தலைப்பில்லா கவிதை....
உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...
உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...
அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....
இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...
கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...
இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....
..................
..........................
.............................
.........................................

