என்ன சொல்ல

Wednesday, March 16, 2011 Anisha Yunus 16 Comments

போன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...

வழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும், பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

இந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.

தனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

இத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.

பாடங்கள்:
  • உங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே?
  • தன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
  • இந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே!! எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.
  • குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
  • இன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.
 

பிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே!! 


.

16 comments:

  1. அன்னு பகிர்வுக்கு நன்றி,குழந்தைகள் தானேன்னு அந்தக்கொடியவர்கள் இப்படி விளையாடுறாங்க,மிரட்டியும் வைக்கிறாங்க,ஆனால் எப்படியும் செய்த கொடுமைக்கு இறைவன் தண்டனை கொடுத்தே தீர்வான் எனபது எப்படி அவர்களுக்கு புரியாமல் போகிறது?கடும் தண்டனை இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு உண்டு..ஆனாலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனசு,உடல் நலம் நினைத்தாலே நமக்கே பதறுகிறது,அந்த தாயின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அன்னு,
    மிகவும் மனதை பாதிக்கும் விஷயங்கள். பொறுமை காக்கும் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இறைவனின் ஸலாம், ரஹ்மத் மற்றும் பரக்கத் ஏற்படட்டுமாக. உங்களின் 'பாடங்கள்' கவனிக்கப்படவேண்டியவை.

    ReplyDelete
  3. குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
    அப்படியே ஏற்கிறேன்.. நாம் செவி கொடுக்க மறுப்பதால் தான் பல சமயங்களில் சிரமங்களுக்கு ஆளாக நேர்கிறது

    ReplyDelete
  4. மிகவும் கஷ்டமாக இருக்கு...பாவம் அந்த சிறுமி...கண்டிப்பாக அம்மாவிற்கு குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் தெரியவேண்டும்...கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், அரவனைக்கும் நேரத்தில் அதனை செய்யவும் தெரியவேண்டும்...

    ReplyDelete
  5. நீங்கள் சொன்னது போல குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளி குறைந்து நல்ல தொடர்பு உருவாகும் போது இந்த மாதிரி நிகழ்வுகள் ஆரம்பத்திலேயே கண்டு தவிர்க்க முடியும் சகோ. நல்ல பதிவு!

    ReplyDelete
  6. இன்று பெற்றோர் - பிள்ளைகள் இடைவெளி அதிகம் ஆய்டுச்சு :(

    ReplyDelete
  7. மனம் கனக்கிறது சகோ. பல வீடுகளில் குழந்தைகளும் பெற்றோர்களும் படிப்பு தவிர வேறு விஷயங்கள் பேசுவதே இல்லை! குழந்தைகள் பேச வந்தாலும் படிப்பைப்பாரும்ம்மா என்றே கூறுகின்றனர் :( வருத்தமாகி விட்டது சகோ.

    ReplyDelete
  8. நல்ல பதிவு. நம்முடைய டென்ஷன்களில் குழந்தைகளை கவனிக்காமல், கேட்காமல், பேசாமல் இருக்கக் கூடாது.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அந்தக்குழந்தையின் நிலை ரொம்பவே பரிதாபம்தான்.. எப்படியெல்லாம் மனசுக்குள் புழுங்கியிருக்கும் :-(

    ReplyDelete
  11. என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் அன்னு, இப்படியான விஷயங்களை பப்ளிக்கில் சொல்வதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துறீங்க... நல்ல பதிவுதான்.

    ReplyDelete
  12. அன்னு உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்,முன்னதில் டைப்பிங் தவறாக விட்டது.
    http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html
    முன்பு அழைத்த தொடருக்கும் எழுதவில்லை,இந்த முறை நிச்சயம் எழுதனும்..

    ReplyDelete
  13. @ ஆஸியாக்கா. எந்த பதிவுக்கு அழைத்து நான் எழுதலை? ஆஹா... நானும் தேடி பார்த்துட்டேன் உங்க வலையில. முதல்ல அழைச்சது ‘பதிவுலகில் நான்’தானே. அது எழுதிட்டேனே? மீள் பதிவு செஞ்சா என் கடையே காலியாயிடும் ஹெ ஹெ :)

    ReplyDelete
  14. @ஆஸியாக்கா,
    கொடுமையான வேதனையை தாங்கற சக்தி அந்த இறைவந்தான் தரணும்.
    நன்றி :)

    @முஹம்மது ஆஷிக் பாய்,
    உங்களின் து’ஆவிற்கு ஆமீன்.
    நன்றி :)

    @ரிஷபன்ண்ணா,
    ஆமாண்ணா. குழந்தைகளிடம் என்ன சொன்னாலும் ஆற அமர கேக்க்ற சுபாவம் இருக்கணும்.
    நன்றி :)

    @கீதாக்கா,
    உங்க அட்வைஸ் மிக மிக சரி.
    நன்றி :)

    @பாலாஜிண்ணா,
    தவிர்ப்பதே நம் எல்லோருக்கும் நல்லது அண்ணா.
    நன்றி :)

    @கார்த்திண்ணா.
    அதுதான் பாயிண்ட். இடைவெளியை குறைக்க முடியலைன்னாலும் அட்ஜஸ்ட் செய்ய பழகணும்.
    நன்றி :)

    @வெங்கட் நாகராஜண்ணா,
    ஆமாண்ணா. எப்ப பேச வர்றாங்களோ அப்ப பேச விடணும்.
    நன்றி :)

    @ஸ்ரீ ராம்ண்ணா,
    கரெக்ட்! நம் டென்ஷனை அவர்கள் தலையில் ஏற்றக்கூடாது.
    நன்றி :)

    @அமைதிச்சாரலக்கா,
    ஆமாங்கா!! பாக்கற நமக்கே முடியல!!
    நன்றி :)

    @அதிராக்கா,
    வாழ்த்துக்களுக்கு மிக நன்றி
    நன்றி :)

    ReplyDelete
  15. என்ன கொடுமை இது.. துணிவை கொடுக்கணும் குழந்தைகளுக்கு..

    குட் டச் பேட் டச் , ஆசை வார்த்தைகள் , தனியிடம் அழைத்தல் , போன்றவற்றை சொல்லித்தரணும்..

    ReplyDelete
  16. இதில் அவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பது முக்கியம் அல்ல. அவனுக்குள் இயல்பா இருந்த குணம் வெளிவந்துள்ளது. அவன் தொழுகை செய்வதாலோ அல்லது பள்ளி வாசல் செல்வதாலோ எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. சிறையில் இருந்து காய்ந்த சான்ட்விச், உருளைக் கிழங்கு சாப்பிட்டா தான் புத்தி வரும். எதிர்காலத்தில் அந்த பெண் இந்த நினைவுகள் இல்லாமல் சிறந்த ஒரு பிரஜையாக வர மன உறுதி வர வேண்டும் என்பதே என் கவலை.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...