கடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை

Sunday, September 27, 2015 Anisha Yunus 4 Comments

ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறுவர் இதழான ‘இளம்பிறை’ மாத இதழில் என்னுடைய சிறுவர் கதை ஒன்று அச்சேறியுள்ளது. இரு பாகமாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை இனியும் தொடராக வெளி வரும். இன் ஷா அல்லாஹ். சில திருத்தங்கள் அச்சில் செய்யப்பட்டிருக்கின்றன. சில அச்சுப்பிழைகளும் உள்ளன. அடுத்த முறை இன்னும் அதிகமாக கவனத்துடன் பதியப்படும். முழு கதையும் கீழே தரப்பட்டுள்ளது.




==  கடலில் மிதந்து வந்த கடன் ==


ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

பிலால் - H.A.L. Craig என் பார்வையில்...

Sunday, September 27, 2015 Anisha Yunus 0 Comments





இந்த நூலை எத்தனை முறை வாசித்துள்ள்ளேன் என்பதில் கணக்கே இல்லை. எனினும் மனம் விரும்பும்போதெல்லாம் வாசிக்கத் தூண்டும் ஒரு சிறு பொற்குவியல் இது. இதனைப் பற்றி முன்னமும் சிறுகுறிப்பு ஒன்றை முகநூலில் எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பவர்களுக்கு தெரியும், பிரித்தானிய ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் உள்ள வித்தியாசம். உயிரே இல்லாமல், சுரத்தில்லாமல், யதார்த்தவாத நடையைக் கொண்டது அமெரிக்க ஆங்கிலம். ஆனால் பிரித்தானிய ஆங்கிலம் அவ்வாறானதல்ல. அதன் அழகியலே அலாதியானது. வாசிக்கும் நபரையும் சுனைகளில் நனைய வைத்து, பாலையில் கருக வைத்து, வில்லன்களிடம் இருந்து சுவாசம் எகிற ஓட வைத்து, சிறுகுழந்தையின்  மென் பாதங்களை இதயங்குளிர நுகர வைத்து, திருடனோ, திருடனிடம் மாட்டியவனோ, பதைபதைத்து ஒளிந்திருக்க செய்து வியர்க்க விறுவிறுக்க அடுத்த கட்டத்திற்கோ அடுத்த பக்கத்திற்கோ அவனையும் அழைத்துச் செல்லும் உணர்வு பூர்வமான எழுத்து கொண்டது பிரித்தானிய ஆங்கிலம். ஆழ்ந்த வெளிப்பாடுகளைக் கொண்டது.

அது போல்தான் இந்நூலும். இது புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரின் சாதனையா அல்லது மூல நூலே இத்தனை அழகுடன்தான் எழுதப்பட்டிருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மூல நூலை ஆங்கிலத்தில் வாசிக்கும் பேறு பெற்றிலேன். ஆனால் தமிழில் இதனை விட அழகிய புத்தகத்தை நான் வாசித்ததில்லை. வேறு புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தாலும் திடீரென நினைவு வந்தால் இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகின்றேன். அத்தனை அழகு நிரம்பிய நூல்.


பிலால் எனும் நபித்தோழரின் வாழ்வை, ஒரு வெள்ளை அறபுத் தலைவருடனேயே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருந்த ஒரு முன்னாள் கறுப்பு அடிமையின் வாழ்வினை, அவர்களின் சமூகத்தாரின் கலை இயல் நுணுக்கங்களுடனேயே, அவர்களின் உயிருடன் கலந்த உணர்வுகளுடனேயே ஒரு வெள்ளை மனிதன் விவரிக்கின்றார் என்பதே பெரும் விந்தை. அதனிலும் விந்தை, இதை விட அழகாய் வேறு யாரும் பிலாலின் காலணிகளிலிருந்து பேசியிருக்க முடியாது. நபிகளாரின் வாழ்வையும், நபித்தோழர்களின் விசுவாசத்தையும் அவர்களின் அந்நேர உணர்வுகளையும் இதனை விடவும் அழகாய் வேறு யாரும் எழுத முடியுமோ என்பதே சந்தேகம்தான். சிறிய புத்தகமேயானாலும் கொள்ளை கொள்ளும் கவித்துவம் நிறைந்தது. நிச்சயம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய, தத்தம் நூலகங்களில் பாதுகாக்கவேண்டிய நூல் இது.

உதாரணத்துக்கு ஒரு வர்ணனை..
//நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த காட்சி மாட்சிமை மிக்கது. இறைத்தூதரும், அடிமையின் மகனும்! நீண்ட நேரமாக அவர் எதுவும் பேசவில்லை. மர்மத்தில் அமிழ்ந்து மயங்கியவனாய் வீற்றிருந்தேன் நான். தொழுகை நடத்த அண்ணலார் செல்ல வேண்டியிருந்தது. எழுந்து என்னைக் கரத்திடை இழுத்து அணைத்துக் கூறினர் நபிகளார்: ”என் பள்ளிவாசலை நிறைவு செய்துவிட்டீர்...  பிலால்!”//

இன்னும் பேசலாம்... இன்னொரு முறை இன் ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் எச்.ஏ.எல்.க்ரெய்க், 
தமிழில் அல் ஸூமத், 
வெளியீடு மெல்லினம்.

.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①

Tuesday, September 22, 2015 Anisha Yunus 1 Comments



இரண்டாம் ஜாமங்களின் கதையினைப் படிக்க ஆரம்பிக்கும்போது, 2004 இல் வெளியிடப்பட்டு பத்து வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்ட ஒரு பிரச்சினையின் வேரின் மேல் மீண்டும் கால் பதித்து விட்டேனோ என்றே பட்டது. மேற்கொண்டு வாசிக்கும்போது ஊகம், ஊர்ஜிதமாகி விட்டது.
 = = =
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்தான் சகோதரி சல்மாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் வாங்கிய இந்நூல் இரண்டு எழுத்தாளர்களுக்குள்ளும் ஒரு முரணை, ஒரு தூரத்தை, ஒரு கானல் நீர் விம்பத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கிறேன். ஏன் இப்படி?? ஒரு வேளை முதலிலேயே இந்த நூலை வாசித்து விட்டு பின்னர் கவிதைத் தொகுதியை வாசித்திருந்தால் வேறு பார்வை கிட்டியிருக்குமோ என்னவோ. எனினும் எல்லாவிடத்திலும் கருத்துக்களை கருத்துக்களாகவே அணுக விரும்புகின்றேன்.

இந்தப் பகுதியில் மதிப்புரையைப் பற்றி மட்டுமே பேச நினைக்கிறேன். மதிப்புரை தந்திருப்பவர் திரு.ரவிக்குமார். சில காலத்திற்கு முன் பேராசிரியர் அ.மார்க்ஸுடன் இணைந்து ‘நிறப்பிரிகை’ இதழை நடத்திக்கொண்டிருந்தவர். தற்போது ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.
= = =

பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தின் மீதும், அதிலுள்ள குடும்ப அமைப்பின் மீதும், அதன் பெண்களின் மீதும் ஒரு கசங்கிய பார்வைதான் வெளியுலகிற்கு இருக்கின்றது. குஜராத் சம்பவத்தில் ஒரு டாகுமெண்டரியில் ஒரு நரவெறி மிருகம் சொல்லும்... உரித்த மாம்பழங்களைப் போல எங்களுக்கு முஸ்லிம் பெண்கள் கிடைத்தார்கள், நாங்கள் வெறியுடன் பசியாற்றினோம் என. நிதர்சனத்தில் பெண்கள் மீதும், அதிலும் இஸ்லாமியப் பெண்களின் மீது ஆண்களின் பார்வையில் தேடலும், தகிக்கும் தவிப்பும்தான் இருக்கின்றது என்பதுவே உண்மை.

யானையைக் கண்ட குருடர்கள் போல, ஒரு பொரி கிடைத்ததும் அது உண்மையா, நிஜம்தானா என்பதைக் கூட அறிந்து தெளியாமல் குருடர்கள் சொல்வதையெல்லாம் ஏற்று அதுதான் யானை என வாதாடினால்??? அதுபோல்தான் இருக்கின்றது, நாவலும் அதன் முன்னுரையும்.  ஒவ்வொரு விமர்சனம் எழுதும் முன்னரும், அதன் ஆசிரியரைப் பற்றி, அவர் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் பற்றி, அதற்கு மதிப்புரை / அணிந்துரை / முன்னுரை எழுதியுள்ள பெருமக்களைப் பற்றி, இன்னும் பலதரப்பட்ட பார்வைகளையும் வாசித்து உள்வாங்கி, அதன் பின்னரே என் பார்வையை பாரபட்சமில்லாமல் வைக்க வேண்டும் என எண்ணும் ஒரு சாமான்ய மனிதனுக்கிருக்கும் நேர்மை உங்களிடம் இல்லையா சார்???? குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகின்றது. அவர்களுக்கு வெறுப்பு, உங்கள் மீதல்ல, உங்களின் மார்க்கத்தின் மீது என்று. சத்தியமான வார்த்தைகள். 

ஒரு சமூகம் பற்றிய தனது அறியாமையை, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களை மேடையிட்டுப் பறை சாற்ற திரு. ரவிக்குமாருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான் போன்றிருக்கின்றது. பெண்களின் உடல் பற்றிய எண்ணங்களே புதிராகவும், காணும் பொருள் யாவும் அதனையொட்டிய கனவாகவே வியாபித்திருக்கும் இருளடைந்த கிடங்கில் பாலியல் குறித்த பெண்களின் சம்பாஷணைகள் என்பது இன்னும் கிளர்ச்சியூட்டும் ஓர் புதிராகவே இருந்திருக்கக்கூடும். அதனைக் கண்டு, படித்து, புளகாங்கிதமடைந்து, லயித்துக்கிடக்க இந்த நூல் பலருக்கும் உதவியுள்ளது போல அவருக்கும் உதவியுள்ளது என்பது மட்டுமே புரிகின்றது. அழகிய பொய்களும், புனைவுகளும் சீராட்டத்தான் படுகின்றன.

விரும்புகிற உடலை அடைவது சுதந்திரம் எனவும், விலங்குகளின் பழக்க வழக்கத்தை ஒரு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் செய்பவரை எந்தக் கோணத்தில் ஆராய்வது. தன் சமூகத்திடமும், தன் குடும்பத்திடமும் இதையே பரப்ப அவர் தயாராக இருப்பாரோ எனக் கேள்வி எழுகின்றது. இவரின் சிந்தனைகள் என்னவென்பதையோ, எந்தப் பின்புலத்தை, அறிவுத்தளத்தைக் கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இவரின் வாதங்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன, ஒரு சமூகத்தைப் பற்றிய ஒருபக்கச்சார்பு கொண்ட ஒரு நூலுக்கு இவரின் மதிப்புரை எவ்வாறு செல்லுபடியாகும் என்பதும் கேள்விக்குறியாகின்றது.  காதல் என்றால் காதல்தான்...அதில் மதம், ஜாதி, பணம், பக்கோடா என வித்தியாசம் ஏன் பார்க்கிறீர்கள் என்றலைந்த இயக்குநர் சேரன், தன் மகளின் விஷயத்தில் ஒரு தகப்பனாய் துடித்ததை இதே தமிழகம் மௌன சாட்சியாய்க் கண்டு நின்றதே.... அத்தனை எளிதில் மறக்க முடியுமா என்ன....  இதோ நேற்றும் கூட குஷ்பு, ஒரு தாயாய் தன் பெண் குழந்தைகளுக்கு உடைகளின் பாதுகாப்பு, அவசியம் பற்றிப் பரிந்துரைத்ததைப் படிக்கிறேன். அங்கே இலங்கையில் அமைச்சரொருவர் சிறுகுழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் இஸ்லாமிய ஷரீ’அத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கும் பதிவைக் கடக்கிறேன். உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்.... அப்படித்தானே...??

மதிப்புரையில் காணப்படுவதெல்லாம் ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் பார்வை மட்டுமல்ல. ஒரு சமூகத்தினை எத்தனை ஏளனம் செய்தும், அடக்குமுறை ஏவியும் அதனைத் தோற்கடிக்க முடியவில்லை என்னும் இயலாமை, அதனின் கட்டுக்கோப்பை, உள்கட்டமைப்பை, சங்கிலிப்பிணிப்பை தகர்க்க முடியவில்லையே என்னும் மறுகல்... எங்களைப் போல நீங்களும் ஒழுங்கற்ற வாழ்விற்கு ஏன் வர மறுக்கிறீர்கள் என்னும்  தொனி. நாவலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புனைவுக்கற்பனைக்கும், சமூகத்தின் போக்கு இதுதான், சமூகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையால் விளைந்தது இது, மதமே தீவிரமும் வன்முறையும் கொண்டதாயிருக்கிறது என எல்லாவிடத்திலும் ஒரே புலம்பல்.

தனிப்பட்ட புரிதல்களும், தனியொருவரின் அனுமானங்களும், தனிநபரின் கலங்கல் பார்வைகளுமே உண்மை என்றாகிவிடுமா....?? அவ்வாறெனில் வரலாறு நெடுகவும், இன்றும், வதைபடும் காஸா, சிரியாவிலிருந்தும் கூட பர்தா அணிந்த பெண்களின் சாதனைகளை வாசிக்க நேர்வது எவ்வாறு....? அவர்களெல்லாம் மதக் கோட்பாட்டை கடந்ததினால்தான் வெற்றி வாகை சூடியுள்ளார்களா என்ன?? அன்னை ஆயிஷா நாயகியிலிருந்து தற்கால தவக்குல் கர்மான் வரை இஸ்லாமியப் பெண்களைப் பற்றி, இஸ்லாம் அவர்களுக்குத் தரும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும், உயரிய மதிப்பையும் ஒரு முறையேனும் மதிப்புரை தந்தவரை வாசிக்க வேண்டுகின்றேன். புரைகள் அகற்றப்படின், பார்வைகள் தெளிவடைய சாத்தியமுண்டு.

முன்னுரைக்கே ஒரு பதிவா என அங்கலாய்ப்பாய் இருக்கின்றது. எனினும், முஸ்லிம் சமூகத்தை, அதன் மௌனத்தை, அதன் பொறுமையை உபயோகித்துக்கொள்ள ஆட்கள் முன்வரும்போது  மந்தைகள் உடனடியாக நிறைகின்றது என்பதே உண்மை. அதே உண்மைதான் அயான் ஹிர்ஸி அலியின் பின்னும், மலாலாவின் பின்னும், இன்னும் எல்லா அழகிய சட்டைகளின் பின்னும். ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டாரு. அம்புட்டுதேன்.

நாவல் பற்றி, அடுத்த பதிவில்... இன் ஷா அல்லாஹ்.

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

தோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என் பார்வையில்

Monday, September 21, 2015 Anisha Yunus 0 Comments


அதிகம் பேசப்படாத, அதிகம் அறியப்படாத ஒரு சமூகத்தாரின் வாழ்வில் அவர்களின் பணியே அவர்களின் வாழ்வாக, மரணமாக மாறும் அவலத்தை கண் முன்னே பதிவு செய்கின்றது. முதல் முறையாக நான் ஒரு டேனரியை நேரில் கண்டது 2015இல்தான். அதில், தோலை அலசுகின்ற அமிலக்கரைசல் நீரில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது திருப்பூரில் பனியன் ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வலி ஒரே வாழ்க்கைதான் போல என நினைத்துக்கொண்டேன். ஆனால் அதனையும் தாண்டிய வலிகளை, குமுறல்களை, எரிமலைக் குழம்புகளைப் பதிவு செய்துள்ளது இந்த நாவல். ஒவ்வொரு சம்பவமும் நெஞ்சக்கூட்டில் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர்களின் மொழியைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் இதுவரை கண்டிராத குரூரம் நிறைந்ததாக உள்ளது. முயக்கங்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் நூற்களின் நடுவில், முனகல்களை, நரகல்களை முதன்மைப்படுத்தும் முயற்சி... சுடுகின்றது.

எல்லா மொழிகளிலும் கோபத்தை, குரூரத்தை, தாங்க இயலா வேதனையை, விரக்தியை வெளிப்படுத்தும் சொற்கள் இருக்கக்கூடும். ஆனால் அவை சரளமாக புழங்கப்படுவதில்லை. கோபாக்கினியின் உச்சத்தை எட்டும்போதுதான் பலரும் இத்தகைய சொற்களை உதிர்க்கின்றோம். எனினும், இந்த சமூகத்தாரின் மொழியே இவ்வார்த்தைகள் மட்டுமே. துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, சரளமாக அத்தனை இழிசொற்களும் காற்றில் கலப்பது, அந்த மக்களின் வேதனையின் வடிகாலாக, இயலாமையின் அடையாளமாக, தங்களின் மீது இந்த உலகமும், எஞ்சியுள்ள மனிதர்களும் செய்யும் அநீதத்தை மொத்தமாக ஒரு மொழியாகவே படைத்துக்கொண்டார்களோ என்றெண்ணத் தோன்றுகிறது. பல இடங்களில் செயற்கைத்தனமாய் திணிக்கப்படுவதாக தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை.

பெண் என்பவள் மல்லாக்கப்படுப்பதற்கு இணங்கக்கூடிய ஒரு மாமிசத் துண்டு என்கிறார், தோப்பில் மீரான் சாஹிப். இந்த நாவலில் சுட்டிக்காட்டப்படும் அத்தனை சம்பவங்களும்  எல்லா சமூகத்திலும், அதுவே உண்மை என மெய்ப்படுத்துகின்றது. Are we fooling ourselves by labelling ourselves as verily civilized? எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஹாஜியார் ஹாஜியார் என வரிக்கு வரி புகழப்படும் அடியான்களின் மனதினடியில் புதைந்துள்ள வக்கிரங்களை, எந்த மதத்துக்குச் சென்றாலும், எத்தனை உயரத்தில் வாழ்ந்தாலும் ‘தீண்டப்படாத’ என்னும் விட்டொழிக்கவே முடியாத அவலத்தை,  மனிதக்கழிவுகளை விடவும் நாற்றமடிக்கும் மனக்கழிவுகளை.... கடப்பது எளிதாக இல்லை. நாவலில் ஆரம்பத்திலிருந்தே கூடுதல் இணைப்பாக இராமனையும், இராமாயணத்தையும் அலசிப்பார்ப்பது அழகு. ஆழமான அலசல்தான், எனினும் கதையோடு ஒட்டாமலே பயணிக்கின்றது.

நாவலின் கதையை விட அதீத அதிர்ச்சி தந்த உண்மை..... ஒவ்வொரு ஊரிலும் சக்கிலியக்குடிகள் என்னும் Scavengers colony எப்படி, எதைப்பொறுத்து அமைக்கப்படுகின்றன என்னும் உண்மை. வாசித்துக்கொண்டே வரும்போது ஒரு கணம் சீட்டின் நுனியில் கூனை நிமிரச்செய்த வலி. ஊர்ப்புற எல்லைகளில் வாழ்வார்கள் என்னும் தகவல் மட்டுமே தெரிந்த எனக்கு, அதன் பின்னணி மிகவும் கசப்பைத் தருகின்றது. அதை விடவும், இத்தனை வலிகளையும் தாங்கிய சமூகமே அதனை யதார்த்தமாய், இயற்கையாய் எடுத்துக்கொள்கிறது, தாழ்வாக தனக்குப் படுவதில்லை என்பது எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த மண்ணை விட்டு இந்த அவலத்தை அகற்ற இயலாது என்பதையே எடுத்துரைக்கின்றது. நிஜத்தில் இவர்களில் பலரை நான் இப்படித்தான் கண்டுள்ளேன், தாங்களும் தங்களைச் சார்ந்த எல்லாமுமே பிறருக்கு தீட்டை அளித்து விடும் என்னும் மூடத்தனத்தை மனப்பூர்வமாய் இன்னும் நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதுவே உண்மை.

இந்த விமர்சனத்தை எழுதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காலை நாளிதழில் தேனியில் ஒரு பிரபல ஸ்பின்னிங் மில்லில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு இளம் சிறுமியையும் (வயது 13) அவளின் பாட்டியையும் முறி எழுதி வாங்கி அடைத்து வைத்து 24 மணி நேரமும் வேலை வாங்கிய அவலத்தை வாசித்துக்கொண்டே எழுதுகின்றேன். மனிதம் எங்கே போனது என வலைவீசித் தேட வேண்டியுள்ளது.

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்பதில் சந்தேகமேயில்லை. சாகித்திய அகாதெமி விருது வாங்கியதிலும் கூட. எனினும், என்னை உறுத்திய சில விசயங்களையும் பதிகிறேன்.

1. ஆரம்பம் முதல் இறுதி வரை இரு சிறிய கதாபாத்திரங்கள் தவிர மற்ற முக்கியமான பங்கு பெறும் எல்லா ‘முஸ்லிம்’ கதாபாத்திரங்களையும், சபல புத்தியுடையவர்களாக, ஈரமில்லாத ஈன மனப்பான்மை உடையவர்களாக, அதுவும் சுதந்திரத்தில் பெரும்பங்கு கொடுத்த சமூகத்தை அதன் நிழல்களில் கூட பங்கெடுத்தாவர்களாக காட்டுவது ஏன்??? இத்தனை பெரிய வடு ஏன் இந்த சமூகத்திற்கு அளிக்கப்பட்டது??? என்ன காரணத்தினால்/??? ஆரம்பத்தில் முஸ்தஃபா மீரானையும், அஸீம் ராவுத்தரையும் படித்த யாரும் துண்டு பாயையும், வாகன ஓட்டி அப்துல்லாவையும் பெரிய மகான்களாக நினைக்கப்போவதில்லை. ஏதோ தப்பிப் பிறந்து விட்டார்கள் என்றே எண்ண வைத்துவிடும். ஏன் இப்படியொரு பிம்பம் வலிந்து திணிக்கப்பட்டது என்பதை நிச்சயம் அறிய விரும்பகின்றேன்.

2. நாவலில் வரும் இரு காதல்கள். ஓசேப்பு Vs அருக்காணி மற்றும் சங்கரன் அய்யர் Vs வடிவாம்பாள் தேவரடியாள். இரு காதல்களும் சமூகத்தின் முன் அவல்தான் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், சங்கத்திற்காக, சங்கத்தின் நலனுக்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் ஓசேப்பும் அருக்காணியும் சங்கத்தின் அடிமட்டத் தொண்டர்களாகவும், சங்கத்தின் தலைவரின் காதல், அதே அவலை யாரும் மென்று விடக்கூடாது என்பதற்காக திருமணம் வரை கொண்டு செல்லும் வெற்றிவிழாவாகவும் வரையப்பட்டது ஏன்??? இந்த இரு அணிகளுக்குள் சமூக அந்தஸ்து மட்டுமே வித்தியாசமே தவிர தடைகளும், பிரச்சினைகளும் வேறு வேறல்லவே. சங்கரனின் தாய் அம்புஜத்தம்மாளும் ஓசேப்பின் வளர்ப்புத்தாய் தாயம்மாவும் மனமுவந்து அந்தக் காதல்களை அங்கீகரிக்கத்தான் செய்கிறார்கள் எனினும் தலித்துக்கள் தியாகிகளாக மாற வேண்டிய காரணம் என்ன?? அதே நேர்கோட்டில் வரும் உயர்குடிகளின் காதல் அங்கீகரிக்கப்பட்ட, போற்றப்பட்ட ஒரு காதலாக ஏன் மாற வேண்டும்.... இராமனின் கதையை இத்தனை வரைக்கும் ஆராய்ந்த ஆசிரியர், அதே காவியம் போன்றே 'சங்கரனை’ / ராமனை தெய்வஸ்தானத்திற்கும், ’ஓசேப்பை' / வாலியை வெறும் ஒரு கடைநிலை படைப்பினமாகவுமே காட்டிய வித்தையை எப்படிப் புரிவது என இன்னும் புரியவில்லை.

3. ’பாப்பானையும் பாம்பையும் பார்த்தால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடித்து விடு’ என்னும் பெரியாரின் வழி வந்த சமூக எழுச்சியிலும் ஒரு பிராமணனையே தலைவராகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன??? ஆயிரம்தான் பிராமணர்களிலும் நல்லவர்கள் உண்டு எனக் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இறுதியில், மீண்டும் பிராமணர்களே சமூக அக்கறை மிகுந்தவர்கள், வதைபடும் மனிதர்களுக்கு தோள் கொடுப்பவர்கள், சமூகப்புரட்சிகளை சரியான விதத்தில் கொண்டு செல்லும் அறிவுக்கூர்மையும் திறனும் மிக்கவர்கள், தியாக வள்ளல்கள் என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது ஏன்??? சங்கத்தின் தலைமைப்பொறுப்பில் கூட ஒரு முஸ்லிமையும் பங்காளியாக காண்பிக்காதது ஏன்... இது போன்ற பல கேள்விகள் உள்ளது. I don't want to say, but still feel, there are some 'read between the lines' infused in this book. Verily disturbing!!

யாருக்கேனும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்கள் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். மற்றபடி தலித்துக்களின், மிகவும் பின் தங்கியவர்களின், தினசரி சம்பளத்தில் வாழ்வை ஓட்டுபவர்களின், வலி மிகுந்த ‘வாழ்வை’???? இதை விட ஆழமாகப் பதிந்த வேறொரு புனைவு இல்லை என்பதே உண்மையாக இருக்கக்கூடும்.

[ ஆசிரியர் - டி.செல்வராஜ் | வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை | விலை - ரூ 400. ]

ஆசிரியர் பற்றிய குறிப்பு -- டேனியல்.செல்வராஜ்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

இன்று பாரதியின் நினைவு நாள்.

Friday, September 11, 2015 Anisha Yunus 2 Comments


பாரதியின் கவிதைகளைப் படித்துப் பரவசமடைந்து, புரட்சிக்கனவுகளிலும், தேசப்பற்றுத்தீயிலும் சுயமாய் வார்த்தெடுத்துக்கொண்டிருந்தது ஒரு காலம்.
‘காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா” 
என்று உச்சரிக்கும்போது உடுமலையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். பாரதியார் எங்கள் ஊரைப் பற்றித்தான் பாடியிருக்கிறார் போல என எல்லாக் கானங்களுக்கும் களமாகக் காட்சியளித்த காலம் அது.
”தின்னப் பழம் கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்றால் - அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்...”  
என்று நானும் என் சிநேகிதிகளும் கிட்டத்தட்ட பைபிள் போல தினமும் வாசிப்போம், சுவாசிப்போம், ஆகர்ஷிப்போம்.... சைக்கிள் பயணங்களிலும், நாவல் பழ மரத்தடியிலும், மழைக்காலத்தில் அனைவரையும் முடங்கச் சொல்லும் ஆடிட்டோரியத்தில் குழுவாக அரட்டையடிக்கும்போதும் என எல்லாக் காலங்களிலும் பாரதியை விட வசீகரித்த கவிஞன் இல்லை... பெரியார் பாலிடெக்னிக்கில் படிக்குபோதும், பெரியாரின் அளவிற்கு பாரதியையும் ஒவ்வொரு நிமிடமும் கொண்டாடியுள்ளோம். காளியைப் பற்றிய பாடல்களானாலும் சரி, அகண்ட பாரதக் கனவுப்பாடல்கனாலும் சரி அவனின் எழுத்தில் தொலைத்த பொழுதுகள் ஏராளம்.

காலங்கள் செல்லச் செல்ல எல்லாவற்றின் பூச்சும் சுவற்றினைப் போலவே உதிர்ந்து வீழ ஆரம்பிக்கின்றது. அதே போல்தான் காந்தியுடையதும், பாரதியுடையதும் என்னில் வீழ்ந்தன. இளம்பிராயத்தில் வாசித்த பாரதியின் கவிதைகளில் தீ பெருகியது. சூடான சுவாசமாய் இருந்தது. பின்னர் பாரதியினைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் போது, என்னில் இருந்த பாரதி உண்மையிலேயே யானை மிதித்தே செத்துப் போயிருக்கலாமே என்று நினைத்துக்கொண்ட காலமும் வந்தது. வறுமையும், கையறு நிலைச் சூழலும், தன் வயிற்றை போலவே தன்னைச் சுற்றியிருக்கும் வயிற்றுக்களின் அவல நிலையும் எத்தனை பெரிய இரும்பு மனிதனையும் ஆட்டுவித்துவிடும் என்பதற்கு பாரதி ஒரு பாரிய உதாரணம் எனக்கு.

இன்றைய தமிழ் தி-இந்துவில் பாரதியின் இன்னொரு முகத்தை ரசிக்க முடிந்தது. ஒரு திராவிடனின் மனநிலையில், தன்னை விட செல்வந்தனின் போலி வாழ்வை, போலி கௌரவத்தை, சோம்பேறிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு எளியவனாய் முழுமையான நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையின் ஓரிரு பக்கங்களை பிரசுரித்திருக்கிறார்கள். பாரதியும் ‘உள்குத்து’ கதைகள் எழுதுவாரா என இக்காலத்திய நாம் கேட்கலாம். பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும், உரிமைக்காகவும், சமநீதிக்காகவும் ஓங்கி ஓங்காரமிட்ட பாரதியாய் இராமல், அடுத்த வீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்த்த வீட்டுக்கவுண்டரை கிண்டல் செய்யும் ரசனையான மிடில்க்ளாஸ் மனிதனாய் நமக்கு அறிமுகமாகிறார். நிச்சயம் வாசிக்க வேண்டும் இந்தப் புத்தகத்தையும், மீண்டும் அவனின் பாடல்களையும்.

இயன்றவரை போலியாய் வாழாமல், இறக்கும்போது இயலாமையில் இதயம் செத்து வாழ்ந்த உன்னை எண்ணிப் பெருமிதம் நான் கொள்கிறேன் பாரதி. வேஷங்களற்ற மனிதனாய் வாழ திடங்கொண்டதினால்தான் உன் இறுதியை நீ முடிவெடுக்க முடிந்தது.

வாழ்க நீ!
.
.
‪#‎மகாகவி‬ ‪#‎பாரதியார்‬ ‪#‎சுப்ரமணி_பாரதி‬

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

கொடுமையிலும் கொடுமை...

Thursday, September 10, 2015 Anisha Yunus 0 Comments

Indian Express News Link -- http://www.newindianexpress.com/cities/chennai/A-Peek-Into-the-Houses-of-Horror/2015/09/10/article3019230.ece#

===================================================
 காலையில் ஒரு முறை வாசித்து முடித்ததில் இருந்து மீண்டும் மீண்டும் அந்தப் பேப்பரை திருப்பி வாசிக்கின்றேன்... சரியாகத்தான் படித்திருக்கிறேனா என.... இன்னும் கசப்பு அடங்கியபாடில்லை....

யாருக்காக இந்த அரசு, ஆட்சியெல்லாம்...??
யாரின் நலனுக்காக???

• ஆதி திராவிடர்களுக்கான ஹாஸ்டல் என்பதாலேயே இந்தளவு சிறப்புக்கவனிப்பும், சலுகைகளுமா அம்மா.... ?????????

• இரவில் திறந்த வெளியில் 2 மணிக்கெல்லாம் குளிக்க வேண்டிய நிலையில் பெண் மக்கள்....

• 20 அடி ஆழக்கிணற்றில் இறங்கி குடிநீர் தேடும் அவல நிலையில் பள்ளி / கல்லூரி மாணவர்கள்....

• கழிவறையிலிருந்து வெளியேறும் நீர், தளங்களிலும் சுவர்களிலும் வாடையுடன் ஊறும் அவலம்,

• 6 மணிக்குள் ஹாஸ்டலுக்குள் இல்லாவிட்டால் இரவு உணவும் இல்லாமல் போகும் கொடுமை...

• தரப்படும் உணவும் ஊசிப்போன தரத்துடன்...

• வாரக்கணக்காய் துப்புரவு செய்யப்படாத உணவுக்கழிவுகள் கொட்டப்படும் இடம்....

அப்பப்பா... ஃபோட்டோ பார்த்ததிலிருந்து குமட்டலாகவே இருக்கின்றது....

இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையா ’அம்மாவின் உண்மையான பக்தன்களுக்கெல்லாம்’????

இதுதான் ஆளும் லட்சணமா????

இதுக்கெல்லாம் பதிலா பேக்வார்ட் க்ளாஸ்ல இருந்து படிக்க வரும் பசங்க பொண்ணுங்களை எல்லாம் நிக்க வெச்சு சுட்டுக் கொன்னுடுங்க....


‪#‎சென்னை‬ ‪#‎ஆதிதிராவிடர்நலன்‬ ‪#‎இந்தியன்எக்ஸ்பிரஸ்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்

Tuesday, September 08, 2015 Anisha Yunus 0 Comments


.
தந்தையே
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை

.
தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்
கல் எறிகின்றனர்
தூஷிக்கின்றனர்
நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்
உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்
.
தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?
என்னால் அவர்கள் எதை இழந்தனர்?
.
நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?
.
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா?
நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும்
என்முன் முழந்தாளிட்டனவே
.
.
| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
‪#‎மஹ்மூத்_‬ தர்வீஷ்
‪#‎அடையாளம்_பதிப்பகம்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

மது பருகுவதால்.... (தமிழ்நாட்டில் மட்டும்)

Tuesday, September 08, 2015 Anisha Yunus 0 Comments



 உடல் ஆரோக்கியம் கெடுபவர்கள் -- 5,80,000 நபர்கள்
விபத்துக்களை எதிர்கொள்பவர்கள் -- 3,70,000 நபர்கள்
டாஸ்மாக்கில் பணி புரிந்த மதுப்பழக்கம் உடையவர்களின் இறப்பு -- சுமார் 3500 பேர்

ஒரு ஆண்டில் மது குடிப்பதற்காக செலவு -- ரூ.44, 769 கோடி
மதுவினால் ஏற்படும் வேலை நஷ்டம் -- ரூ 20,574 கோடி
மதுவினால் ஏற்படும் மருத்துவ உதவி செலவு -- ரூ. 2,100 கோடி

மதுவை நிறுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என மூளைச்சலவை செய்யப்படும் நஷ்டம் -- ரூ. 25,000 கோடி....

2013இல் தமிழக வாகன விபத்தில் இறந்தவர்கள் -- 15,563 பேர் இறப்பு
இதில் மதுவினால் மட்டுமே இறந்தவர்கள் -- 10,895 பேர்


எது அதிகம்??
எது முக்கியம்??
அரசுக்கு எது இழுக்கு??
அரசுக்கு எது அத்தியாவசியம்??

முழுது தொடரும் கட்டாயம் வாசிக்க - hhttp://goo.gl/Kb1h6W


| நன்றி திரு டி.எல்.சஞ்சீவ்குமார்
| தி இந்து 5/9/2015

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..

Sunday, September 06, 2015 Anisha Yunus 0 Comments



முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம். இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான் சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...) க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி...!

சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத, போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.

எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது. அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும் பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும் அடங்கியுள்ளது.

முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த் தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை, இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும், தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய் வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ, கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப் பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.

தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக் காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும் துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும் உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம் என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின் சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன். நடக்கக்கூடியதா??

பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன. வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில் மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம் மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம் பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல.. அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.

முடிவாய் இரு கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்.. //இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும் காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும் உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின் தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய் இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது. புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள் இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின் வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும் அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது குறித்த ஒரு கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம் கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.

மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

பாவத்துணிகள்...

Saturday, September 05, 2015 Anisha Yunus 0 Comments


இயேசுவை அறைந்தவர்கள்..
ஏதோ ஒரு ஆணியில்
அறைந்திருக்கலாம்
என்னையும்,
அத்தனை பேரின்
பாவத்திற்காகவும்
மரித்த நீ, கொஞ்சமாய்
மரித்திருக்கலாம்
என் முட்டாள்தனங்களுக்காகவும்..
குருடரையெல்லாம்
காண வைத்தாயாம்..
முடவரை
நடக்கவைத்தாயாமே..
இதயம் இறந்தவர்களை
என்ன செய்திருப்பாய்
நீ..?
அகிலத்திற்கே
அப்பத்தை பகிர்ந்தளித்த
உனக்குமே
போர்த்தக்கிடைத்தது
அத்துணை பேரின்
பாவத்துணிகள் தான்..
பாவம் செய்தவள் மீது
கல்லெறிய
பாவமே செய்யாதவர்களை
அழைத்தாயாமே..
இன்றைக்கு
இருந்திருந்தால்
கற்களிலும்
பெருந்தொடக்கில்லாதவற்றைத்
தேடியிருப்பாய் நீ..
தேவனே..
தேவனே..
ஏன் எனைக் கை விட்டீர்
என்றா கதறுகிறாய்..
உனக்குமே தெரியவில்லை
போ....!
அற்பர்கள் மட்டுமின்றி
ஆலயங்களும்
பிசுபிசுப்பில்
மிதந்து கொண்டிருக்கிறதென..
‪#‎Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

மெஹர் - குறும்பட விமர்சனம்.

Friday, September 04, 2015 Anisha Yunus 0 Comments


நெஞ்சார்ந்த ஒரு சல்யூட்டுடன்தான் இந்த குறும்பட விமர்சனத்தை ஆரம்பிக்கின்றேன். யாருக்கு சல்யூட்??? இயக்குநர் தாமிரா அவர்களுக்குத்தான்...

பின்னே... மொத்த படக்குழுவிலும் ஒரே ஒரு முஸ்லிமை வைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் நடைமுறை அவலங்களை மூன்றாம் மனிதராய் நின்று சாட்டையால் விளாசியிருக்கும் இந்த வெற்றிக்கு சல்யூட்தான் தர வேண்டும் அல்லவா.... Heartfelt Salutes Sir!!

But, மிகவும் தாமதமான விமர்சனம்... மன்னிக்கவும்...

இந்தக் குறும்படத்தைப் பற்றி நிறைய பேசலாம் என்றாலுங்கூட ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், உண்மையான இஸ்லாமியராக வாழ்வதெப்படி என்பதனை முஸ்லிம்களுக்கே அடையாளம் காட்டியுள்ளார் இயக்குநர் தாமிரா. சபாஷ்!!!

படத்தின் Flowவில் நடுநடுவே உதிர்க்கப்படும் பல கரிசனங்கள், உண்மையில் தற்போதைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலையைத்தான் பிரதிபலிக்கின்றன என்றால் கொஞ்சமும் மிகையில்லை.

//பக்கத்து வீட்டு கொமரை கரை சேர்த்தினா ஹஜ்ஜோட சவாபு கிடைக்கும்... என் வீட்டைச் சுத்தி எல்லாருமே ஹாஜியாருங்கதான்...//

//மார்க்கத்தை சரியாக் கடைபிடிக்கனும்னா எல்லாருமே சரியா இருக்கணும்...//

//பணத்தை வச்சுகிட்டே இல்லைன்னு சொல்றவந்தான் மிகப்பெரிய நடிகன்...//

//70 வயது மாப்பிள்ளைக்கு பிராயத்துப் பெண் என்பது சாதாரணம்...//

//இல்லாத வீட்டில் பெண் கொமரை படைக்காதே ..//

இந்த வசனங்கள் மூலமாக என்னதான் இஸ்லாம் எளியதொரு மார்க்கமாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் எத்தனை முரணான, எத்தனை சிக்கலான மார்க்கமாக்கி வைத்துள்ளோம் என்பதைப் பரிசீலிக்க வைத்துள்ளது...எதைப் பரவலாக்கியுள்ளோம் எதை தடுத்து வைத்துள்ளோம்.... எது முக்கியத்துவம் வாய்ந்தது... ஆனால் எதனை தாங்கிப் பிடித்துள்ளோம் என சுய பரிசோதனை செய்ய நிறைய கேள்விகளை போகும் வழியில் வீசி விட்டுச் செல்கிறாள் மெஹர்... இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன இது போன்று என்றாலும், சகோதர சமூகத்தை கரிசனத்துடன் இத்தனை அழகான விதத்தில் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் இன்னும் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கமும், பேணுதலும், சகிப்புத்தன்மை நீர்த்துப்போகவில்லை என்பதையும் வெட்டவெளிச்சமாக்குகின்றது.

வேகமாகப் பயணிக்கும்போது திடீரெனத் தோன்றும் மழை போல் ‘ஜாதி டெக்னாலஜி’ நகைச்சுவை, மிக அருமையான சுவை. செம கலக்ஸ் சார்!!

But, படத்தில் ஒரு செயற்கையான இடைச்செருகல் எனக் கருதுவது இரு இடங்களில்... ஏட்டைய்யா சின்னையா பற்றிய சுய அறிமுகத்தின் போதும், கனடா போக இருக்கும் தோழியின் வரவும்.... முழுக்க முழுக்க பூச்சு வேலை போன்றதொரு தோற்றத்தைத் தந்தது. வசனங்களும், கதாபாத்திரங்களின் நளினமும் உள்ளடக்கி. தவிர்த்திருக்கலாம் அல்லது இன்னும் அழகாக செதுக்கியிருக்கலாம். நல்லவேளை குத்துப்பாட்டோ மரத்தைச் சுற்றி ஆடுவதோ இல்லாமல் போனது, பரமதிருப்தி...!

அனைத்து கதாபாத்திரங்களினுடைய அழுத்தமான, பிசிறு தட்டாத, இயற்கையான நடிப்பும், வசனங்களும், காட்சியமைப்புக்களும் எனப் பலவும் மெஹருக்கு சபாஷ் சொல்வதற்கான பல காரணங்கள். எனினும், இசையில் ஸ்கோர் செய்யவேண்டிய தூரம் இன்னும் உள்ளது..

மொத்தப் படத்திலும் என்னை உறுத்திய ஒரே விஷயம், சகோதரி, எழுத்தாளர் சல்மாவின் ரோல் தான். காரணம், அவரின் முகம், உடல்மொழி, கம்பீரத் தோற்றம் என எதுவுமே வறுமையில் வாடும், கேவலத்திற்கு பயப்படும், எளிய கொள்கைகளுடன் வாழும் ஓர் குடும்பத் தலைவியின் தோற்றத்திற்கு பொருந்தவேயில்லை. அதற்கு அவர் காரணமில்லை என்பதுவும் கவனிக்கத்தக்கது. அந்த மிடுக்குப்பார்வை, அழுவதில் கூட ஒரு கம்பீரமான முகம், பொலிவான களை, தொய்வற்ற, மிடுக்கான உடல்வாகு என எதுவுமே அவரை அந்த ரோலில் பொருந்த விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வேறு யாரேனும் அதை இன்னும் பெட்டராகச் செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன். சில இடங்களில் movements, body language, reflection எல்லாம் இயந்திரத்தனமாகத் தோற்றமளித்தது, இதன் காரணத்தாலும் இருக்கலாம். நடிப்பதில் இதுதான் முதல்முறை சகோதரி சல்மாவுக்கு என்று வாசித்திருந்தேன். இன்னும் முன்னேறி, மேடை பல காண வேண்டும் சகோதரி. இன் ஷா அல்லாஹ்....!

மொத்தத்தில் மெஹர், ஒரு நிறைவைத் தந்திருக்கிறாள்... யாருடைய சமுதாயமாய் இருப்பினும், குறைகளைக் களைந்து செப்பனிட சகோதர சமூகத்திலிருந்து இன்னும் மனித மனங்கள் தயாராக உள்ளனர் என்பதை தெள்ளெனத் தெளிவுபடுத்தி இருக்கிறாள்.... சகிப்புத்தன்மையை இப்படியே வளர்க்கவும்,இன்னுமின்னும் சமூக நல்லிணக்கம் மேம்படவும், இது போன்ற ஆயிரம் மெஹர்களை எதிர்பார்க்கிறேன் இன் ஷா அல்லாஹ்.

என்னுடைய Wallஇல் ஒரு Timely Status ஆக, மெஹரிலிருந்து ஒரு டயலாக்கை சுட்டுக்கொள்கிறேன் சார்... // நாம பண்ற எல்லா தப்புமே நமக்கு பாடம் சொல்லித் தர்றதோட நிக்கிறதில்லை.... நாம் செய்யிற சில தப்புக்கள், நம்ம வாழ்க்கையையே பழி வாங்கி விட்டுட்டு போயிடும்...// மெய்!!!!!

நன்றிகளும் வாழ்த்துக்களும் மெஹர் டீம், and தாமிரா Sir.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

கிழவனும் கடலும் -- என் பார்வையில்

Thursday, September 03, 2015 Anisha Yunus 0 Comments

... எர்ன்ஸ்ட் ஹெமிங்வே உடைய புலிட்ஸர் பரிசு பெற்ற நாவல்.
Anisha Yunus's photo. முதல் முறை வாசித்திருக்கிறேன் ஹெமிங்வேயை... அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிகாகோவின் அருகிலுள்ள கிராமம் என்பது ஏனோ மனதுக்கு இதமளிக்கிறது. மறுக்க இயலாத வாஞ்சை இன்னும் அம்மண்ணை விட்டகல்வதே இல்லை.... க்ஹைர்... எர்னெஸ்ட் ஹெமிங்வேயைப் பற்றி அவரின் நூட்களில் எல்லாமே குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகம் வாசித்துவிட்டு பகிர விரும்புகின்றேன், எளிய நடைக்கு சொந்தக்காரர் என்பது மட்டுமே இப்போதைக்கு உணர்ந்து கொண்ட உண்மை.
இந்த நாவல், வறுமையிலும் முதுமையிலும் சிக்கியதோர் கிழவனைப் பற்றியது. மீன்பிடித்தல் என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி, ஒரு ஆணுக்கான அடையாளமாய் சுய அங்கீகாரத்துடன் தக்க வைத்துக்கொள்ள முயலும் ஓர் எளியவன் பற்றியது. பசி, வேதனை, இரத்தக்காயத்தின் மீதான கோபம், தனிமை, இயலாமை, வாழ்ந்து கெட்ட கணங்கள், வாழத்துடிக்கும் ஆவேசம், வயதை மீறிய துணிவு, பிரயத்தனம் என எல்லாமே உயிர்ப்புடன் எழுதப்பட்டுவிட எப்படியான அனுபவம் இருக்கக்கூடும் ஒரு ஆசிரியருக்கு... வியக்கிறேன்... மீன் பிடிக்கும் மனிதர்களின்வாழ்வைப் பற்றிய கற்பனையே அத்தனை போதுமானதா எனத் தெரியவில்லை... கற்பனைக்கும் மீறிய யதார்த்தமாகவே படுகின்றது, விவரங்களும், கள அமைப்பும், நடையும்...
அந்தக் கிழவனோடு சேர்ந்து வாசகனும் வேர்வையில் உழன்றும், இயலாமையில் சோர்வுற்றும், ஆப்பிரிக்க கடலோர சிங்கங்களின் அழகியலில் கரைந்தும், சிக்கிய மீனிடமே தன்நிலையைச் சொல்லி கெஞ்சவும், திடீரென வந்து நிற்கும் ஒரு பறவையைக் கொஞ்சவும், காயத்துக்கு மருந்து போடக்கூட துணை இல்லாததை நினைத்து தழுதழுக்கவும், ஆறுதல் தேடவும் முடிகிறதென்பதே நாவலின் வெற்றிதானல்லவா....?
கிழவனின் வெற்றி என்பது விற்பனைக்கென ஒரு மீனை அடைந்ததில் இல்லை.... தன் பலம் காட்டிட சுறாக்களைக் கொன்றதில் இல்லை.... மாறாக, தன்னையே மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணமே கிழவனின் வெற்றி.... படித்து முடித்த பின்னரும் அமைதியடையாத கடலாய் மனமும் நினைவுகளும்... .....அழகியதோர் வாசிப்பு.
...ம்ம்ம்.
...இரவல் நூலகத்தில் இனி நூல்கள் வாங்கிப் படிப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும.. திருப்பிக் கொடுத்துவிட மனம் மறுக்கின்றதே?????

0 comments:

உங்கள் கருத்துக்கள்...