்தையும் அழிக்க தயாராகி வருகிறார்கள் இப்போது. :(

      Delete
  11. Salaam sister annu,

    The compilation is really good as its in chronological order.
    As usual, muslims will not get justice. This is a common point where congress,BJP and all the other parties of India are united. Who can afford to lose majority votes? afterall, muslims are just minority !!

    ReplyDelete
    Replies
    1. Wa alaikum Salam Peer Bhai.

      Your points are right. We may be minority, but we are still citizens of this country, who have given more sacrifices for it to stand on its own, than any other community. May Allah bring the truth in front soon. insha Allaah.

      Delete
  12. சலாம் சகோதரி ...
    அற்புதமான தொகுப்பு ...
    அயோக்கியர்களின் பேச்சுகளுக்கு மத்தியில் வரலாற்றை பாதுகாத்த உங்களின் பணி நிச்சயம் பாரட்டுதலுக்குரியதே!
    பாபரின் புகழ்பெற்ற உயிலை இங்கே சொல்லிருந்தால் நன்றாக இருக்கும்
    http://newstbm.blogspot.in/2010/10/blog-post_3146.html
    யார் இந்த நிர்மோகி அகாரா ?
    http://newstbm.blogspot.in/2010/10/blog-post_04.html

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் சலாம் சாதிக் பாய்.

      அல்ஹம்துலில்லாஹ் தங்களால் தரப்பட்ட விஷயங்களையும் இணைத்து விட்டேன். ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர்.

      Delete
  13. ஸலாம் சகோ.அன்னு.
    அவ்வப்போது மீள் நினைவுக்குரிய ஒரு சிறந்த வரலாற்றுப்பதிவு. ஆக்கத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  14. பிர்தவ்ஷ்ராஜகுமாரன்.

    ஆரம்பம் முதல் மிக நல்ல தொகுப்பு ....நல்லதொரு நினைவூட்டல், மதம் நம்பிக்கைகளைக் காரணம் காட்டி பாரம்பரியச் சின்னங்களை அழிப்பவர் எவருமே மனிதகுல விரோதிகளே.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...