கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

Sunday, June 29, 2014 Anisha Yunus 2 Comments


கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

பதில்: ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் இரண்டு மட்டுமே. உடற்பசி மற்றும் வயிற்றுப்பசி. இந்த இரண்டுமே பூர்த்தியாயிருக்கும் நிலையில் மனிதன் தன் நிலை மறந்தே வாழ்கிறான். சுற்றிலும் நிகழ்பவைகளோ, நிகழ்ந்தவைகளோ, நிகழக்கூடியவைகளோ, அவனின் கவனத்தை திசை திருப்புவதில்லை. இந்த இரண்டில் எது மட்டுப்பட்டாலும், மனிதனின் எதிர்வினைகள், மிகுந்த தாக்கத்தை அவனைச்சுற்றி எல்லா வகையிலும் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், இரண்டுமே மட்டுப் படும்போது, மனிதன், தன் நிலையறிந்து, வரம்புகள் அறிந்து, எண்ணங்களையும், இச்சைகளையும் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுகிறான்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக்வாவுடையோர்களாக ஆகலாம். (அல் குர்’ஆன்2:183)

என்கிறது குர்’ஆன். தக்வா என்றால்?? தக்வா என்றால் இறையச்சம்? இறையச்சம் என்பது எப்போது ஏற்படும், தன்னிலை அறிந்தவனுக்கு மட்டுமே இறையச்சமும், இறைத்திருப்தியைப் பெற வேண்டும் என்னும் வேட்கையும் ஏற்படும். அதைத்தான் மற்ற மார்க்கங்களும் மோட்சம் என்கின்றன. அதன் சூட்சுமம் என்ன, தன்னிலை அறிந்து, தன் வாழ்வின் பொருள் அறிந்து அதன் மேல் நற்செயல்கள் செய்ய முற்படல். அதுவே இறைவனை சென்றடையச் செய்யும்.

படைத்தவனுக்குத்தானே படைக்கப்பட்டவற்றின் பலமும், பலவீனமும் தெரியும்... அல்லவா?? எனவேதான் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட தவணையில் மீண்டும் மீண்டும் மனிதனை தன் நிலையறிய வைக்க ஒரு ஒழுக்கநிலையை கட்டாயமாக்கினான். வருடத்திற்கோர் முறை, ஒரு மாதம் முழுக்க, பகலில் இந்த இரண்டுப் பசியையும் அனுபவியுங்கள், இரண்டையும் நிரப்ப வேண்டாம், என நோன்பு நோற்கச் சொல்கிறான். இந்த மாதம் மட்டுமன்றி, திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களையும் நபிமொழி, நோன்பு நோற்கச் சொல்கிறது. 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.


நோன்பு, மானம் காக்கும் கேடயம் என்கிறது. சொல்வதற்கு மிக எளிதாகத் தெரியும் இந்த கட்டளை, அனுபவிப்பதற்கு எளிதானதல்ல. ஏன்??

எப்படி வயிற்றுக்கும் உடலுக்கும் உணவு தடுக்கப்படுகிறதோ, அதே போல் சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும், இறைவன் வரம்புகளை (எல்லா நாட்களிலுமே அவை வரம்புகளே எனினும்) இப்பொழுது இன்னும் மிகைப்படுத்துகிறான்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் நபிவழி கூறுகிறது. உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என்று இன்னுமோர் நபிமொழி கூறுகிறது.

சொல், செயல்களில் நிதானத்தையும், வரம்புகளையும் விழிப்புடன் கவனிக்கச் சொல்கிறான். சுற்றியிருக்கும் வறியவர்களை, வளம் / வலிமை குன்றியவர்களை கவனிக்கச் சொல்கிறான். இல்லாமை என்பதைப் புரியவைக்கிறான். இத்தகைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துவது என்பது மிக மிகப் பெரும் பரீட்சையாகும். சுய விருப்பத்தின் பேரிலான இச்சைகளுக்கும், புலன்களுக்கும் Vs இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதற்குமிடையேயான பரீட்சை. இத்தகைய பரீட்சையை ஒரு மாதம் முழுக்க தன் விருப்பத்தின் பேரிலேயே முஸ்லிம் மக்கள் செய்கிறார்கள். இந்த மாதம்தான் ரமதான் மாதம்.

இதே மாதத்தில்தான், இவ்வுலகின் இறுதி மனிதன் வரை கடைப்பிடிக்கக்கூடிய தனிமனித ஒழுங்கு, இறைபொருத்தம் தேடும் வழிகள், பிற்கால சமுதாயங்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள், சமூக / குடும்ப / தனி மனித / அரசியல் சார்ந்த / பொருளாதார சட்டங்கள் என எல்லாத்திசையிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் சட்டங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருக் குர்’ஆனும் அருளப்பெற்றது.

எப்படி விரதம் இருப்பதாலும், நீராகாரம், பழங்கள் போன்ற பத்திய உணவுகளை மட்டுமே உட்கொள்வதாலும் உடலிலிருக்கும் அசுத்தங்கள் / toxins வெளியேறிவிடும் என்பது மருத்துவ உண்மையோ, அதே போல்... இவ்வகையிலான புலன்களின் மீதான நோன்பு, மனித மனதினை, எண்ணங்களைத் தூய்மைப்படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

மாதம் முழுக்க பரீட்சை வைத்து, களைப்படைந்த மக்களுக்கு ரமதான் மாதம் முடிவுற்றதும், “ஈதுல் ஃபித்ர்” என்னும் பண்டிகை / ஓர் நாள் விழா / உற்சாகக்
கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படுகிறது... அதுவும், இறைவனைத் தொழுது நன்றி செலுத்தும் விதமாக.

உண்மையில், இந்தப் பரீட்சையை ஆழ்மனதிலிருந்து ஒரு உத்வேகத்துடன் செய்தவர்களுக்கு, இந்த விடை கூறல் - பெருநாள், மிகக் கனமானதாகவே இருக்கும். இல்லையா??

(இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள: http://www.satyamargam.com/islam/analysis/1018-1018.html)

.

2 comments:

உங்கள் கருத்துக்கள்...