குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)
3. உளவியல் குறைபாடுகள்
இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.
a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷயங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.
ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.
a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவநம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.
a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.
தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!
தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.
லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவனே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.
12 comments:
உங்கள் கருத்துக்கள்...