நெருப்பு (கவிதைப் பகிர்வு)


அழகானது..
ஆபத்தானது..
ஆதிக்க சக்தி கொண்டது.

தீண்டுபவரையும்,
தூண்டுபவரையும்,
அணைப்பவரையும்,
ஆட்கொள்பவரையும்,
தயவின்றி,
தடையின்றி,
சுட்டெரிக்க வல்லது.

பிரகாசத்தையும்,
விகாரத்தையும்,
படைக்க வல்லது.

உபயோகிக்கப்படுவது;
வெறுக்கப்படுவது.

ஆராதிக்கப் படுவது;
அன்னியப்படுத்தப்படுவது.

எங்கெங்கிலும்
வெளிச்சத்தையும்
வெப்பத்தையும்
நீக்கமற நிலைத்திட்டாலும்,

உள்ளிலும்
வெளியிலும்
வெறுமையின் சுவடோடே
வசிப்பது.

: Deepதீ


# படித்ததில் பிடித்தது 

குஜராத் 2002 --- சொல்வதெல்லாம் உண்மை.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி ஆயிரக்கணக்கான கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து, இன்று திருச்சிக்கும் வருகை புரிந்துள்ளார். வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்போம். வாருங்கள். வினவின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்! நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
( நன்றி - வினவு )

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். 
குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.
_____________________________________________________________________________
யங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.
குஜராத் முஸ்லீம் அகதிகள்
அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப் பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து… என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.
ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..
இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?
19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?
தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.
காவி கொலைகாரர்கள்மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது. 3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. ”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.
பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.
மோடி முதல் குற்றவாளிவசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன. பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப் பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.
இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….
அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்… இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்க முடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.
கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….
இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?
இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோ… இன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.
“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை…
குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:
சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா
இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.
____________________________________________
புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2002.

கமல் Vs இஸ்லாம் :- விஸ்வரூபம் எடுக்கும் சதி!!!

இந்த நாட்டை யார் ஆண்டு கொண்டுள்ளார்களோ அவர்களின் முதலாளித்துவ சிந்தனைகளையே நாம் தயாரிக்கும் இன்றைய சினிமாக்களும் கொண்டுள்ளன. ஒரு சோப்புக் கம்பெனியில் சோப் எப்படி தயாரிப்பார்களோ அதே போல்தான் மும்பையில் சினிமாக்களை தயார்செய்கின்றனர். பின்னர் அதை மொத்தமாகவோ சில்லரையாகவோ விற்று விடுகின்றனர். அப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் சினிமாக்களின் கலாச்சாரதில் மக்களை மூழ்கிக்கிடக்க மாற்றிவிட்டார்கள். ஏகாதிபத்திய அரசு இந்தியாவை விட்டுச்சென்றதும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தில் உள்ளவர்கள், பிரச்சார பீரங்கிகளை முழு வீச்சில் உபயோகித்து மக்களின் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.  எழுத்தின் வாயிலாய் என்ன கருவை விதைக்கிறார்களோ அதே கருதான் இன்றைய சினிமாக்களிலும் உள்ளது என்றொரு கவலை என் நரம்புகளில் ஓடிக்கொண்டே உள்ளது. இதை இலாபத்துக்காக செய்யும் சிறுவிளையாட்டாகவோ, களியாட்டமாகவோ எடுத்துக்கொள்ள இயலாது. இந்த நாடெங்கும் பரந்து விரிந்துள்ள ஏனைய சமூகங்களின் கலாச்சாரத்தையும், தனித்தன்மையையும் ஒடுக்குவதற்கென்றே, மற்ற சமூக மக்களை பலி பீடத்தில் ஏற்றுவதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு சமூகம் சார்ந்த ஏகாதிபத்தியமாகவே ம் சினிமாக்கஎடுத்துக்கொள்ள வேண்டும்.:- உத்பால் தத்*

மேலேயுள்ள மேற்கோள் வாசகப்படி, சினிமாவால் எந்த சமூகம் பாதிக்கப்பட்டதோ இல்லையோ, எந்த சமூகத்தின் உணர்வுகள் விளையும் முன் நசுக்கப்பட்டதோ இல்லையோ, முஸ்லிம்களுடையதும், மிகவும் பின் தங்கிய சமூகங்களுடையதும் இந்த அட்டூழியங்களிலிருந்து இன்றும் தப்ப இயலாமல் உள்ளன. சில இடங்களில் ‘தீண்டத்தகாதோர்’ என்னும் முத்திரையைச் சுமந்தவர்களை விடவும் தீண்டப்படாதோராய், ”இந்தியாவுக்கெதிரானவர்கள்” என்றும் “ஒதுக்கப்பட வேண்டியவர்கள்” என்றும் இரு அடையாளங்களை நாள்தோறும் சுமந்த வண்ணம் இருக்கிறோம். இதுதானா உண்மை? சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இஸ்லாமியர்கள் செய்த தியாகங்கள் காற்றில் மறைந்து விட்டனவா??? சமூக கட்டமைப்பிலும், இந்தியாவை அடித்தளத்திலிருந்து எழுப்புவதிலும் இஸ்லாமியர்கள் மலையளவினும் மேலாய் செய்த பணிகளும், சேவைகளும், இழந்தவைகளும் எங்கே போயின? வரலாற்றின் அந்தப் பக்கங்களை அப்புறப்படுத்தியவர் யார்???? ‘தீண்டத்தகாதவர்கள்” என்னும் ஒரு ஜாதியை இந்த உலகத்திற்கு கண்டுபிடித்து அளித்த வல்லவர்கள், ஏகாதிபத்திய பிராமணர்கள். அவர்களின் ஆளுமையில் இருக்கும் அச்சக இயந்திரங்களிலிருந்து சினிமா கேமரா வரை எங்கும் ஒரே மந்திரம் நிறைந்துள்ளது. இந்தியாவில் இந்துத்வாவும், வர்ணாசிரமும் வரும் வழி செய்தல். இதற்கான பிரம்மாண்ட அஸ்திரமே ‘சினிமா’.

தாடி வைத்துள்ள அண்டை வீட்டார் முதல், போலீஸால் நடு வீதியிலிருந்து ‘தேர்ந்தெடுத்து’ அழைத்துச் செல்லப்படும் 13, 14 வயதுச் சிறுவர் வரை, அனைவரையும் ‘ஐ எஸ் ஐ ஏஜண்ட்’டாகத்தான் இருக்கும், அல்லது ‘இந்திய முஜாஹிதீன்களில் ஒருவனாக’ இருக்கும் என பாமரரும் எளிதாக புரியக்கூடிய வழி யாரேனும் செய்துள்ளனர் என்றால், அது சினிமாத்துறையினரே.

’முகத்தில் தாடி / கழுத்தில் தாயத்து / சிரத்தில் தொப்பி’ இல்லாமல் எத்தனை வில்லன்களை இந்த சினிமாக்களில் நீங்கள் பாத்திருப்பீர்கள். பாகிஸ்தான் என்றாலோ, ஆஃப்கான் என்றாலோ ஏன் குர்’ஆனைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் அருகிலுள்ள பயணியைக் கண்டாலோ கூட உங்களுக்கு என்ன தோன்றுகிறது??? யார் இதற்குக் காரணம்?? இன்று பாடப்புத்தகங்களில் கூட எழுத ஆரம்பித்து விட்டனர், மாட்டிறைச்சியை உண்பவர்கள் திவீரவாதிகள் என. யார் எழுதியது? ஏன் தணிக்கை ஆகவில்லை? நாளை இதே பாடப்புத்தகத்தை கை காட்டி இன்னுமொரு திரைப்படம் வெளியாகும். அவர்களைக் கேட்டால் இவர்களைக் கை காட்டுவார்கள், இவர்களைக் கேட்டால் அவர்களை. இருவருமே பிராமணர்கள் அல்லது பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கையை ‘நன்மை பயக்கும்’ என்னும் எண்ணத்திலேயே தீவிரமாக ஆதரிப்பவர்களாகவே இருப்பர். இதை யாரும் சொல்வதுமில்லை, வெளிக்காட்டுவதுமில்லை. நசுக்கப்படும் எம் சமூகத்தை செருப்பிலும் ஒட்டி விடக்கூடாதென்று எட்டி நகர்ந்தே சென்று கொண்டுள்ளார்கள். ஒரு சமூகத்தின் சடலம், இன்னொரு சமூகத்திற்கு காகிதக் குப்பையாகத் தெரிகிறது. குப்பைத் தொட்டிக்கும் தகுதியற்றதாய்....

இது ஒரு சிலரால் யதேச்சையாய் உருவானது என்றால் அதுதான் இல்லை. கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.
படம் - 1
படம் - 2
முதல் படம், துருக்கியில் முஸ்லிம்கள் உபயோகிக்கும் தொப்பிகள். இரண்டாவது படம், ஹிந்தி சினிமாக்களில் முஸ்லிம் கதாபாத்திரங்களின் படம். இரண்டுக்கும் ஒற்றுமை தெரிகிறதா??? அந்தக் காலத்திலிருந்தே படத்தில் இருக்கும் முஸ்லிம் கதாபாத்திரங்களை மிகப் பெரிய இடம் கொடுத்து போஸ்டர் அடிப்பார்கள். அதில் அந்தத் தொப்பி முக்கியமாக தெரிய வேண்டும் என வெளிப்படையாகச் செய்வார்கள்.. ஏன்???? அந்த தொப்பி இந்திய முஸ்லிம்கள் உபயோகிக்கும் ஒன்றல்ல. அந்தத் தொப்பியை நீங்கள் கடைவீதியில் காணும் முஸ்லிம் அணிந்திருக்க மாட்டார். ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்த உங்களின் மனதில் ஒரு கேள்வி தோன்றும். அந்தத் தொப்பி போடாவிட்டாலும் இவன் அன்னியன்தானே... இன்னொரு நாட்டுக்காரன்தானே என... அந்நிய உடைகளைப் போட்ட கதாபாத்திரங்களைக் காண்பித்தது, இந்தியாவுக்கும், இஸ்லாமியருக்கும் உறவே இல்லை என்னும் எண்ணத்தை வலுக்கட்டாயமாக எல்லோரின் சிந்தனையிலும் ஏற்றிடவே.

சினிமா என்ற பெயர் அறிமுகமான நாட்களிலிருந்து இந்த விஷமமும் விதைக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களை அந்நிய நாட்டவர்களாக காட்டும் நயவஞ்சகம். இந்த நாட்டுக்குரியவர்கள் இல்லை எனக் காட்டும் வஞ்சக மனப்பான்மை. இதற்கு முஸ்லிம்களே பலிகடாவானதும் வருத்தத்திற்குரிய வரலாறே.


அதே பாணியில் தமிழக முஸ்லிம்களையும் ஒரு காலத்தில் அசைத்துப் பார்த்தனர். அதை வளர விடாமல் செய்ததில் ‘திராவிட’ இயக்கங்களுக்கு பெரும்பங்கிருந்தது.  அன்றைய பாவமன்னிப்பு படத்தில் சிவாஜியின் தலையில் கவனியுங்கள். அதே துருக்கி தொப்பி. இந்நாட்டு மொழி பேசும், இந்நாட்டிற்காக தன் இன்னுயிரையும், தன் குடும்பத்தையுங்கூட இழக்கும், இழக்கத் துணியும் எம்மை, ‘அந்நியராய்’க் காண்பிக்கும் கொடூர மனப்பான்மையை என்னவென்பது???

இன்னும் ஒரு கோணத்திலும் எம்மை வஞ்சிக்கின்றனர். இன்றைய இந்தியாவில் உள்ள ஒரு சில முஸ்லிம்கள் தொப்பி வைப்பதோ, புர்கா அணிவதோ இல்லை. ஆனால் திரைப்படங்களில் இப்படி ஒரு சாராரை காட்டுவார்களா???  கிடையாது, ஆனால் புர்கா போட்ட பெண்ணை விபச்சாரியாகவும், தாடி வைத்து தொப்பி போட்ட ஆணை சாராயம் குடித்து குடலை உறுவும் வில்லனாகவும்தான் காட்டுவார்கள். ஏன்??? மக்கள் மனதில் இது பதிய வேண்டும், ஹிஜாப் போட்ட, பெண்களைக் கண்டதும், தாடி வைத்த ஆண்களைக் கண்டதும், மக்கள் மனதில் அச்சம் எழ வேண்டும் என்பதற்காக.

மற்ற சமூகத்தைப் போல வாழ்பவர்களோ அல்லது இறையச்சமே இல்லாமலோ வாழும் முஸ்லிம்கள் ஆபத்தற்றவர்கள், அவர்கள் தேசியத்திற்குப் பாடுபடுபவர்கள்..... ஆனால் தூய இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்னும் நஞ்சை விதையாய் அல்ல, விகாரமாய், வீரியமாய் வளர்க்கிறார்கள்.

ஹிந்துத்துவ சக்திகள் எப்பொழுதெல்லாம் மத்தியில் கை ஓங்கிய நிலையில் இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் பார்டர், சர்ஃபரோஷ் போன்ற, முஸ்லிம் மக்களை ‘அந்நிய நாட்டவர்களாகவே’, ‘தேசத்துரோகிகளாகவே’ சித்தரிக்கும் படங்கள் பெரிதும் ஹிட்டாகின்றன. தமிழகத்திலும் அதன் சாயல் பட ஆரம்பித்திருப்பதுதான் நெஞ்சைப் பிசைகிறது.

சாதி மத பேதங்களை வெளிச்சமிட்டுக் காட்டும், பெண்ணுரிமையை நிலை நாட்டும், இன்னும் பல சமூக அவலங்களைக் குறித்த மகத்தான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த தமிழகத்தில் இன்று, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மறக்க வைக்காமல் ஒளிபரப்பப்படும் ‘ரோஜா’ திரைப்படம் தமிழ் மக்களின் மனதிலும் அதே நச்சுக்கொட்டையை விதைப்பதின் தொடக்கப்புள்ளியானது என்றால் அது பொய்யாகாது.

அதை விழுந்து விடாமல் வேள்வித்தீ போல வளர்த்துவதில் அதன் பின்னர் வந்த படங்கள் எல்லாமே வழிதொடர்கின்றன..

திப்பு சுல்தானாகவும், உதவிக்கரம் நீட்டும் நவாப்களாகவும், படித்த மேதைகளாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்களை இன்று பிச்சைக்காரர்களாகவும், கூலிக்கு செருப்பை பாலிஷ் செய்யும் வறியவர்களாகவும் காட்டுகிறார்கள்.

அழகிய தமிழைப் போற்றியும், புகழ் பரப்பியும், உவந்து உச்சரித்தும் தாய் மொழியாம் தமிழுக்கு தொண்டாற்றிய முஸ்லிம்களை இன்று ‘நம்பள்கி, நிம்பள்கி’ எனத் தமிழறியாதவர்களாகவும், சிரிப்பை வரவைக்கும் காமெடியன்களாகவும் காட்டுகின்றனர்.

எட்டப்பன் என்றொரு வரலாறு இருந்ததை இன்று முஸ்லிம்களுக்கு உரியதாகவும், தாடி வைத்த அரபுகள் இந்தியா வருவதே பெண் கடத்தல் அல்லது போதை மருந்து கடத்தலுக்காகத்தான் என்பது போலவும் காட்டப்படுகின்றது. அதுவும் இல்லாவிட்டால் தாடையில் தாடியும், கையில் துப்பாக்கியையும் கொடுத்து ஜிஹாத் தீவிரவாதிக்களாக சித்தரிக்கிறது. விஜயகாந்தின் ஆஸ்தான வில்லன்களாகவும், அர்ஜூனின் கனவில்  அணுகுண்டு தயாரிக்கும் அப்பள வியாபாரிகளாகவும் கூட எம் சமூகம்தான் இன்று வரை உள்ளதே. ஏன்? ஏன்?? ஏன்???

அண்மையில் வெளிவந்த அப்பாவி படத்தில் முஸ்லிம் தீவிரவாதி, கோவிலில் ஒளு செய்வது போலொரு காட்சியை வைத்து, ஆடிக்கொரு முறை கோவிலுக்குப் போகும் சாமான்யனின் மனதில் கூட பிரிவினைத்தீயை உண்டு பண்ணுகின்றது. அன்வர் என்னும் படத்தில் ‘தீவிர’ முஸ்லிம்கள், ‘சாதாரண’ முஸ்லிம்களையும் கொல்வர் என்றொரு உதாரணம் காட்டப்படுகின்றது. ஆந்திராவிலிருந்து டப்பிங் செய்து வரும் படங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு ஆஸாத் படம், ஒரு சோற்றுப் பருக்கையே.

இவர்களுக்கெல்லாம் மேலே ஒரு படி சென்று, உலக மகா நாயகன் என தன் பெயருக்கு முன்னே பட்டம் போட்டுக்கொள்ளும் கமல்ஹாசனுக்கு விஸ்வரூபம் முதல் படமல்ல, முஸ்லிம் மக்களைக் காயப்படுத்துவதற்கு. ஏற்கனவே வெளியான ‘உன்னைப் போல ஒருவன்’ படத்திலும், தன்னால் இயன்ற அளவு ஆராய்ச்சி செய்து ஒரு பிரச்சாரத்தை உருவாக்கினார். அது என்ன? ‘தீவிரவாதி என்றெண்ணி யாரேனும் ஒருவனை போலீஸார் பிடித்தால், அவனை விசாரணை, தீர்ப்பு, சிறைச்சாலையில் சாப்பாடு என்றெல்லாம் இழுத்துக் கொண்டிருக்காமல், என்கவுன்டரில் கொன்று விடுங்கள்’ என்னும் நச்சுப்பிரச்சாரம். வழக்கின் மூலமும், சாட்சிகள் மூலமும் நீதி மன்றம் ஒருவனை ‘தீவிரவாதியா’ இல்லையா எனத் தீர்ப்பு தரும்வரை காத்திருத்தல் கூடாது என்னும் நல்லொழுக்கக் கொள்கை ஒன்றை, இந்திய சட்டத்திற்கு புறம்பான ‘தனி மனித நீதியைக் கையிலெடுக்கும் பாங்கை’ இச்சமூகத்திற்கு அளித்துள்ளார். சமுதாயப்பணி செய்வதில் கமலுக்கு நிகர் வேறெவருமே இருக்க முடியாது இல்லையா?? அதனால்தான் தன்னுடைய அடுத்த படத்தில் இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார் எனலாம்.

”இல்லை இல்லை...அப்படி நான் படம் எடுப்பேனா? இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்லது. இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனபதே என் விருப்பம்.நான் காந்தியின் பக்தன். இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன். மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன். எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்த படமும் அப்படித்தான் இருக்கும். காந்தீய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும்,” என்ற கமல், “தங்களை பிழையான விதத்தில் காண்பிப்பதாக  சந்தேகிக்கும் முஸ்லிம்கள், படத்தைப் பார்த்த பின்னர் மனத்தை மாற்றிக் கொள்வார்கள், மேலும் தங்களின் ( அபிப்பிராய பேதத்துக்கு ) பரிகாரமாக அவர்களின் சகோதரன் ஹாசனுக்கு அடுத்த வருட பெருநாள் (பண்டிகைக்கு) அதிகமாக பிரியாணி அனுப்ப வேண்டும், நான் அவற்றை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வேன்.” என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நடந்தது என்ன?

ட்ரெயிலரிலேயே தெரிகிறது, கதையின் கரு என்னவென்று. தொப்பியிட்ட, அரபு உடையணிந்த ஒரு 12 வயதுப்பையனை வைத்து ஆயுதங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை செய்யும் ஒரு காட்சி... இது இதற்கு முன் காட்டப்பட்ட  பயங்கரங்களையும், விட கொடிய பயங்கரம். வயது வந்த முஸ்லிம்கள் மட்டுமல்ல, தொப்பி போட்டு உங்கள் குழந்தையுடன் விளையாடும் 12, 13 வயதுப் பையனும் கூட தீவிரவாதிதான் எனக் குத்தப்படும் முத்திரை. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்????

 

Mr. கமல்ஹாஸனுக்கு:

வெளிநாடுவாழ் முஸ்லிமாக இருந்தால் அல்லது சமூகத்தில் முன்னேறிய முஸ்லிமாக இருந்தால் அதுவும் தாடி வைத்த முஸ்லிமாக இருந்தால் அவன் கட்டாயம் தீவிரவாதியாக இருப்பான், துப்பறி.....இதுதான் உங்களின் படம் தரும் செய்தியா?? இதுதான் நீங்கள் எம் சமூகத்திற்குத் தந்த நம்பிக்கையா Mr.கமல்ஹாசன்??? இதற்குத்தான் பிரியாணி கேட்டீர்களா....

ஏன் Mr.கமல்ஹாசன், ஏன்???? ஒன்றாய் வாழும் இச்சமூகத்தில், தங்களுடைய கோடிக்கணக்கான சொத்து உருவாக வழி செய்த இந்தத்தமிழகத்தை கூறு கூறாக்கிப் பார்க்க ஏன் விளைகின்றீர்??? நன்மையை நாடிய ஒரு சமுதாயத்தின் வேதனையைக் கூட அல்ல, அழிவை ஏன் எதிர்பார்க்கிறீர்??? உங்கள் படத்தைப் பார்த்த அனைத்து இஸ்லாமிய அமைப்பினருமே ஒரே குரலில் 'இந்தியாவில் இதுவரை இந்த அளவு முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு படம் வந்ததில்லை' என்று சொல்கின்றனரே ஏன்??? உங்கள் சட்டைப் பாக்கெட்டில் பணம் நிரப்ப எங்கள் உயிர்தான் விலையா? எங்கள் மானம்தான் பலியாடா??? கேவலமாக இல்லை? வெட்கமாக இல்லை? மானக்கேடானதொரு வழியாக இல்லை??? குட்டக் குட்ட  குனிந்து கொண்டே போனால்தான், முஸ்லிமை அழித்து அதன் பின் மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் அழித்து இந்துத்துவத்தை நிலை நாட்டலாம் என்னும் கொடிய ஆசையா??

நாத்திகன் என உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களே இதுதான் நாத்திகர்களின் வழியா? இறை நம்பிக்கையை வைத்து, தான் பிறந்த மண்ணுக்காக மண்ணின் அடியில் போவதைக்கூட உயிருள்ளவரை விரும்பும் எங்கள் சமூகத்தை சிதைத்தா உங்களின் நாத்திகம் வளர வேண்டும்??? இதுதான் உங்களின் பெயரில் உள்ள ‘ஹாஸன்’ என்னும் சொல்லுக்கு பின்னுள்ள வரலாற்றுக்கு நீங்கள் தரும் பரிசா???

நல்ல கலைஞனுக்கு ஆயிரமாயிரம் நல்ல கதைகள் கிடைக்கும் Mr.கமலஹாசன். கருத்தம்மா முதல் காசி வரை பல படங்களுண்டு. வித்தியாசமான, அதே நேரம் சமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை சொல்ல, தயாரிப்பாளருக்கு நஷ்டமும் தராமல் எடுக்கக்கூடிய கதைகள். திரைப்படத்துறையின் பின்னுள்ள அவலங்களைப் படம் எடுத்தாலும் போதும்  வாழ்க்கை முழுதும் உங்கள் கல்லாவையும், ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களினால் சரியக்கூடிய செல்வாக்கையும் வலுப்படுத்தலாம். சிந்தியுங்கள். உங்களின் மனநலனும், சிந்திக்கும் திறனும் நலமாகும் வரை, உங்களுக்காக தொடர்ந்து பிரார்த்திப்போம்.

அனைவரும் கமலஹாசனுக்காக பிரார்த்தியுங்கள். அவரவர் வலைதளங்களில் வைக்கவும்  பரிந்துரைக்கப்படுகிறது.


இஸ்லாமிய இயக்கங்களுக்கு:

வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லாஹ். :)
மகத்தான ஒரு படியை அடைந்துள்ளோம். இனி எவரும் நம் சமூகத்தை அவலாக்கி விடாமல் இருக்க, இது வரவேற்கத்தக்கதொரு சாதனை. இறையருளுடன் இனியும் நம் சமூகத்தை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் நல்முடிவுகளை வரவேற்கிறேன். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இறைவன், அளவிலா நற்கூலியை தந்தருள்வானாக. இன் ஷா அல்லாஹ், நாம் எல்லோரும் இணைந்து, இஸ்லாமியர்களுக்கெதிராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கெதிராகவும், இந்திய தேசிய ஒற்றுமையைக் குலைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வேரறுப்போம். அனைத்து சமூகமும் சுமுகமாய், நட்புடனும், நிம்மதியுடனும் வாழும் நிலையை விரைவில் இந்தியாவெங்கும் விதைப்போம். இன் ஷா அல்லாஹ்.

 

முஸ்லிம்களுக்கு:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. :)




Sources:
* - புது தில்லியில் 1979இல் நடந்த உலகளாவிய திரைப்பட விழாவில் திரு.உத்பால் தத் ஆற்றிய உரையிலிருந்து. 
உத்பால் தத் 1994, பக்கம் 25-26.

ரிஸானாவின் இறுதி நிமிடங்கள்...

கீழே இருக்கும் மடல், ரிஸானாவின் வழக்கில் முதலிலிருந்து கவனம் எடுத்த, இறுதி நிமிடங்களில் மௌன சாட்சியாய் இருந்த மௌலவி மக்தூம் அவர்களின் மடல், ரிஸானாவின் பெற்றோருக்கு. கண்டிப்பாக முழுதும் படியுங்கள். முந்தைய பதிவின் பல கேள்விகளுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும். இறைவன் நாடினால்!
அஸ்ஸலாமு அலைக்கும் :
றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, 
நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)
சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42


உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40


அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216


உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ

“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…

இப்படிக்கு
A J M மக்தூம்
 
நன்றி: 
சகோ.யாஸ்மின்,
lankamuslim.org
நாம் பெற வேண்டிய பாடம்:
முந்தைய பதிவுக்கும் இந்த மடலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது நேரில் தாமாக அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரின் மடல். என்னுடைய பதிவோ இணையத்தில் கிடைக்கும் ஆதாரங்களின் பெயரில் எழுதப்பட்டது. இதிலிருந்து ஒரு பெரிய கருத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அது, நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி எந்தளவு ஞானம் இருக்கிறதோ அந்த அளவே நாம் அதைப் பற்றி பேச வேண்டும். இல்லாததை அல்ல. மறைவான விஷயங்களின் ஞானம் இறைவனுக்கு மட்டுமே உரியது. எனவே நம் முடிவுகளை / Judgementsஐ பரப்புவதற்கும் இறைவனை அஞ்ச வேண்டும்.  
இப்போதும் என்னுடைய இறைஞ்சல் ஒன்றுதான். ரிஸானாவின் விஷயத்தில் யார் அநியாயக்காரர்களோ அவர்களை அல்லாஹ் தண்டிப்பானாக. அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும்போது அவர்களின் பாவங்களை மன்னிப்பானாக. அநியாயம் செய்யப்பட்டவர்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பன்மடங்கு நற்கூலியை தந்தருள்வானாக. அவர்களின் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும் அழகிய பொறுமையையும், அதற்கான நற்கூலியையும் தந்தருள்வானாக. 
நமக்கு தெளிவில்லாத விஷயத்தை பரப்புவதிலிருந்தும், தீர்ப்பளிப்பதிலிருந்தும் நம்மைக் காப்பானாக. ஆமீன்.