கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??
இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம். இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!
இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???
நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.