நபிமார்கள் என்றால் யார்?

Friday, September 07, 2012 Anisha Yunus 4 Comments

  முந்தைய பதிவுகள்

 

 

ஒரு மனிதன், இறைவனுக்கு அஞ்சி, வழிபட்டு நடக்க வேண்டுமெனில், இறைவன் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியவேண்டும். நம்மை வெறுமனே படைத்து வழிகாட்டாமல் இறைவன் விட்டுவிடவில்லை... மாறாக மனிதர்களிடையே சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தன்னுடைய ’தூதர்’களாக ஆக்கினான். இந்த தூதர்களும் மனிதர்களே அன்றி தெய்வாம்சம் பொருந்திய எந்த தனித்துவமும் இல்லாதவர்கள். சம்ஸ்கிருதத்தில் இவர்களையே நாம் ‘ரிஷிமார்கள்’ என்கிறோம். ஏனைய மனிதர்களுக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாகவும், தலைவர்களாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்த உலகில் வாழ்ந்த / வாழும் ஒவ்வொரும் சமுதாயத்திற்கும் ‘இறைத்தூதர்’ அனுப்பப்பட்டுள்ளார். சில உதாரணங்கள், நூஹ்(நோவா), இப்றாஹீம்(ஆபிரகாம்), தாவூத்(டேவிட்), சுலைமான்(சாலமன்), மூஸா(மோஸெஸ்), ஈஸா(இயேசு) -- அனைவரின் மேலும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. இந்த வரிசையில் கடைசியாகவும், உலகிற்கு இறுதித்தூதராகவும் இறைவனால் அனுப்பப்பட்டவர், நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர்மீது உண்டாவதாக). அவருக்கு முன் அனுப்பப்பட்ட மற்ற இறைத்தூதர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் மட்டுமே அனுப்பப்பட்டனர். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) அவர்கள், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு, உலகின் இறுதி வரைக்கும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம்(இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) எந்த ஒரு புதிய செய்தியையும் கொண்டு வரவில்லை. மாறாக முந்தைய இறைத்தூதர்கள் என்ன செய்தியை கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் மீண்டும் தழைக்கச்செய்தார்.

தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்,

 “(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதே(உபதேசமே)யன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.” (திருக் குர்ஆ’ன் 41:43)

ஏன் மனிதர்கள் இறைத்தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?

ஒரு சாதாரண துணி துவைக்கும் எந்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்... அதை எப்படி உபயோகிப்பது என்பதை ‘துணி துவைக்கும் எந்திரத்தை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா அல்லது ‘அடுப்பை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா?? அதுபோல மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென மனிதர்களையே வைத்து கற்றுக்கொடுப்பதுதானே சிறந்தது? எனவே இறைவன் மனிதர்களையே மனிதர்களுக்கான முன்மாதிரிகளாக அனுப்பினான்.

இறைவேதமாம் திருக்குர்ஆ’னில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்,
“(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று..” (திருக் குர்ஆ’ன் 17:95)

ஏன் இறைவன் அவதாரம் எடுக்க மாட்டான்??

இறைவன் என்பவன் மனிதர்களை விட மிக மிக உயர்ந்தவன். இறைவன் ஒரு மனிதனாக முடியுமெனில், பின் அவன் இறைவனாக இருக்கவே முடியாது. ஏன்? சிந்தனை செய்யுங்களேன், இறைவனுக்கு இறப்பு கிடையாது. மனிதன் மரிக்கக்கூடியவன். இறைவன் காலத்திற்கும் வெளிக்கும் கட்டுப்பட்டவனல்லன். மனிதனோ இவற்றுக்கு கட்டுப்பட்டவன். இதையெல்லாம் விட மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. உதாரணமாக ஒரு நாய்க்கு இருக்கும் செவியேற்கும் திறன் மனிதனுக்கு இல்லை... நாய் செவியேற்கும் அத்தனை ஒலிகளும் அவன் செவியேற்க முடியாது. ஒரு ஈயோ அல்லது ஆந்தையோ காண்பவற்றை மனிதனின் கண்களால் காண இயலாது. இப்படி வரையறைகளுக்குட்பட்ட மனிதன் போல் இறைவனும் ஆவானானால் இறைவன், இறைவனுக்கேற்ற குணங்கள் அற்றவன் ஆவான். பின்????

சிலர் கூறலாம், [போன பதிவில் சகோ.ஜெயதேவதாஸ் கூறியது போல :)], இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனாகவும் இறைவனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது?? மேற்கூறிய வாக்கியத்தை சற்றே அலசுவோமே... இறைவனால் எல்லாமே முடியும் எனில், இறைவன் பொய்கூறுபவனாக இருக்க முடியுமா? அல்லது அநீதி இழைப்பவனாக இருக்க முடியுமா?? இறைவனால் எல்லாம் முடியும் எனில், இவைகளும் முடியும்.... ஆனால் இறைவன் இவ்வாறு இயலமாட்டான். காரணம்: பொய் கூறுவதும், அநீதி இழைப்பதும் இறை குணங்களுக்கு பொருந்துவதன்று. எனவே இறைவன், தன் தகுதிக்கும் தெய்வத்தன்மைக்கும் பொருந்தும் இயல்புகள் எவையோ அவற்றை மட்டுமே வெளிப்படுத்துவானேயொழிய பொருந்தா இயல்புகளுடன் பொருந்த மாட்டான். இதுவே நம் முடிவு. உங்கள் முடிவு? சிந்தித்துப் பாருங்கள் சகோஸ்...?

இறைத்தூதர்கள் கற்றுத்தந்ததுதான் என்ன?

இறைத்தூதர்கள் அனைவருடனும் அனுப்பப்பட்ட செய்தியின் நுட்பமான பொருளை ஒரே வரியில் கூறுவதானால்
1. நம்மைப் படைத்த இறைவனை மட்டும், அவனுக்கு மட்டுமே சமரப்பணம் செய், கட்டுப்படு மற்றும் வழிபடு. (படைத்தவனை வணங்கு, படைக்கப்பட்டவற்றை அல்ல). எந்த ஒரு உயிரினத்தையோ அல்லது பொருளையோ இறைவனின் அந்தஸ்துக்கு உயர்த்தாதே, இறைவனை மறுக்கவும் செய்யாதே. ஏக இறைவனான அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,

”மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.” (திருக் குர்ஆ’ன் 16:36)

2. இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடத்தில் நாம் பதிலளிப்பவர்களாக உள்ளோம். திருக் குர்ஆ’னில் அல்லாஹ் கூறுகிறான், 
“நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.” (திருக் குர்ஆ’ன் 88:25-26)
இன்னும், அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
“எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (திருக் குர்ஆ’ன் 99:7-8)




 இனி, மரணத்திற்குப் பின் வாழ்வா????
.

4 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்....

    அருமையாக விளக்கி உள்ளீர்கள்....நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ ஹாஜா. வஸ் ஸலாம். :)

      Delete
  2. \\இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனாகவும் இறைவனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது?\\ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோ. இறைவன் மனிதனைத் தன் வடிவில் படைத்துள்ளான், இறைவன் தன் உருவத்திலேயே புவிக்கு வரவும் முடியும். இது நான் சொல்லவில்லை, இந்து மதம் என்ற இல்லாத பெயரில் வழங்கப் படும் சனாதன தர்மம் கூறுகிறது. இறைவன் இருப்பதிலேயே மிகப் பெரியவன் என்பது மட்டுமல்ல, இருப்பதிலேயே மிகவும் சிறியவனும் கூட. அதெப்படி சாத்தியம்? அதை சாத்தியப் படுத்துவதால் தான் அவன் இறைவன். எல்லா முரண்பாடுகளும், அவனிடத்தில் முரண்படாமல் அமுங்கிப் போகும், அவன்தான் இறைவன். நீங்கள் இங்கே எழுதியுள்ள எல்லாமே உண்மைதான், சனாத்தன தர்மத்திற்கும் எர்ப்புடையதுதான், ஆனால், இத்தோடு முடிந்து விடவில்லை, இதற்கும் மேலும் சங்கதிகள் இருக்கின்றது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விரிவான பதில் இருக்கிறது, அவற்றை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிவுகளாக வெளியாகும், அங்கே எல்லா பின்னூட்டங்களுக்கும் சலிப்படையாமல் பதில்களும் வழங்கப் படும். வாழ்த்துக்கள் சகோ. Bye.

    ReplyDelete
  3. //என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் சகோ. இறைவன் மனிதனைத் தன் வடிவில் படைத்துள்ளான், இறைவன் தன் உருவத்திலேயே புவிக்கு வரவும் முடியும். இது நான் சொல்லவில்லை, இந்து மதம் என்ற இல்லாத பெயரில் வழங்கப் படும் சனாதன தர்மம் கூறுகிறது.//
    உங்களை சரியாகவே கணித்துக் கூறியிருக்கிறேன் சகோ. இறைவன் மனிதனை ஏன் தன் வடிவில் படைக்கவேண்டும்? அப்பொழுது இறைவனுக்கும் Reproductive organs இருக்கிறது என்று அர்த்தமா? அந்த தேவை இறைவனுக்கு ஏன் தேவை?? மதம் சொல்வதால் நம்பாதீர்கள் சகோ. யோசித்து, பகுத்தறிந்து முடிவு செய்யுங்கள். ஒரு பொருள் கிடைக்காது / செய்ய இயலாது எனும்போதுதான் alternate வழி தேட வேண்டும். படைக்கும் ஆற்றல் உள்ள இறைவன் ஏன் alternate வழிகளையும் சேர்த்தே உபயோகிக்க வேண்டும்.?? சனாதன மதத்தின் கோட்பாடுகள் இறைவனால் அருளப்பட்டது என்று எங்கேனும் ஆதாரம் உள்ளதா??

    போன பதிவில் இறைவனிடம் செயலர்கள் இருக்கின்றனர்.. அவர்கள் மீதி படைப்பு வேலைகளை, பரிபாலித்தல் வேலைகளை கவனித்துக் கொள்வார்கள், இறைவன் மற்ற வேலைகளை கவனித்துக் கொள்வார் என்றீர்கள். இதையும் ஏதேனும் மதம் சொல்கிறதா? அந்த மதத்தின் கோட்பாடுகள் இறைவனின் confessionsஆ?? எப்படி நம்புவது? இல்லை...இது மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கம் என்றால், மனிதனின் அறிவு அவனை சுற்றியிருக்கும் உலகைக் கொண்டுதான் சகோ. வளர வளர சிந்தனைகள் மாறுகின்றன. தெளிவும் வேறுபடுகின்றது. எனவே மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய கோட்பாடுகளை உலக முடிவு வரை சரியாயிருக்கும் என எண்ணுவதே தவறு.

    //இறைவன் இருப்பதிலேயே மிகப் பெரியவன் என்பது மட்டுமல்ல, இருப்பதிலேயே மிகவும் சிறியவனும் கூட. அதெப்படி சாத்தியம்? அதை சாத்தியப் படுத்துவதால் தான் அவன் இறைவன். எல்லா முரண்பாடுகளும், அவனிடத்தில் முரண்படாமல் அமுங்கிப் போகும், அவன்தான் இறைவன். நீங்கள் இங்கே எழுதியுள்ள எல்லாமே உண்மைதான், சனாத்தன தர்மத்திற்கும் எர்ப்புடையதுதான், ஆனால், இத்தோடு முடிந்து விடவில்லை, இதற்கும் மேலும் சங்கதிகள் இருக்கின்றது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விரிவான பதில் இருக்கிறது, அவற்றை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிவுகளாக வெளியாகும், அங்கே எல்லா பின்னூட்டங்களுக்கும் சலிப்படையாமல் பதில்களும் வழங்கப் படும்.//
    கேள்விகளை வரவேற்கிறேன் சகோ. The cat has to come out of the bag. Right?? :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...