Showing posts with label Deepதீ. Show all posts

வியர்க்காத மனம்...


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வேர் பிடிக்கக் கொஞ்சம்
வெப்பக்காற்றையும்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

பாவத்துணிகள்...


இயேசுவை அறைந்தவர்கள்..
ஏதோ ஒரு ஆணியில்
அறைந்திருக்கலாம்
என்னையும்,
அத்தனை பேரின்
பாவத்திற்காகவும்
மரித்த நீ, கொஞ்சமாய்
மரித்திருக்கலாம்
என் முட்டாள்தனங்களுக்காகவும்..
குருடரையெல்லாம்
காண வைத்தாயாம்..
முடவரை
நடக்கவைத்தாயாமே..
இதயம் இறந்தவர்களை
என்ன செய்திருப்பாய்
நீ..?
அகிலத்திற்கே
அப்பத்தை பகிர்ந்தளித்த
உனக்குமே
போர்த்தக்கிடைத்தது
அத்துணை பேரின்
பாவத்துணிகள் தான்..
பாவம் செய்தவள் மீது
கல்லெறிய
பாவமே செய்யாதவர்களை
அழைத்தாயாமே..
இன்றைக்கு
இருந்திருந்தால்
கற்களிலும்
பெருந்தொடக்கில்லாதவற்றைத்
தேடியிருப்பாய் நீ..
தேவனே..
தேவனே..
ஏன் எனைக் கை விட்டீர்
என்றா கதறுகிறாய்..
உனக்குமே தெரியவில்லை
போ....!
அற்பர்கள் மட்டுமின்றி
ஆலயங்களும்
பிசுபிசுப்பில்
மிதந்து கொண்டிருக்கிறதென..
‪#‎Deepதீ

அது ஒரு கனாக்காலம்...


.
அப்பாவின் வெஸ்பா வருவதற்குள்
பள்ளிக்கு எதிரில் இருக்கும் நூலகத்தில் நுழைந்து
புத்தகப் பாற்கடலில்
தொலைந்து போனதொரு
கனாக்காலம்....

.
அடுத்தாற்போல் இருக்கும் பள்ளிவாசலில்
தென்னைமரங்கள் வழியோடி
ஹௌழில் மீன்களுக்கு
பொரியை வாரி
இறைத்ததொரு
கனாக்காலம்....

.
மூடியிருக்கும் ரயில்வே கேட்டுக்குள் புகுந்தும்
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தும்
இரு கைகள் விரித்தபடி,
இரு கண்கள் மூடியபடி
இரு கால்களையும் சமணமிட்டு
இரு தரப்பையும் கண்களில்
அள்ளிக்கொண்டு
சைக்கிளில் கல்விச்சாலைக்கு
சிட்டாய்ப் பறந்ததொரு
கனாக்காலம்....

.
சுடும் நவாப்பழத்தையும்
சுடாத வேப்பம்பழத்தையும்
பாவாடையில் கட்டிக்கொண்டு
ஆகப்பெரும் சொத்தாக
பாவித்ததொரு
கனாக்காலம்...

.
மழைக்கும் முன்னரே கிழிந்து நிற்கும்
நோட்டுப்புத்தகங்களை
மழை நீரில் கப்பலாக்க வேண்டி
இன்னும் கிழித்ததொரு
கனாக்காலம்...

.
நாக்கில் தடவி எண்ணிய நோட்டுக்களும்,
கடையிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும்
ஆலாய்ப்பறந்து மூக்கினை உள்விட்டு உள்வாங்கிய
புத்தம்புது பாடப்புத்தகங்களும்,
இம்முறை Camelஆ, Camlinஆ,, Natrajஆ, Foreignஆ
என அங்கலாய்க்க வைத்த
ஜாமெட்ரி பாக்ஸ்களும்,
தொட்டால் அப்பும் எண்ணெயில் மூழ்கிய
இரட்டைப் பின்னல்களும்,
குழலிலேயே மலர்ந்ததோ எனும் அழகில்
பூத்துக்குலுங்கிய ஜாதிமல்லியும், டிசம்பர்களும்
நிறைந்தும் நிறையாத நினைவுகளைப் பரிசளித்ததொரு
கனாக்காலம்...

.
நகர்கின்ற இயந்திரவாழ்வில்
இனிக்கும் காயங்களாய்
இழந்த சுகங்களை இன்னும் இன்னும்
நினைவுக்கூடுகளில்
அள்ளி இறைத்தபடி
பொங்கிக்கொண்டே இருக்கின்றது
எந்தன் கனாக்காலம்....

.
இறந்தது மட்டுமா....
இன்னும் வர வேண்டியதுமே
அப்படித்தான் எனச்
சிரித்தபடி நகர்கிறது
வாழ்வெனும்
கனாக்காலம்.....


#‎அது_ஒரு__கனா_காலம்‬
‪#‎சிறகுகள்‬ குழுமத்திற்காக...
‪#‎நான்‬

பல்லிடுக்கில் போராளிகள்...


.
கற்களுக்கு அஞ்சி
தோட்டாக்களுடன் கைகுலுக்குகிறோம்

.
காயங்களுக்கு அஞ்சி
கொலைகளை முத்தமிடுகிறோம்

.
விழிகளைச் சந்திக்க
திராணியற்று
வேஷங்களை
மேடையேற்றுகிறோம்

.
விரியும் முன்
சுருளும் மலர்களை
குப்பைக்கூடையின் உள்ளே
கசங்கிய காகிதமாய்ப்
புதைக்கிறோம்

.
சுயத்தை உள்ளங்களில்
பூட்டி வைத்து
பல்லிடுக்கில் போராளிகளாய்
கொக்கரிக்கிறோம்

.
எம்மவர் யாருமில்லையே
கிசுகிசுத்துக்கொள்கிறோம்

.
இறப்பும் இழப்பும்
எண்களாகின்றன

.
நரிகளை
இறையாக்குகிறோம்.

.
ஆடுகள்
இரையாகின்றன.



.
#‎நான்‬
‪#‎Thoughts‬ over ‪#‎Palestine

புன்னகைகள்

 
 
புன்னகைகள்
புரியப்படுகின்றன

வாழ்வாக,
சாபமாக,

துயரமாக,
சுமையாக,

புறக்கணிப்பாக,
கரிசனமிக்கதாக,

அன்பின் விளைவாக,
அலட்சியத்தின் பரிசாக,

சொல்ல ஏதுவுமில்லா
தருணங்களில்
மௌனத்தின்
சாவியாக,

வெறுமையாக,
பசுமையாக,

ஏதேனும் ஓர் வடிவைத் தாங்கியபடி
புன்னகைகள்
புரியப்படத்தான் செய்கின்றன.

வறண்ட காணியின்
வேரற்ற பெருமூச்சாய்
வெளிப்படும் ஒரு புன்னகை -

ஈரம் தேடும்
பிஞ்சுக்கண்களுக்கு
வாழ்வின் அர்த்தத்தை
மீட்டுத் தரும் என்றால்,

விட்டுச் செல்வோமே
வெறுமனே ஓர்
புன்னகையை...
 
# Deepதீ

நீ - நான் - மௌனம்.



வார்த்தைகள்
ஏதுமற்ற
அலங்காரங்களால்
நிறைந்து போகிறது
உன் மௌனம்.

தானல்லாத
தன்னை
எதிர்கொள்ள இயலாப்
பெருவெளியில்
தோல்வியுறுகின்றது
என் மௌனம்.

சுயமெனும்
கோரப்பிடியில்
மௌனத்தின்
ஆயுதங்களை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறோம்
நாம்.

நேசம்,
காற்றோடு
காற்றாகின்றது...


#Deepதீ

படம் உதவி - கூகுள்

இதமாய்... இதமாய்...


தீயின்
கருநாக்கு
தழுவி
நிற்கின்றது.

கண்ணீரின்
ஆழிப்பெருவலை
மூச்சை உள்ளடக்கும்
பெருமுயற்சியில்
களைக்கின்றது.

மாயையின்
பெருங்குரல்கள்
செவியை அடைத்தபடி...

உண்மையின்
உலர்நாக்கு
சப்தத்தின் முகவரியைத்
தொலைத்தபடி...

யுகங்கள் முழுதும்
அக்கினிக்கு
தாரைவார்த்து
தொலைந்து போகின்றேன்
நான்...
அணுஅணுவாய்,
செதில் செதிலாய்,

சாம்பலாய்ச் சரிந்தேன்
இனி
துயரில்லை,
துன்பமில்லை,
என இன்புறும்
வேளையில்,

மீண்டும்
வருகின்றாய்
உன் பிஞ்சு விரல்களால்
மீட்டு என்னை....

இரக்கமற்ற இவ்வுலகிற்கு
இதமாய்....
இதமாய்...

#Deepதீ

வாழ்வென்னும் நதி....


கூழாங்கற்களைத் துழாவிச் செல்லும்
நதி போல் நகர்கிறது வாழ்வு;

இறந்த காலத்தையும்
இறந்து கொண்டிருக்கும் காலத்தையும்
தழுவித் தழுவி
மெய் மறந்தவாறே...

நீள் வானத்தின்
நீலத்தை போர்த்தியவாறு
உறங்கிப் போகின்றன
நதியின் மீன்கள்;

கல் விழும் சப்தமும்
எழாமலே உறங்கும்
கனமான நிசப்தத்துடன்
கை கோர்த்தவாறே....

இக்கரையில்
நின்று கொண்டுள்ளேன் நான்,
சிப்பிகளையும் முத்துக்களையும்
மணலோடு மணலாக்கி விட்டு
உடைந்து போன ஓடுகளையும்
செல்லரித்துப் போன
சங்குகளையும்
காற்சட்டையின் பாக்கெட்டில்
நிரப்பியவாறும்
பனி விலகும் முன்
பறித்த இளம்புல்லைப்
போல் மிளிரும்
புன்னகையோடும்;
பட்டாம்பூச்சிகளை
கண்களில்
சிறைபிடித்தவாறு...

எந்நேரமும் வரக்கூடும்
அந்தப் படகோட்டி;
நேற்றைய தினம் போல
அந்தி சாயும் வரை
தரிசனம் தராமலே
போபவனல்ல அவன்;
அதற்கும் முந்தைய தினம் போல
இருள் கவியும் வரை
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடுபவனும் அல்ல;
எந்நேரமும் வரக்கூடும்,

கிழிந்த சட்டையிலிருந்து
சிதறிக்கொண்டிருக்கும்
ஒரு புன்னகையை
சிநேகத்துடன் எனக்காகவும்
கொண்டு வந்துகொண்டிருக்கக்கூடும்;

இன்னும் காத்திருக்கிறேன்...
அவனுக்குத் தெரியும்
நான்
தினமும் காத்திருப்பது;

நிலவிலும் பகலிலும்
கசகசவென ஈரம் ஒட்டிக்கொள்ளும்
வியர்வையிலும்
குளிரிலும்
என்னுடைய தவம் கலையாமலே
காத்திருப்பேன்
எனப் புரிந்தவன் அவன்;

உன்னைச் சந்திப்பதில்
என்னை விடவும்
ஆனந்தம் கொள்வது
அவனாகத்தான் இருக்கக்கூடும்;
என்றேனும் கேட்கக்கூடும்,
அவனும்
உன் பெயரை,
உன் இருப்பிடத்தை,
உன் இருப்பைப் பற்றி;

எனினும்
பழங்களைப் பறிக்காமலே
தோட்டக்காரனிடம் சிக்கிக்கொண்ட
ஊமை போல்
கரை கடந்து
அதிர்கிறது
என் மௌனம்;

அத்துவானக் காட்டில்
நனைந்த இறக்கைகளை
உதறும் குருவி போல்
நடுங்குகின்றது
என் மனம்;

உன்னைப் பற்றிய
எல்லாமும்
என்னுள் நிறைந்து
போயுள்ளது;
நீயாகிப் போயுள்ளேன்
நான்;

உன்னைச் சந்திப்பதை விடவும்
உன்னைப் பாதுகாப்பது
அதி முக்கியமாகிப் போகின்றது எனக்கு;
என்றைக்கும் போல
இன்றைக்கும்
விரைந்து
வீடு திரும்புகின்றேன்;

அலைகளில்
மோதியவாறே
உரக்கப் பாடி வரும்
படகோட்டியின் பாடல்
நெஞ்சை வருடுகின்றது;

#Deepதீ

வலிகள் இன்னும் பாக்கியுள்ளது...


மயானத்தைக் கடந்து
வந்திருக்கின்றேன்....

நான்
மரணித்த வாசனை
இன்னும்
மிச்சமிருக்கின்றது காற்றில்....

மனித வாசனையை
விடவும்
மரித்த வாசனையே
மிகப்
பழகிப்போன ஒன்று....
=========================
தேடும்போதெல்லாம்
தென்படாத
அமைதி,

அலையிலா
ஆழ்கடலாய்
என்னைச் சூழ்ந்துள்ளது
என்
மரணத்தின் பின்....
==========================
வாருங்கள்
யாரேனும்....

இன்னும்
அத்தியாயங்கள்
பாக்கியிருக்கின்றது
வலிகளை
மையிலிட்டு நிரப்ப...
#Deepதீ

எதையுமே..... எதையுமே...



எதையுமே எண்ணாத...
எதையுமே எதிர்பாராத...

எதையுமே ஏற்காத...
எதையுமே மறுக்காத...

எதையுமே வெறுக்காத...
எதையுமே விரும்பாத...

எதையுமே தேடாத...
எதையுமே தொலைக்காத...

எதையுமே தூண்டாத...
எதையுமே தீண்டாத...

எதையுமே அண்மிக்காத...
எதையுமே அகற்றாத...

எதையுமே உள்வாங்காத...
எதையுமே வெளிக்காட்டாத...

இருப்பு ஒன்றைத் தேடுகிறேன்,
அய்யன்மீர்...

கண்டெடுத்தால்
கூப்பிட்டுச் சொல்லுங்கள்
எனக்கு.

எல்லோரிடமும்,
எல்லாவிடமும்,
எப்பொழுதும்
நேசம் கொள்ளும்
பாழாய்ப்போன மனதை
சற்றே
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கின்றது
அதுவரை,
காயங்களோடும்,
பாவங்களோடும்,
வாழப்பிறந்தவள்
நீ என!

#Deepதீ

கடலும், சுவரும்....

.
கடல் அரித்துக் கொண்டேயிருந்தது. சுனாமிக்குப் பிறகு ஏற்றியிருந்த கரைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து விட்டிருந்தன. மனங்களின் ஈரம் வறண்டது போல. ஏன் கடலுக்கும் கவிதைக்கும் இத்தனை ஆழமான உறவு.... ஏன்..
.
.
---------
போலாம்மாம்மா???
இருடா... இப்பத்தானே வந்தோம். கொஞ்சம் விளையாடேன். அப்புறமா போகலாம்.
.
.
-----------
போலாம்மா....
ஏன் போனும் போனும்ன்றே???? வீட்டில யார் இருக்கா.
இங்கயும் யாருமில்லயில்லம்மா....
.
.
------------
உடைகளைக் கவ்வியிருந்த மண்ணை உதறியபடியே எழுந்து நின்றேன். உற்சாகத்துடன் பொங்கி வந்த அலைகளை இன்னொருமுறை பார்த்துக் கொண்டேன்.
அலைகள் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் வந்தது போல் தெரிந்தன எனக்கு.
மௌன சுவர்கள், கம்பீரமும், திடமும் வாய்ந்த தந்தை போல் தெரிந்திருக்குமோ அவனுக்கு... தெரியவில்லை.
.
.
எதுவோ புரிந்தது.
எதுவும் புரியவில்லை.
நகர ஆரம்பித்தோம்.