என்ன நடக்கிறது எகிப்தில்?

Saturday, March 29, 2014 Anisha Yunus 1 Comments


529 முஸ்லிம் சகோதரர்களுக்கு, ஒரு போலீஸ் ஆஃபீசரை கொன்ற காரணம் காட்டி எகிப்தின் மின்யாவிலுள்ள கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்று
தூக்கு தண்டனையை உத்தரவிட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜனத்திரளை ஒன்றாக கொலை செய்யும் உத்தரவு இது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

அதையும் விட கவனிக்கத்தக்கது, வழக்கு நடந்த விதம், ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், 529 பேருக்காகவும் வாதாடவோ, எதிர்கருத்து வைக்கவோ யாரையும் நியமிக்காமலும், எந்த வித விசாரணையோ, கள ஆய்வோ செய்யாமலும் தீர்ப்பு கூறப்பட்ட விதம்.

இந்த 529 பேரில் பாதிப்பேர் அந்த சம்பவம் நடக்கும்போது ஜெயிலில் இருந்தனர் என்பதும், மீதிப்பேர் எகிப்திலேயே அப்போது இல்லை என்பது எத்தனை சுடும் நிஜமோ அத்தனையே நிஜம், கொல்லப்பட்ட போலீஸ் ஆஃபிசரின் மனைவி அரசு அலுவலகங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் ஃபோன், மெயில் என எல்லா விதத்திலும் தகவல் பரிமாற்றம் செய்து, என் கணவரைக் கொன்றவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், இந்த 529 பேரில் அவர்களில் ஒருவரும் இல்லை எனப் போராடியது.
பாவம், நீதிதேவதையின் கண்கள் மட்டுமல்ல, காதுகளும் அடைக்கப்பட்டிருந்ததுதான் கொடுமை!

இதில் உச்சகட்ட கொடுமை, 529 பேரில் இருவர் 17 வயதிற்கும் கீழானவர்கள். 17 வயதிற்கும் கீழானவர்களுக்கு செல்லுபடியாகும், சீர்திருத்தப் பள்ளியின் விதி இவர்களுக்கு அமுலாகவில்லை. அது சரி, சிறிய குற்றமா செய்துள்ளார்கள்???? ஆயுதம் தாங்கிய ஒரு போலீஸ் ஆஃபீசரை அனைவரின் கண்களுக்கும் முன் 529 பேரும் சுற்றி வளைத்து கொலை செய்வது என்பது எத்தனை பெரிய அராஜகம்...! இல்லையா???

ஏற்கனவே மிலிட்டரி ஆட்சி ஆரம்பித்த தினத்திலிருந்து 575 சிறுவர்களையும், சிறுமிகளையும் எகிப்து காரணமில்லாமல் கைது செய்துள்ளதும் இன்னும் பலரை கொன்றே ஒழித்ததும் இன்னும் சிலர் “காணாமல் போயிருப்பதும்” எகிப்தில் நடக்கும் ஜனநாயக் ஆட்சிக்கு!!!! ஒரு முன்மாதிரியாகும்.

இன் ஷா அல்லாஹ், இந்த 529 பேரின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த எகிப்தின் மேதகு முஃப்தி அல்லாம் அவர்களிடம் 10 நாட்கள் கெடு இருக்கின்றது. உலகநாடுகளும், அனைத்து நாடுகளின் முஸ்லிம் உலமாக்களும் இந்தக் கொடுமையான தண்டனைக்கு எதிர்ப்பு காட்டியிருக்கும் இவ்வேளையில் உங்களின் கருத்தும் மிக முக்கியமானது. இந்தத் தளத்தில் உள்ள “பெட்டிஷன்” வசதியைப் பயன்படுத்தியும், பகிர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

எதிராளிகளைக் கொன்றே ஆட்சியை நிலை நிறுத்தப் பார்ப்பதும், குர்’ஆன் - நபியவர்களின் வழியில் இஸ்லாமிய ஆட்சியை 60 வருடங்களுக்குப் பின்
சுவாசிக்க ஆரம்பித்த எகிப்தில் மீண்டும் இராணுவ அராஜக ஆட்சி நீடிக்காமல் இருக்க கை கொடுங்கள்.

அராஜகம் செய்பவர்களை விடவும், அராஜகமும், அநிதியும் வெற்றிக்கொடி நாட்டும்போது மௌனமாக இருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்படாதது. உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் இன் ஷா அல்லாஹ்.
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய லின்க் : http://bit.ly/P9RLQE


விரிவாகப் படிக்க:

  • https://www.middleeastmonitor.com/news/africa/10556-systematic-torture-of-children-in-egypt
  • https://www.middleeastmonitor.com/news/africa/10551-former-judge-slams-al-sisi-presidency-bid
  • http://www.nytimes.com/2014/03/28/opinion/529-reasons-to-doubt-egyptian-justice.html?partner=rssnyt&emc=rss&utm_medium=facebook&_r=0
  • http://www.reuters.com/article/2014/03/25/us-egypt-brotherhood-courts-un-idUSBREA2O0NO20140325

1 comments:

உங்கள் கருத்துக்கள்...

ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்...

Wednesday, March 05, 2014 Anisha Yunus 42 Comments

சில நாட்கள் முன், கீழ்க்காணும் காணொளியைக் காண நேர்ந்தது. எத்தனை எத்தனை படிப்பினைகள்.... பாடங்கள்.... சுய பரிசோதனை செய்யத் தூண்டும் கேள்விக்கணைகள்.... ஆங்கிலத்திலும், என் சிற்றறிவால் நான் செய்த தமிழாக்கத்திலும் படித்து பயனடையுங்கள்... இன் ஷா அல்லாஹ், அந்த சகோதரருக்கும், அவர் போல் உடலால் பலவீனமாகவும், உள்ளத்தாலும், ஈமானாலும் வானுயர்ந்து நிற்கும் ஏனைய சகோதர சகோதரிகளுக்காகவும் து’ஆ செய்யுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.


-----------


-----------

2013 இறுதியில், ஃபோர்ட்வர்த், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குத்பாவிற்காக சென்றிருந்தேன். ஒரே மாகாணத்தில் இருந்தாலும், 4,5 வருடங்களாக அந்த மஸ்ஜிதிற்கு போக இயலாமல் இருந்தது. அன்றைய தினம் குத்பாவிற்காக என்னை அழைத்ததும், நான் ஒப்புக்கொண்டேன். அன்றைய குத்பாவின் தலைப்பு, “து’ஆ”.

குத்பா முடிவடைந்ததும், கூட்டத்திலிருந்த ஒரு எகிப்திய இளைஞன் என்னருகில் வந்து சொன்னார், “அல்லாஹ் என்னுடைய து’ஆவை இன்று ஒப்புக்கொண்டான்.”. நான் கேட்டேன், “உங்களின் து’ஆ என்ன?” அவரின் பதில், “ நௌமன் அலிகான் ராபர்ட் டெவிலாவை சந்திக்க வேண்டும் என்பதே என் து’ஆ”.

“ஒஹ்.... அப்படியா, நீங்கள்தான் அந்த ராபர்ட் டெவிலாவா...?”
“இல்லை... ராபர்ட் டெவிலா என்பது என் நண்பனின் பெயர்..”

எதிர்பாராத பதில் என்பதால், என்னுள் ராபர்ட் டெவிலாவைப் பற்றி அறியும் ஆர்வம் மிகைத்தது.

ராபர்ட் டெவிலா என்பவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞர். ஃபோர்ட்வர்த்திலிருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் ஓர் கிராமத்தின் விவசாயியாக வாழ்ந்தவர். வாலிப வயதடையும்போது ஏற்பட்ட ஓர் மரபணு நோயின் காரணமாக, கழுத்து முதல் கால் வரை செயலற்றுப் போனவர். வருடங்களாக மருத்துவமனையிலேயே வாசம் புரிபவர். மிக மிக வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே அடங்கிக்கிடக்கும் அந்த மருத்துவமனையில், முப்பதுகளிலேயே அங்கு காலம் தள்ள வந்தவர், ராபர்ட் டெவிலா மட்டுமே. அவர், அவரின் பெட், அவரின் ரூம். இதுவே கடந்த பத்து வருடமாக அவரின் வாழ்க்கையானது. கை கால்கள் முடங்கிய நிலையில், அவரின் பொழுது போக்கிற்காக, குரலோசையை உள்வாங்கி சேவை புரியும் ஒரு கணிணியை, அவரின் பெற்றோர் பரிசளித்திருந்தனர்.

ராபர்ட் டெவிலாவின் குடும்பம், மிக கட்டுக்கோப்பான, இறைபக்தியில் ஊன்றிய கிறிஸ்தவக் குடும்பம். வார இறுதியில் சர்ச் மினிஸ்டர் வந்து ராபர்ட்டுக்காக பிரேயர் செய்வது என்பது வழக்கமாக இருந்தது. ராபர்ட்டுக்கு ஒரு நெருங்கிய தோழர் இருந்தார். அவரின் ரூமில் இருந்த இன்னொரு படுக்கையின் சொந்தக்காரர். கல்லீரல் நோயினால் உடல் முழுதும் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்தவர். மருத்துவமனையில் ஆரம்பித்ததுதான் அவர்களின் நட்பும். நண்பர்கள் இருவரும் இறைவன் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கலந்தாய்வு செய்வதே பொழுதுபோக்காக இருந்தது.

இறைவன் நாட்டப்படி, ராப்ர்ட்டின் நண்பருக்கு கல்லீரல் கொடையாளி ஒருவர் கிடைக்கிறார். நண்பர் பிரகாசமடைகிறார், “ராபர்ட்... உன்னை மிகவும் மிஸ் செய்வேன். ஆனால் என்ன செய்ய, எனக்கு ஈரலை கொடை தர ஒருவர் கிடைத்து விட்டாரே.... ஆபரேஷன் ஆனதும் என் மருத்துவமனை காலம் முடிந்து விடும்” என மகிழ்கிறார்.  எனினும், இறைவனின் திட்டம் வேறாக இருந்தது. ஆபரேஷனின்போதே ராபர்ட்டின் நண்பர் உயிர் இழக்கிறார். அவரும் ஒரு கிறிஸ்தவர். எனவே, அவரின் இறப்புக்குப் பின், அவர் கழுத்தில் இருந்த ஒரு சிலுவையை, அந்த நண்பரின் சகோதரி, ராபர்ட்டுக்கு நினைவுப் பரிசாக அதனை அளிக்கிறார். ராபர்ட்டின் மருத்துவமனை பெட்டின் ஓரத்தில், நட்பின் நினைவுச் சின்னமாக சிலுவை மணி தொங்க விடப் படுகிறது.

அதன் பின்பும் ராபர்ட்டின் வாழ்க்கை எப்பொழுதும் போலவே இருக்கிறது. இயல்பிலேயே உற்சாகமான மனிதனான ராபர்ட்டின் வாழ்வு, அதே ரீதியில் தொடர்கிறது. சில நாட்கள் கழித்து, இரவு உறக்கத்தில் ராபர்ட் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு மனிதன் தோன்றி, தன் பெயர் முஹம்மத் என்கிறார். அதன் பின், இறந்து போன நண்பனின் சிலுவையை சுட்டிக்காட்டி, “இறைவன் இறைத்தூதர்களை அனுப்பிய நோக்கம், மக்கள் இறைத்தூதர்களை வழிபடவேண்டும் என்பதற்காக அல்ல. படைத்த இறைவனை வழிபடவேண்டும் என்பதற்காகவே. இயேசுநாதரும் ஒரு சாமானிய மனிதனே. அவர் கடைவீதியில் நடப்பவராகவும் இருந்தார்” என்கிறார். அத்துடன் அந்தக் கனவு நிறைவுறுகிறது.

காலையில் ராபர்ட்டின் முதல் வேலை, கூகிளில் ‘முஹம்மத் என்பவர் யார்’ என்னும் கேள்வியோடு ஆரம்பிக்கிறது. இஸ்லாத்தைப் பற்றி அறிகிறார். ஷஹாதத்தை முன்மொழிந்து இஸ்லாமியர் ஆகிறார். ராபர்ட்டின் அடுத்த தேவை குர்’ஆனை ஓதுவதாக இருந்தது. குர்’ஆன் ஓதிட அரபி அவசியம் என்பதால் இணைய வசதிகளை உபயோகித்து, எகிப்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரனுடன் ஸ்கைப் வழியாக அரபி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். ஆயிற்று. குர்’ஆனின் பத்து அத்தியாயங்கள் மனனமும் ஆகி விட்டது. அதன் பின்னும் ராபர்ட்டின் ஆர்வம் அடங்கவில்லை. புரிதல் இல்லாமலே குர்’ஆனை மனனம் செய்வதா என சிந்தித்த ராபர்ட், குர்’ஆனை அறிந்து படிக்கும் அடுத்த தேடலை ஆரம்பித்தார்.  “குர்’ஆனை புரிந்துகொள்வது எப்படி”.... கூகிளில் அடுத்த கேள்வி. கிடைத்த பதில்களில்,  உஸ்தாத் நௌமனின் குர்’ஆன் விளக்க வீடியோக்களும் இருக்கின்றன. ஒன்று விடாமல் உஸ்தாதின் அத்தனை வீடியோக்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்.

இதன் நடுவில், அதே மருத்துவமனையில் சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகள் செய்யும் ஒரு எகிப்தியனும் இருக்கிறார். அவ்வூரில் மஸ்ஜிதே இல்லாததாலும், நெருங்கிய மஸ்ஜித் என்பதே 50 மைல்களுக்கு அப்பால் இருந்ததாலும், அந்த எகிப்தியருக்கு தொழுகைகள் பேணுவது, இஸ்லாமிய கோட்பாடுகளுடன் வாழ்வது என்பதெல்லாம் கிட்டத்தட்ட மறந்த நிலையில் இருந்தார். இறைவனிடம் இருந்து மிகவும் தூரமாகி விட்டோமோ என்றெண்ணும்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிறிஸ்தவ தேவாலய வழிபாடுகளில் கலந்து கொள்வதே வாழ்வியல் நடைமுறையானது. ஒரு நாள் மருத்துவமனையில் வழக்கமான பணிகளைச் செய்தவாறு ராபர்ட்டின் அறையைக் கடக்கும்போது அறையிலிருந்து காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்கிறது, “வல் அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீ க்ஹுஸ்ர்...”

விரைந்து ராபர்ட்டின் அறைக்குச் சென்ற, அந்த எகிப்தியர் கேட்கிறார், “ராபர்ட்...  என்ன சத்தம் அது? நீ என்ன கேட்டுக்கொண்டிருக்கிறாய்...? ”

ராபர்ட்: “ ஒன்றுமில்லையே...  ...ஓதியது நான்தான். "

எகிப்தியர்... இப்போது.. சந்தேகத்துடன், “ராபர்ட், நீ முஸ்லிமா..?”
ராபர்ட்: “ஆம் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன்.”
எகிப்தியரின் ஆச்சரியத்திற்கு எல்லையற்றுப் போகிறது. அல்லாஹ்வின் ஹிதாயா, நேர்வழிக்கான பாதை எப்படி ஒருவரை வந்தடைகிறது..... கிறிஸ்தவத்தின் வழி நடக்கும் அமெரிக்க தேசத்தில், முஸ்லிம் மசூதி கூட அருகில் இல்லாத ஓர் கிராமத்தின் மருத்துவமனையில், தன் பெட்டின் ஓரத்தில் கிடக்கும் கிறிஸ்தவ சிலுவையைக் கூட தன் கையால் அப்புறப்படுத்த இயலாத நலிந்த உடலுடன் இருக்கும் ஒருவர், தானாக முன் வந்து, அல்லாஹ்வே என் இறைவன் என உறுதியேற்பது என்பதை எப்படிப் புரிவது. தெரியவில்லை அவருக்கு. அந்த எகிப்தியருக்கு, உஸ்தாத் நௌமனைப் பற்றி அறிமுகம் கொடுத்து அவரின் வீடியோக்களைப் பார்க்கச் சொல்லி ராபர்ட் கேட்டுக்கொள்கிறார்.
“உஸ்தாதை ஒருமுறையேனும் நேரில் பார்க்க ஆவல் கொள்கிறேன்....” இது ராபர்ட்.
“ கண்டிப்பாக, இறைவனிடம் இதற்காக து’ஆ செய்கிறேன்....” இது எகிப்தியர்.

அதே எகிப்தியர்தான், அன்றைய தினம் என்னை ஃபோர்ட்வர்த்தின் மஸ்ஜிதில் சந்தித்தது. ஜும்’ஆ முடிந்ததும் நான், எகிப்தியர் இன்னும் சிலர் என எல்லோரும் ராபர்ட்டைத் தேடி பயணமானோம். மருத்துவமனையை அடைந்தோம். மருத்துவமனை அதிர்ச்சிக்குள்ளானது.

“....நீங்கள் அனைவரும் ராபர்ட்டைத் தேடி வந்திருக்கிறீர்களா...??”
“ஆமாம்....”
“ஏன்....”
“ஏனென்றால், ராபர்ட் எங்களுக்கு ஒரு உத்வேகம்... இன்ஸ்பிரேஷன்...”
“ராபர்ட்டா.....”
தொலைபேசிகள் அலறுகின்றன. மெயில்களும் மெமோக்களும் பறக்கின்றன. மேலிடம் வரை செய்தி சென்று, அவர்களின் அனுமதி கிடைத்தபின்னரே உஸ்தாதும் அவரின் நண்பர்களும் ராபர்ட்டை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த அதிர்ச்சி, ராபர்ட்டிற்க்கு. இனிய அதிர்ச்சி. அல்லாஹ், தன் து’ஆவை அங்கீகரித்த இனிய கணம்.

எல்லோரும் அளவளாவும்போது உஸ்தாத் கேட்டுக்கொண்டதிற்கிணங்க ராபர்ட் அத்தியாயம் அஸ்ரை அழகிய கிரா’அத்தில் ஓதிக் காட்டுகிறார். அனைவரின் கண்களும் குளமாகின்றன.

அல்லாஹ்வை ஒருவர் முற்றிலும் சார்ந்து விடும்போது, எந்த வழியில், எந்த விதத்தில் உதவி வரும் என்பதை எண்ணி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. அல்லாஹ் போதுமானவன். ஆற்றல் மிக்கவன்.

ராபர்ட்டின் வாழ்வில் இளைஞர்களுக்கு மிக அதிக படிப்பினைகள் இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். ராபர்ட்டிற்கு ஒரு வீல் சேர் வண்டி உள்ளது. அதில்தான் ராபர்ட்டை வைக்க இயலும். கழுத்திலிருந்து கால் வரை எல்லா பாகங்களும் கிட்டத்தட்ட பூட்டப்பட்ட நிலையில்தான் ராபர்ட்டால் எங்கேயும் நகர முடியும். சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றால், அந்த வீல்சேருக்கென தனி வேன் ஒன்று உள்ளது. வீல்சேரை தன்னுள் லாக் செய்து கொள்ளும்படியான ஒரு சிறப்பான வேன். அந்த வேனில் பயணம் செய்தால் மட்டுமே, குழியோ, மேடோ, பள்ளமோ, கல்லோ, எதன் மீது அந்த வேன் சென்றாலும், ராபர்ட்டின் உடலுக்கு அதிர்வுகள் சென்றடையாது. இந்த நிலையில் ராபர்ட், மருத்துவமனையில் ஒரு கோரிக்கை வைக்கிறார், “நான் ஜும்’ஆ சென்று தொழ எனக்கு உதவுங்கள்....”

அன்றைய தினம் அந்த ஸ்பெஷல் வேன் இல்லாதபோதும் ராபர்ட்டின் நிலைமாறா விண்ணப்பத்தால், சாதாரண ஒரு வேனிலேயே அனுப்பி வைத்தனர், மருத்துவமனை நிர்வாகிகள். தன் வாழ்வின் முதன் முதல் தொழுகையை, ஜும்’ஆ ஜமா’அத்தாக தொழுத ராபர்ட்டுக்கு சாதாரண வேனில் பயணம் செய்ததால் பாதையில் ஏற்பட்ட குலுங்கள்களின் விளைவாக அவரின் முதுகு தண்டு இன்னும் அடிபட்டது. மருத்துவமனைக்கு திரும்பியபோது அவருடைய முதுகு வலி அளவிட இயலாததாக இருந்தது. அவர் வீல் சேரிலிருந்து இறக்கப்பட்டு ஆறு மாதங்கள் கண்டிப்பாக பெட்டிலேயே இருந்தாக வேண்டும் என சிகிச்சை விதி மாற்றப்பட்டது.

நான் ராபர்ட்டை சந்தித்த போது, படுக்கையில் வீழ்ந்து மூன்று மாதங்களாகியிருந்தது. ராபர்ட் கூறினார், “அன்றைய தினம், மஸ்ஜிதில் கிடைத்த நிம்மதியைப் போன்றொரு நிம்மதியும், மனசாந்தியும் எனக்கு வாழ்வில் அது வரை கிடைத்ததில்லை..... என்னை மறுபடியும் வீல் சேரில் உட்கார என்றைக்கு அனுமதிக்கிறார்களோ.... அன்று மீண்டும் ஜும்’ஆ சென்று வருவேன் சகோதரரே....”என்றார், ராபர்ட்.

இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. வாழ்க்கை வசதிகளை விடுங்கள்... தன் உடலில் கண், வாய், மூக்கு தவிர வேறெந்த பாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒருவரின் வாக்குமூலம் என்ன....? “மஸ்ஜிதில், தொழுகையில் மட்டுமே எனக்கு மனசாந்தி கிடைக்கிறது....” ஆனால் நம் நிலை என்ன.....???????

ராபர்ட் கூறினார், “ சில சமயம் நான் யோசிக்கின்றேன்... ஏன் என் வாழ்க்கை இப்படியானது என.... ஆனால் அதன் பின் சில நொடிகளிலேயே என் மீது நான் கடினம் கொள்கிறேன்.... இந்த வழியில்தான் அல்லாஹ் என்னை இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், அதற்கு ஈடாகுமா இந்த வலியும் இயலாமையும் என....”

நம்மில் பலர் இருக்கிறோம்.... ஆயிரம் வசதி, வாய்ப்புக்கள், சொத்துக்கள் இருந்தும் ஒரு சிறிய இழப்பு ஏற்பட்டதும், எனக்கு ஏன் அல்லாஹ் இப்படி ஒரு சோதனை தருகிறான் என விம்மி வெதும்புகிறோம்.... ஆனால், சகோதரர்களே உண்மையைச் சொல்கிறேன், என் வாழ்வில் இப்படி ஒரு ஒளி பொருந்திய முகம் கொண்ட இளைஞனை நான் கண்டதில்லை. அமைதி ததும்பும் அத்தகைய ஓர் முகத்தை நான் கண்டதில்லை.

ஹிதாயத் என்பது நம்மைச் சுற்றி இருக்கிறது... எதுவும் இல்லை என வாழ்வில் நீங்கள் வருந்தத் தேவையில்லை. நிறைய்ய இருக்கிறது.... கஹ்ஃப் குகையில் வரும் இளைஞர்களின் கதையை நினைத்துப் பாருங்கள்.... து’ஆ செய்ததன் காரணமாக, நித்திரையிலும் கூட அவர்கள் வழிநடத்தப் பட்டனர்.... எங்கே எந்தப்புறம், எப்பொழுது உடல் திரும்பிப் படுக்க வேண்டும் என்பது உள்பட..... அல்லாஹ் நமக்கு நேர்வழி நடத்தப் போதுமானவன்...  அவனிடம் யாசிக்க நாம் தயாராயிருக்கிறோமா என்பதே கேள்வி....!!

.

42 comments:

உங்கள் கருத்துக்கள்...