அல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவனா?

Friday, May 18, 2012 Anisha Yunus 8 Comments






நிறைய பேர் நினைத்துக் கொண்டிருப்பது போல அல்லாஹ் "முஸ்லிம்களுக்கு மட்டுமான‌" இறைவன் அல்ல.

'அல்லாஹ்' என்னும் அரபுச் சொல் வேறுபாடில்லாமல், உங்களையும் என்னையும் படைத்த 'ஓரிறைவனை' குறிக்கிறது. அரபு மொழி பேசும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட 'அல்லாஹ்' எனும் சொல்லையே இறைவனைக் குறிக்க உபயோகிக்கின்றனர்.

'தண்ணீர்'(தமிழ்), 'நீரு'(கன்னடம்), 'வாட்டர்'(ஆங்கிலம்) என எப்படி அழைத்தாலும் அது ஒரே பொருளையே குறிக்கிறது. வேறு மொழியில் கூப்பிடுவதால் மட்டும் ஒரு குவளை தண்ணீர் வேறு பொருளாகி விடுமா? அதே போல்தான் ஈஷ்வர்(ஹிந்தி), தேவரு(கன்னடம்), அல்லாஹ்(அரபி) என்னும் எல்லா சொற்களும் இந்த மாபெரும் உலகை படைத்த இறைவனை மட்டுமே குறிக்கும்.


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
"அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:2)

இஸ்லாம் - என்னும் வார்த்தைக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்பது ஒரு அரபுச் சொல். இஸ்லாம் என்னும் வார்த்தைக்கு 'ஸில்ம்' மற்றும் 'ஸலாம்' என்னும் இரு பொருட்கள் உள்ளது. ஸலாம் என்றால் 'அமைதி' என்றும் 'ஸில்ம்' என்றால் 'கீழ்ப்படிதல்' என்றும் அர்த்தம்.

அதன்படி 'இஸ்லாம்' என்றால் இந்தப் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து அதன் மூலம் அமைதியடைதல் என்று அர்த்தம்.

இஸ்லாத்தை தோற்றுவித்தவர் யார்?

இஸ்லாம் ஒரு புதிய மார்க்கம் என இன்றும் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். முஹம்மது நபி அவர்களால் இந்த மதம் தோற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை. உலகின் முதல் மனிதன் ஆதம்மிலிருந்து அதன் பின் தோன்றிய எல்லா மனிதர்களுக்கும் இஸ்லாம் எனும் ஒரு வாழ்க்கை முறையை, வாழும் மார்க்கத்தை நம் அனைவரையும் படைத்த இறைவன் தந்துள்ளான்.

இறைவன் இந்த மனிதக்குலத்திற்கு அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும், நூஹ்(Noah), இப்ராஹீம்(Abraham), மூஸா(Moses), சுலைமான்(Soloman), தாவூத்(David), ஈஸா(Jesus) மற்றும் அனைத்து இறைத் தூதர்களும் இஸ்லாத்தையே அதாவது ஓரிறைக் கொள்கையையே தத்தம் வாழ்க்கை முறையாக பின்பற்றினர்.

இறைவன் அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும் இறைவனுக்கு கீழ்ப்படியவும், இறைச்சொல்லை மதித்தும், இறைவனுக்கு நேர்மையாய் வாழவுமே மக்களுக்கு கற்றுத் தந்தனர்.


இனி, "முஸ்லிம் என்றால் யார்?"

.

8 comments:

உங்கள் கருத்துக்கள்...

ரயில் பெட்டி - 3

Wednesday, May 16, 2012 Anisha Yunus 4 Comments

ஸ்ஸ்ஸ்.... ஹுசைனம்மா அக்கா டிரங்குப் பெட்டிய போட்டாதான் எனக்கு ட்ரெயின் பொட்டி பதிவு போடவே நினைவு வருது .... ஹி ஹி ஹி.... என்ன செய்ய... அங்கங்க கொஞ்சம் அலாரம் வெச்சிருக்கணும் இல்லைன்னா.... இப்படித்தான்....

--- ------ ------------ ----- ---


ரொம்ப நாள்... இல்ல இல்ல மாதம்... இல்ல இல்ல... கிட்டத்தட்ட வருடங்களுக்கு பிறகு என்னுடைய தோழி ஒருத்திக்கு போன் செய்து பேச முடிந்தது. (வருஷக்கணக்கா அதே நம்பர் அவளும் வச்சிருக்கா... என்னிடமும் அது இருக்கு.... ஹி ஹி) அததற்கு நேரம் வரணும் இல்ல.....அதான் லேட்டு.  ஆனா என்ன, நான் பேசிய நேரம் ஏண்டா இவ்ளோ நாள் பேசலைன்னு ஆயிடுச்சு. இப்போதான் ஒரு வாரம் முன்னாடி அவளுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கு. அதற்கு ஹைட்றேசெபலஸ்ன்னு ஒரு வியாதி (Hydrocephalus). புதுசா இப்போதான் இது மாதிரி எல்லாம் கேட்கிறோம் இல்லியா? அது எப்படிப்பட்ட வியாதின்னா மூளையில் இருக்கும் நீர் அதிகமாக இருப்பது. சாதாரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு 12 - 14மிலி மட்டும்தான் தண்ணீர் இருக்கணும் மூளையில். ஆனால் இந்த பாப்பாக்கு 16மிலி தண்ணீர் இருக்கு. அல்லாஹு அக்பர். முன்று மாதம் மானிட்டர் செய்துட்டு அந்த தண்ணி வத்திருமா இல்லை ஆபரேஷன் செய்யிறதான்னு பார்க்கலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. இந்த பக்கத்துல அது பற்றிய தகவல்களை படிச்சு உயிர் போயி உயிர் வந்த நிலைதான் எனக்கு. ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு இதைப்பற்றி பேசலாம். ஆனால் இந்த விவரம் எதுவுமே இன்னும் என் தோழிக்கு தெரியாது. ஆபரேஷன் செய்தால் சரியாயிடும்னு மட்டும்தான் தெரியும். எல்லாரும் இறைவனிடம் இதற்காக வேண்டிக்குங்க ப்ளீஸ்.
#ஆனா ஆளானப்பட்ட இந்த வியாதிக்கு அரை நுற்றாண்டு முன்னமே மருந்தும், வியாதியைப் போக்கும் வழிமுறையையும் கண்டுபிடிச்சிருக்காங்கன்னா என்ன சொல்ல :) :)

--- ------ ------------ ----- ---

ரயில் பெட்டின்னு சொன்ன பின்தான் நினைவுக்கு வருது. யாருக்கெல்லாம் ரயில் பயணம் பிடிக்கும்? முதல் முதல்ல குதிரைகளை வைத்துதான் ரயில்வண்டி இழுத்தாங்க என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி அதுல பயணம் செய்திருப்பாங்கன்னு யோசிக்கறேன். நடந்து போக முடியாது. எழுந்து நிக்க முடியாது. குறைந்த தூரங்களை வேண்டுமானால் இப்படி கடந்திருக்கலாம். அதிக தூரத்தை எப்படி கடக்க முடியும்? அரதப் பழசான ரயில் சிஸ்டம் இன்னும் ஆஸ்திரியாவுல இருக்காம். அங்க யாராவது போயி வந்திருந்தால் போட்டோ போடுங்க. :))))))
--- ------ ------------ ----- ---

ரொம்ப சிறிய கதைகளை எழுதிப் பார்க்க சொல்லி ஹரீஷ்ண்ணா அவர் வலைப்பூவில சொல்லி இருந்தார். அப்ப இருந்து நானும் முயற்சிக்கிறேன். சரியா வந்திருக்கா பாருங்க.

"எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது இன்னிக்காவது சரியா இருக்கணும்..." பாக்கெட்டிலிருந்த ரிப்போர்ட் கார்டை எடுத்து 'பெற்றோர் கையெழுத்து பகுதி"யை பார்த்துக் கொண்டான்.
"போன தடவை பெயில் ஆன மாதிரி இருக்ககூடாது. இந்த தடவை எவ்ளோ முயற்சி, எவ்ளோ கஷ்டப்பட்டோம்... ".... டீச்சரிடம் அதை தரும்வரை மனது நடுங்கியது.
"...ம்ம் இந்த தடவ உங்கப்பா ஒன்னும் சொல்லலியா? கையெழுத்து போட்டு தந்துட்டாரா...?? போ... போயி உக்காரு.."
"ஹப்பாடா.... பாஸாயிட்டோம்..!!"

--- ------ ------------ ----- ---
நாங்கள் இருவருமே வேலைக்கு போவதால் ஜுஜ்ஜுவும் இப்ராஹீமும் டே கேருக்கு(Day Care) போகின்றனர். அந்த டே கேரை  நிர்வகிப்பது ஒரு அரபி பெண். சில நாள் முன்பு மாலையில், அவர்களுக்கு கொடுத்தனுப்பும் உணவுப்பையை செக் செய்யும்போது ஒரு தயிர் டப்பாவும் அதனுடன் ஒரு குறிப்பும் இருந்தது. அந்தத் தயிரை இப்ராஹீம் மிக விரும்பி சாப்பிடுவதாகவும் அதை கடையில் வாங்கி அனுப்புமாறும் எழுதி இருந்தது. எப்பொழுதும் போல அதில் என்னென்ன சேர்த்திருக்கிறது என்று நெட்டில் தேடிப் பார்த்தேன். ஜெலட்டின் இல்லை, ஆனால் தயிரை நன்கு கெட்டியாக வைக்க மாட்டின் தோலிலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளை (Gelatin made  from Cow Hide)அதில் உபயோகப்படுத்துவதாக அந்த தயிர் கம்பெனி வெப்சைட்டில் எழுதி இருந்தது. அதுவும் மாட்டுத் தோலிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பொருள், 'உண்பதற்குரியது அல்ல'  (Gelatin made from Inedible Cow Hide !!!) என்கிற காரணத்தால் அதற்கு யூத ராப்பாய் (Jewish Rabbi) ஒருவர் 'கோஷேர்' (Kosher)எண்ணும் அனுமதியை வழங்கியுள்ளார்.. அதைப் பார்த்ததும் எப்பொழுதும் போல அமெரிக்க நாட்டாமையான பிபிபிக்கு(BBB.org) ஒரு கம்ப்ளைன்ட் செய்தேன். உண்ணத் தகுதி இல்லாத பொருளை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்லி. அவர்கள் தயிர் கம்பெனிக்கு எழுதியதற்கு, இந்தப் பொருள் 'GRAS' எண்ணும் தகுதியின் கீழ் அமெரிக்க உணவுத்துறை (FDA.GOV) அனுமதி வழங்கியிருக்கிறது என்று தயிர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. 

வேதனை என்னவென்றால் அந்த  'GRAS' எண்ணும் தகுதியுடைய பொருட்களை உணவுத்துறை முக்கால்வாசி நாட்கள் பரிசோதிப்பதே இல்லை.  சரி என்று அமெரிக்க உணவுத்துறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் தந்த பதில் அதுதான். ஒரு குறிப்பிட்ட பிராசஸ்(process) மூலம் உண்ணுவதற்கு தகுதியற்ற அந்த ஜெலடினை உண்ணத்தகுந்ததாக மாற்றலாம் என(Inedible to edible). அது என்னப்பா அப்படி ஒரு பிராசஸ்னு கேட்டு எழுதினா நெட்டுல தேடிக்குங்க. அது பற்றிய விவரம் எங்ககிட்ட இல்லைன்னு எழுதறாங்க.... 

இது என்ன சின்னப்பசங்க விளையாட்டா??? எங்கே இதை கொண்டு போறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். அதை பத்தி தேடினப்ப இன்னொரு யூத ராப்பாயே கிண்டலாக எழுதியிருந்த ஒரு பதில் கிடைத்தது இங்கே... 

ஙே..... :((
#எங்கே போகும் இந்தப் பாதை?


--- ------ ------------ ----- ---

உங்க வீட்டில் இதுக்கும் வாண்டுக்கு கலர் செய்வது பெயிண்ட்டிங் எல்லாம் பிடிக்குமா? அப்படின்னா இதை தெரிஞ்சுக்குங்க. ஒரு வருடத்துக்கு Crayola தயாரிக்கிற கலர் மார்க்கர்ஸ் அரை பில்லியன் எண்ணிக்கை அளவு.  அதில் விசேஷம் என்னவென்றால் அத்தனையும் ஒரே லைன்ல வெச்சா மொத்த பூமியை மூணு தரம் சுத்தி வந்துரலாம். இதிலென்ன எனக்கு பிரச்சினைன்னு யோசிக்கிறீங்களா? அரை பில்லியன் மார்க்கருல ஒன்னு கூட மண்ணில் மக்கும் பொருளால் ஆனது கிடையாது!!!!!!!!!!!!!!!!! ரத்தம் கொதிக்குதா? என்ன செய்யனும்னு யோசிக்கிறீங்களா? எனக்கு தெரிஞ்ச்க ஒரு வழி, இங்கன போயி தோள் குடுப்பது. இதுக்கும் மேல செய்ய வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பா செய்ங்க,,,, நம் பூமி நம் அக்கறை மிக மிக முக்கியம் !! :)


சரி, இன்னும் கொஞ்சம் கழிச்சு அடுத்த அலாரம் அடிக்கிறப்ப அடுத்த பதிவு... :)

அதுவரை.........ஸலாம்.  :)


.



.

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

புதுசு கண்ணா புதுசு (பாகம் 2)

Thursday, May 10, 2012 Anisha Yunus 8 Comments

ஒகே. ஒரு வழியா அடுத்த பதிவு போட நேரம் கிடைச்சுது :)

நாம் போன பதிவுல சேர் எப்படி புதுசா மாத்தறதுன்னு பார்த்தோம் இல்லியா? இன்னிக்கு அதற்கான ஒரு டேபிளை செட் செய்யலாம். சீக்கிரம் செய்து எனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புங்க :)

தேவையானவை:
1. பழைய டேபிள் (ஹி ஹி ஹி)
2. உப்புக் காகிதம் (இது எல்லா டேபிளுக்கும் தேவைப்படாது. ஆனால் ஒரு இடத்தில் வழவழப்பாகவும் இன்னொரு இடத்தில் சொரசொரப்புடனும் இருந்தால் கண்டிப்பாக தேவைப்படும். மேடு பள்ளங்களை சரி செய்யவும், தூசிகளை அகற்றி தூய்மைப்படுத்தவும் தேவை.)
3. டேபிளின் நீளத்துக்கேற்ற துணி
4. மாட் பாட்ஜ் (இது கிட்டத்தட்ட நம்ம ஊரு ஃபெவிகால்தான். சந்தேகமே இல்லை. :)
5. அக்ரிலிக் ஸ்ப்ரே (அதுல இருக்கும் வார்னிங் எல்லாம் நல்லா படிச்சு பார்த்து உபயோகிக்கணும்.)
6. ஸ்க்ரூ டிரைவர் (ஆமா இதுக்கு தமிழ்ல பெயர் என்ன???)
7. ப்ளையர் (இதுக்கும்  தமிழ் பெயர் யாராவது சொல்லுங்கப்பா ப்ளீஸ்)
8. டக்ட் டேப்
9.ஃபோம் பிரஷ் (மாட் பாட்ஜை பரப்பி விட)
10. ஈரத்துணி

செய்முறை:
முதலில் டேபிளை நல்லா வழவழப்பு, தூசி துகள் இல்லாம உப்புக்காகிதம் வைத்து நல்லா துடைச்சு எடுங்க. அவ்வளவா கீறல் தூசி இல்லாத, வழவழப்பும் இல்லாத டேபிள் என்றால் உப்புக்காகிதம் வேண்டாம்.


அதன் பின் ஈரத்துணி வச்சு மறுபடியும் நல்லா சுத்தம் செய்து காய விடுங்க.




ஈரம் காய்ந்த பின் அந்த டேபிள் மேல துணி வச்சு அளவு பார்த்து வெட்டுங்க. என்னுடைய டேபிள் நிறமும் துணி நிறமும் மங்கலாக இருந்ததால் வெள்ளைத்துணியும் ஒன்று சேர்த்து வெட்டி உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று.


அதன் பின் ஃபோம் பிரஷ் கொண்டு ஒரே மாதிரி, மேலும் கீழும் இல்லாமல், அதிகம் கம்மி என்றும் இல்லாமல் ஒரே அளவில் சீராக மாட் பாட்ஜை / ஃபெவிகாலை தடவுங்கள். சீக்கிரம் செய்யணும்.


வெயிலில்லாத அதிக காற்றில்லாத இல்லாத இடத்தில் வைத்து செய்ங்க. அப்போதான் முழு டேபிளும் பசை தடவும் வரை காயாமல் இருக்கும்.

சீராக பசையை தடவியபின் வெள்ளைத்துணியை வைத்து ஒட்டவும். ஒரே துணிதான் நீங்கள் உபயோகிக்கப்போகிறீர்கள் என்றால் இந்த பாயிண்ட்டை விட்டு விடுங்கள்.



அந்த துணி காய சிறிது நேரம் கொடுங்கள். அந்த துணி காய்ந்ததும் மீண்டும் அதன் மேல் பசை தடவி மேல் துணி / வேறு கலர் துணி ஒட்டுங்கள்.
இரண்டாவது துணி போட்ட பின் பசை நன்கு ஒட்டுவதற்காக டேபிளை தலைகீழாக்கி விட்டுள்ளேன். கனமான எதாவது பொருளும் வைக்கலாம்.
 
ஒரு துணியானாலும், இரு துணியானாலும் கவனமாக காற்றில்லாதவாறு நன்கு அழுத்தி விட வேண்டும்.  மேல் துணியும் நன்கு காயும் வரை விடுங்கள்.





அக்ரிலிக் சீலர்
காய்ந்த பின் அதன் மேல் இன்னொரு தடவை மாட் பாட்ஜை தடவவும். இது எதற்கு என்றால், அந்த துணியை, துணி போலில்லாமல் மடமடப்பாக ப்ளாஸ்டிக் போல மாற்ற. ஒரு முறை நன்கு காய்ந்ததும் மறுமுறையும் பசை தடவி காய விடுங்கள். அதன் பின் அக்ரிலிக் சீலர் கொண்டு நன்கு ஒரே சீராக ஸ்ப்ரே செய்யுங்கள். கிட்டத்தட்ட வார்னிஷ் செய்தது போலாகி விடும்.


எனக்கு பார்டர் வேண்டுமாக இருந்ததால் துணியை நன்கு திசையிலும் கீழே ஒட்டிவிட்டு, கருப்பு பார்டர் போல கருப்பு டக்ட் டேப்பை ஒட்டியுள்ளேன். உங்களுக்கு பார்டர் வேண்டாம் என்றால் ஓரத்தில் வைத்து துணியை கத்தரித்து விட்டு பிசிறில்லாமல் பார்த்துக்கொள்ளவும். ஓரங்களில் இரண்டு முறையாவது மாட் பாட்ஜை தடவி விடவும்.



தண்ணீர் மற்றும் சூடான பொருட்களிடம் இருந்து காப்பாற்றினால் போதும். இதோ டேபிளும் சேரும் ரெடி :))

8 comments:

உங்கள் கருத்துக்கள்...

இறைவனை படைத்தது யார்?

Thursday, May 03, 2012 Anisha Yunus 7 Comments



இந்த உலகில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்டவர்கள் என்றால் எதற்கெடுத்தாலும், எல்லா விஷயத்திற்கும் நதிமூலம் ரிஷிமூலம் பார்த்தே தீருவேன் என்று கூறுபவர்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான், எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் எனில் இறைவனைப் படைத்தது யார்?

நம் பெற்றோர் மூலம் நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள், அவர்கள் அவர்களின் பெற்றோரால் வந்தார்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அது எங்கே போய் முடியுமெனில், "அப்போ இறைவன் எப்படி உருவானார்? அல்லது அவனைப் படைத்தது யார்?"

பதில் மிக எளிது. 

இந்த முழு அண்டமும் உருவாவதற்கு முன் ஒரு பொருள் உருவாவது முக்கியம். அந்தப் பொருளைக் கொண்டுதான் மற்ற பொருட்களின் பிறப்பு இறப்பை கணக்கிட முடியும். அப்படிப்பட்ட பொருள் வேறெதையும் நம்பி அல்லது வேறு எந்த கட்டுப்பாடுக்கும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அது என்ன??? நேரம் !!!!

நேரத்தைப் பொறுத்தே நாம் அனைத்து பிறப்பு இறப்புகளை பதிவு செய்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் 'நேரத்தை' படைத்தவன் பிறப்பும் இல்லாமல் இறப்பும் இல்லாதவனாக இருக்க வேண்டும். நேரம் அல்லது மணித்துளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர இயலாதவனாக இருக்க வேண்டும். அந்த ஒருவனையே நாம் இறைவன் என்கிறோம்.



 

உதாரணத்துக்கு ஒரு பென்சிலை வடிவமைக்க ஒருவர் முயல்கிறார். அவரை 'எண் 1' என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னால் தனியாக அந்த பென்சிலை வடிவைக்க இயலாது. 'எண் 2'இன் உதவி தேவை என்கிறார். எண் இரண்டு நபரோ எண் மூன்றாம் நபரின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது என்கிறார். இப்படியே ஒவ்வொரு நபரும் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த பென்சிலை கடைசியில் வடிவமைப்பதுதான் யார்? பதிலில்லை இல்லையா? ஏனெனில் இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இன்றி என்னால் அந்த பென்சிலை வடிவமைக்க இயலும் என்று கூற வேண்டும். வடிவமைக்க வேண்டும். அப்படி இறுதியில் ஒரு நபராவது யாருடைய உதவியும் இல்லாமல் வடிவமைத்தால்தான் அந்த சங்கிலி தொடர் முடிவுக்கு வரும். இல்லையேல் அது முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். பென்சிலும் வடிவமைக்கப் படவே படாது.

அந்த ஒருவர்தான் யாரையும் சாராமல் தனியே இயங்கக்கூடிய ஆள். அவரை மட்டுமே நாம் பரம்பொருள், சூப்பர்பவர் அல்லது இறைவன் என்போம். யாரையும் சாராமல், தனியே இயங்கவும், படைக்கவும் தெரிந்தவனே இறைவன். எனவே 'இறைவனைப் படைத்தது யார்' என்ற கேள்விக்கே இப்பொழுது இடமில்லை.

இறைவன் என்பவன் யார்?
சரி, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. 'தாய் என்பவள் யார்?' உங்களின் பதில் என்ன? யாரொருவர் ஒரு குழந்தையை பெற முடியுமோ அவரே தாயாவார். இதுதான் எளிமையான பதில். 
இல்லை என் தாயை எனக்கு பிடிக்கவில்லை, அன்னை தெரசாவை கூட்டி வாருங்கள் அவர்தான் என் தாய் என்று நாம் கூற முடியுமா? நாம் எல்லோரும் அன்னை என்றழைப்பதால் அவர் நம் அன்னையாக முடியுமா? நம்முடைய தாய் யார் என்பதை முடிவெடுக்கும் வாய்ப்பு நம்மிடம் இல்லை.

அதே போல் என்னை, உங்களை படைத்தது ஒரிறைவன்.... ஒரே இறைவன். வேறு யாரை வேண்டுமானாலும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் நாம் இறைவன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய உண்மையான இறைவன் ஆகுமா? நம்மைப் படைத்தவனைப்போல ஆகுமா? எப்படி தந்தை தாயை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு / உரிமை நம்மிடம் இல்லையோ அதே போல் படைத்தவனை தவிர்த்து வேறெதையும் நம்முடைய இறைவனாக அங்கீகரிக்கும் வாய்ப்பும் உரிமையும் நம்மிடம் இல்லை. நம்மை படைத்தவன் மட்டுமே நம் இறைவன். உலகறிந்த ஒரே உண்மை இதுதான். எல்லா சமூகங்களிலும், சமயங்களிலும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரே கருத்து இதுவே.

திருமறை குர்'ஆனில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்:


வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கே
தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - 
அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன். 
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; 
அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் 
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; 
மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். (57:3)

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

.

7 comments:

உங்கள் கருத்துக்கள்...