குழந்தைகள் பத்திரம்!! (பகுதி இரண்டு)

குழந்தைவதை செய்பவர்கள்

அ) யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள் ???

1.) குழந்தைவதை கொடுமைக்கு ஆளானவர்கள்
சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட வடுக்களை அழிக்க இயலாமலே வயதான பின் மற்ற குழந்தைகளை இப்படி பலாத்காரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றொரு சிந்தனை நம்மிடையே பொதுவாய் இருந்தாலும், நடந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளின்படி, அது உண்மையில்லை. சில சம்பவங்களில் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எல்லா சம்பவங்களிலும் அது மெய்யல்ல. பல நேரங்களில் குழந்தைவதை செய்பவர்களுக்கு வேறெந்த காரணமும் தேவையில்ல, அவர்கள், அவர்களே. விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சியை படிக்கவும்.

2) குடும்பமும், சினேகங்களும்
ஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா சம்பவங்களிலும் குழந்தைவதை செய்பவன் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது அந்த குடும்பத்திற்கு மிக நெருங்கிய வெளியாளாகவோதான் இருக்கிறான். கிட்டத்தட்ட நான் (மூல ஆசிரியர்)  சந்தித்த, வஞ்சகத்திற்கு ஆளான பல பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே (உதா: ஒன்று விட்ட அண்ணன் / மாமா / சித்தப்பா / இன்னும் சில சம்பவங்களில் சொந்த தாத்தாக்களே... ந'ஊதுபில்லாஹ்!!)

குழந்தைவதை செய்பவனுக்கு வேறெங்கும் வெளியிலிருந்து இரை தேடுவதைவிட சொந்தத்திலேயே இரை தேடுவது சுலபமானது. ஏனெனில் வருஷங்களாக அவன் மீது குடும்பத்தாரின் நம்பிக்கை இருக்கிறது, எனவே அவர்களின் மீது சந்தேகம் எழுவதோ, செய்யும்போது பிடிபடும் சந்தர்ப்பமோ அரிதிலும் அரிது. இன்னும் அவர்களின் இரையான சிறுவன் / சிறுமியை என்நேரமும் அடையவும் இயலும். என்னிடம்(மூல ஆசிரியர்)  இவ்வாறான கொடிய கதைகளைக் கூறிய பலர், அவர்களின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான, அதிகமாய் வருகை புரியும் ஆட்களாலேயே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிள்ளைகள் அடிக்கடி வதைக்கு ஆளானதும், அதை சொல்லிட துணிந்தபோதும் யாரும் நம்பாமல் போனதும் இத்தகையவர்கள் சம்பாதித்து வைத்துள்ள நம்பிக்கை ஓட்டுக்களாலேயே...!!

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைவதை செய்பவன் எந்த குழந்தையை தேர்ந்தெடுக்கிறானோ அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடுவில் ஒரு திரை / ஒரு தடை இருக்கிறதா...அவர்கள் வெளிப்படையாக பேசவோ, பயமற்ற அன்பு நிரம்பிய உணர்வுகளோடு இருக்கிறார்களா என்பதையும் கவனித்து வைக்கிறான். (இந்த விஷயத்தை ‍ பெற்றோர் மற்றும் குழந்தை உறவினைப் பற்றி நேரமிருப்பின் இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்)


ஆ) எங்கிருந்து, எப்படி குழந்தைவதை செய்ய துணிகிறார்கள்??

1. தகுந்த நேரமும் இடமும்.
ஆம். அவர்களுக்கு நேரமோ, இடமோ தனியாக தேவையில்லை என்பதே மெய். கீழ் வரும் சம்பவத்தை பாருங்கள்:

மோனாவிற்கு ஆறு வயதாகும்போது அச்சம்பவம் நடந்தது. அவளுடைய தாய்மாமனாலேயே பலாத்காரத்திற்கு ஆளானாள். அதுவும் எங்கே? காரில்!! அந்த கொடியவன் மோனாவின் தாயை விட பல வயது பெரியவன். அதனாலேயே மிகவும் மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தான். அந்த நாளில் அவன் மோனாவையும் அவளின் தாயையும் ஷாப்பிங்குக்காக காரில் அழைத்துச் சென்றான். தாயை ஷாப்பிங் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டில் மோனாவையும் தன்னுடன் வைத்துக் கொண்டான். கார் சீட்டில் பின்னால் அமர்ந்திருந்த மோனாவை முன் சீட்டிற்கு வரச் சொன்னான். அந்தக் குழந்தையின் அறிவிற்கு ஏன் என்ற கேள்வி கூட எழாத வயது. அவன் மோனாவின் கழுத்திலிருந்து ஆரம்பித்து வருடிக்கொண்டே வந்தான், அதன் கீழ், அதன் கீழ் என்றவாறே...மோனாவிற்கு சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் செய்வது உறைக்க ஆரம்பித்தது. என்னவென்று புரிய வில்லையென்றாலும் மனதில் பயப்பட ஆரம்பித்த மோனா நிறுத்திவிடுமாறு எவ்வளவு மன்றாடியும் அவன் நிறுத்தவில்லை, அவனின் தாகம் அடங்கும்வரை. கிடைத்த சந்தர்ப்பத்தினை உபயோகித்து அழுதபடியே மோனா அவளின் தாயை நாடி ஷாப்பிங் கடையினுள் ஓட ஆரம்பித்தாள்...

இத்தகைய பாவிகள் நேரமோ இடமோ எதையும் கவனத்தில் கொள்வதில்லை. நாம் எதிர்பார்க்காத சமயத்தில்தான் தாக்க முற்படுகின்றனர். சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையும் தருணங்களில் பாதிக்கப்பட்டவரை நம்ப ஒரு ஆத்மாவும் இருப்பதில்லை.

"உன்னை காரில் விட்டுவிட்டு வந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை...அதற்குள் நீ சொல்லும் செயல்கள் எப்படி, அதுவும் பப்ளிக் பார்க்கிங் லாட்டில் நடக்கும்? என் அண்ணனைப் பற்றி ஏதுவும் சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள், உனக்கு தேவை வெறும் அட்டென்ஷன்தான், ச்சே..."

தாயிடம் மோனா தேடிய பாதுகாப்பு இதுவா??

2) துரிதமானதாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக:
முன்னரே கூறியதுபோல் குழந்தைவதை செய்யும் மிருகங்களுக்கு அதற்கென தனி நேரமோ, இடமோ தேவையில்லை. பல சமயங்களில் பண்பாட்டை ஒட்டி நாம் செய்யும் / அனுமதிக்கும் சில காரியங்களே இதற்கு தீனி போட ஏதுவாகின்றன.

மோனாவின் தாய்மாமனுக்கு அவர்களின் குல வழக்கப்படி யாரேனும் சந்தித்துக் கொண்டால் நெற்றியில் முத்தமிடுவது சாதகமாகிப்போனது. மோனாவின் நெற்றியில் அவ்வாறே ஆரம்பிக்கும் முத்தம் பல சமயங்களில் அதோடு நிற்பதில்லை...யா அல்லாஹ். இதை தாயிடம் சொன்னாலும் அவள் சிரித்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவாள் என்பது மோனாவிற்கும் அதைவிட அதிகமாக அந்த மிருகத்திற்கும் தெரிந்தே இருந்தது.

அடுத்த பகுதியில்
1. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தாக்கங்கள் நிறைந்த வாழ்வும்



மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்...அதுவரை...குழந்தைகள் பத்திரம்!!!




.

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)

 
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள்.  அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.

  • ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
  • இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
  • மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.

இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.


கட்டுரை விதிகள்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களுக்கான எச்சரிக்கை:
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
==========குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)============

மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென.  காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.

குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.

இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.

ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!

இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.

நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.

அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?

இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,

1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?

என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.

குழந்தைகளின் பருவம் எங்கே போனது?

நன்றி : உணர்வலைகள்

இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர்றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்ப‌டியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.

குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது?

இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது?

இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:

1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.

2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்ல‌து அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.

இந்த பதிவின் நோக்கம்,

1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்?

2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண‌ மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது?

3. மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?

பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

உண்மை வருத்தம்

Thanks to Sathish Acharya..!

வந்துள்ள தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகமே ஒழிய இந்தியன் என்று மார்தட்டும் எந்த குடிமகனுக்கும் சாதகமாய் இல்லை என்பது உலகறிந்த செய்தி. ஒரு தடவை மீண்டும் என் தாய்த்திருநாட்டைப்பற்றி சிறு வயதில் என்னவெல்லாம் நினைதிருந்தேனோ அதெல்லாம் கனவு என்று ஆணித்தரமாய் என் நினைப்பினை தவிடு பொடியாக்கியுள்ளது!:)



.